Tuesday, November 30, 2010

அ. முத்துகிருஷ்ணனின் பயணம் - ஒளியுடன் வழி


சமீபத்தில் அ.முத்துகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பு நூல் ஒன்று வந்தது. அருந்ததி ராயின் கட்டுரைகளை மொழிபெயர்த்து எழுதியது.அதன் தலைப்பு தோழர்களுடன் ஒரு பயணம். தூரங்களில் அல்லல்படும் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் அறிவாளர்கள் மத்தியில் முத்துகிருஷ்ணன் தீவிரமான ஆளுமை. தற்போது ஆசியாவிலிருந்து காசாவிற்குச் செல்லும் ஆசிய கண்டத்தின் அறிவாளர்கள் குழுவில் தமிழ் எழுத்தாளர் அ.மு. பங்கேற்கின்றார். டிச.2ந்தேதி டில்லியிலிருந்து அவர் பயணம் தொடர்கின்றது. தரை வழியாக அவர் பாகித்தான். ஈரான், துருக்கி, சிரியா, லெபனன், ஜோர்டன், எகிப்து என பல நாடுகளைக் கடந்து அவர்கள் காசாவை அடைகின்றனர்.

துன்பப்படும் காசா மக்களுக்காகவும் பாலத்தீனத்தின் நிலையை உலகுக்கு உணர்த்தவும் இந்தப் பயணம். இது முக்கியமானது. வழியெங்கும் உள்ள பல்வேறு நாடுகளில் அம்மக்களுக்காக நிதித்திரட்டும் நிகழ்ச்சிகள் நிவாரணப் பொருட்களைச் சேகரித்தல் எனவும் அவர்கள் நிகழ்ச்சியை வடிவமைத்திருக்கின்றார்கள். மிகவும் போற்றுதலுகுரியது இது. இத்தகைய அறிவாளர்கள் ஒருமுறை இலங்கையை நோக்கியும் செல்லலாம். இந்தியா முழுமையும் உள்ள சேரிகளுக்கும் செல்லலாம் சாதிக் கொடுமையின் தன்மையை உலகுக்கு உணார்த்தும் இத்தகைய பயணத்தை இந்தியாவில் இருக்கின்ற அறிவாளர்கள் இந்தியாவிற்குள்ளாவது நடத்தினார்கள் என்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அதற்கான முன்னோடிப் பயணமாக இதை நாம் முன்வைக்கலாம். தோழர் முத்துக் கிருஷ்ணன் அதற்கான அனுபவச் சேகரிப்பில் இந்தப் பயணத்தை அவர் தொடர வேண்டும். அவருடைய இந்தக் கனவு, மாந்தநேயப் பணி தமிழ் எழுத்தாளர்களுக்கு கிடைத்த வெகுமானம்.தோழர்களுடன் ஒரு பயணத்தை மேர்கொண்ட முத்துகிருஷ்ணனை வாழ்த்துகிறோம்.

காசா மக்களுக்கு உதவ நினைப்பவர்கள் அ.மு. வைத்தொடர்புகொள்ள வேண்டும். அவருடைய வேண்டுகோளையும் இத்துடன் இணைத்துள்ளோம்



பாலஸ்தீன மக்கள் கடந்த அறுபது ஆண்டுகளாக அனுபவித்து வரும் துயரவாழ்வு இன்று உலக மக்கள் நன்கு அறிந்த ஒரு விஷயமே. நம் அவசரமான வாழ்வில் அவர்களின் கதையை செவி மடுத்து கேட்க அவகாசம் இல்லாத அளவுக்கு உலகம் அதிவேகமாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. தினந்தோறும் அங்கு பெரும் குண்டு வெடிப்புகளின் ஓசையுடன் தான் அவர்களின் காலை பொழுது விடிகிறது.

கடந்த அறுபது ஆண்டுகளில் தங்களின் சொந்த நிலத்திலேயே அகதிகளாக அலைகழிக்கப்படுவது மட்டுமின்றி மெல்ல மெல்ல தங்களின் நிலத்தையும் பறிகொடுத்து சிறு கீற்றான நிலப்பகுதிகளுக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். சிறு காலனிகளாக குடியேறி மெல்ல மெல்ல பாலஸ்தீன மக்களின் நிலத்தை அபகரித்து இஸ்ரேல் உலக வரைபடத்தில் தன் இருப்பை ஏற்படுத்தி பின்னர் நிலைப்படுத்திக் கொண்டது. 1950கள் முதல் 2010 வரையிலான உலக வரைபடங்களை சேகரித்து அதனை ஒப்பிட்டு பார்த்தால் இந்த உண்மை யாவருக்கும் விளங்கும்.

15 லட்சம் மக்கள் வாழும் காசா பகுதி இருப்பதிலேயே மிகவும் துயர மேகங்கள் சூழ்ந்த பகுதி. இந்த காசா மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் பாலஸ்தீனத்தின் நிலையை உலகிற்கு எடுத்துரைக்கவும் ஒரு பயணத்தை மேற்கொள்வது என ஆசியாவில் உள்ள முற்போக்காளர்கள் சிலர் தீர்மானித்த அது இப்பொழுது செயல் வடிவம் பெற்றுள்ளது..

எகிப்தின் அல்-அரீஷ் துறைமுகத்திலிருந்து கப்பலில் நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு காசாவை சென்றடைந்து பயணக் குழு 2011 புத்தாண்டை அந்த மக்களுடன் கொண்டாட இருக்கிறது.

பாலஸ்தீன நிவாரண நிதிக்காக மக்களிடம் நன்கொடைகளை திரட்டி வருகிறோம். இந்த நிதி துயருற்ற மக்களுக்கானது, மருந்துகள், கட்டுமான பொருட்கள் என அவர்களின் அன்றாடங்களை சீர்படுத்தும் பல பொருட்களை வாங்குவதற்கு இந்த நிதி செலவிடப்படும்.

நிதி அளிக்க விருப்பம் உள்ளவர்கள்



A.MUTHUKRISHNAN +919443477353 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது பணத்தை A.MUTHUKRISHNAN State Bank of India SB A/C no 30322814376 வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தலாம். அல்லது A.MUTHUKRISHNAN பெயரில் காசோலை எடுத்து அனுப்பலாம்.



துயருற்ற மக்கள் மீது நிஜமான அக்கறையும் மனித அவலங்கள் குறித்து மனசாட்சியும் விழிப்புணர்வும் உள்ள அனைவரும் தங்களால் ஆன நிதியை அளிக்க வேண்டுகிறேன்



அ.முத்துகிருஷ்ணன்

Friday, October 15, 2010

வழிதல்


நீரற்ற பெருவெளியெங்கும்
அலைந்த கால்கள்
திணறும் நடுநேரத்தின் வெப்பத்தில்
திளைக்கும் உடல்கள்
களைத்திருந்தன
கால்களின் வழியேறிய வெம்மையின்
திறவுகோல்களை சுழற்றி வீசிய
விரல் பிடித்து அனுப்புகின்றேன்
உன்னை.

யாழன் ஆதி: தண்டனை

யாழன் ஆதி: தண்டனை

Wednesday, October 6, 2010

தண்டனை

மழையில் நனையாததைக்
கண்டித்து
தலையில் குட்டியது
மரத்திலிருந்த துளியொன்று

Wednesday, September 15, 2010

நூலாறு: வறண்ட நிலத்தில் பாய்ந்த வெள்ளம்





வேலூர் வாசகர் பேரவையும் ஆழி அறக்கட்டளையும் வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் உதவியோடு வேலூரில் புத்தகத் திருவிழாவை நடத்தின. வேலூர் மாவட்ட மக்களுக்கு இது மிகப்பெரிய பரிசாகத்தான் இருந்தது.

கலை இலக்கியத்தைப் பொருத்தவரை வேலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டம் என அறிவித்துவிடலாம். திருநெல்வேலி மாவட்டத்தைப் பற்றிப் பேசும்போது எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் கலைஞர்களை லாரியில் தான் ஏற்றிவர வேண்டும் என்பார். ஆனால் வேலூர் மாவட்ட கலைஞர்களை ஆட்டோவிலேயே ஏற்றிக்கொண்டு சென்றுவிடலாம். அவ்வளவு குறைவானர்கள்தான் எழுத்துலகிலும் திரையுலகிலும் இருக்கின்றனர். இதற்குக் காரணத்தை மிக எளிதாக நாம் அலசிவிடலாம். வேலூர் மாவட்டம் அரசியல் விழிப்புணர்வு பெற்ற மாவட்டம். அது மட்டுமல்ல தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம். இங்கு வாழ்வியல் என்பது தொழிற்சார்ந்த பண்பாட்டு முறையால் பொருளீட்டி அதன்மூலம் வசதிகளைப் பெருக்கிக்கொள்வது என்பதுதான். எனவேதான் ஆக்கவாளிகளுக்கு ஊக்கம் தரக்கூடிய வாழ்வியல் இல்லாததுதான் அதற்குக் காரணம்.

எனவே புத்தக வாசிப்பு என்பது மிகவும் குறைவு. தற்காலங்களில்தான் நவீன இலக்கியம் சார்ந்த படைப்பாளிகள் வேலூர் மாவட்டத்தில் தோன்றியுள்ளனர். அவர்களின் ஆக்கங்களும் பரவலாக அறியப்படுகின்றன. அதற்கு முன் இலக்கிய ஆளுமைகள் இல்லையா என்று தோன்றுகின்றது உங்களுக்கு. இருந்தார்கள் வானம்பாடி கவிஞர்களின் முக்கிய கவியாகச் திகழும் கவிக்கோ அப்துல்ரகுமான், கவிமாமணி அப்துல்காதர் ஆகியோரும் அவர்களைப் பற்றித் தொடர்ந்த என்னைப் போன்றவர்களும் இருந்தார்கள். ஆனால் நடந்த தவறு என்னவென்றால் இவர்கள் இருவரும் திராவிட இயக்க தீவிர பிரச்சாரகர்களாக இருந்தனர். அப்துல் ரகுமான் எழுதினார் என்றால் அப்துல்காதர் பேசினார். மேடைகளிலும் வகுப்பறைகளிலும் இவர்கள் தீவிர இலக்கியம் பேசியதைவிட அரசியல் பேசியதே அதிகம். ஆனால் இருவருமே தமிழ் இலக்கியத்திலும் ஆக்கத்தன்மையிலும் அற்புதமானவர்கள். அப்துல்காதர் அவர்கள் பேசுவதில் செலுத்திய அக்கறையையும் கடத்திய நேரத்தையும் எழுதுவதில் செலுத்தியிருந்தால் தமிழுக்கு இன்னும் வளம் சேர்ந்திருக்கும். அவருடைய படிமங்கள் உவமைகள் விவரிக்க முடியாத உணர்வுகளைத் தரக் கூடியன.

இதனால் நிகழ்ந்தது என்னவென்றால் வேலூர் மாவட்டத்தில் பட்டிமன்ற பேச்சாளர்கள் அதிகம் வளர்ந்தனர். கோவில் திருவிழாக்கள் போன்ற பொது நிகழ்வுகளில் பட்டி மன்றம் கண்டிப்பாக நிகழ்ச்சி நிரலில் இருந்தது. இந்த இருவரின் ஆக்கிரமிப்பால் இக்பால் என்னும் ஒரு நுட்பமானக் கவிஞன் இலக்கிய உலகில் அறியப்படமுடியாமலேயே ஆகிவிட்டது எனவே தீவிர இலக்கியத்திற்கு எதுவும் வேலூர் மாவட்டத்தில் இல்லாமல் போனது.

நவீன எழுத்தின் அறிமுகம் என்பது வேலூர் மாவட்டத்திற்கு வாணியம்பாடியில் நிகழ்த்தப்பட்டது. அதனால் நிறைய ஆக்கவாளிகள் கிடைத்தார்கள் நேசன், குலசேகரன், நீல்கண்ட், போன்ற கவிஞர்கள் கிடைத்தார்கள். இன்னொரு பக்கம் தீவிர தமிழ்த்தேசியம் பேசக்கூடியவர்கள் ஈழவிடுதலையை முன்னிட்டு எழுதியும் நிகழ்ச்சிகளை நடத்தியும் வந்தனர். அவர்களும் எளிமையான அதே நேரத்தில் அரசியல் முழக்கங்களை முன்வைத்து எழுதினர். இவர்களே பின்பு ஹைக்கூ போன்ற வடிவங்களில் கவிதைகள் எழுதிவந்தனர்.

தலித்திய எழுச்சி ஏற்பட்டபிறகு அழகியபெரியவன்,சுகிர்தராணி, யாழன் ஆதி போன்றோர் எழுதவந்தனர். இதில் அழகியபெரியவனின் பங்கை குறிப்பிட்டே ஆகவேண்டும் அவர் எழுதிய தீட்டு என்னும் கதை முதன்முதலில் வேலூரை கதைக்களமாகக் கொண்டு எழுதப்பட்டது. கொஞ்சம் விட்டிருந்தால் மும்பையின் பாலியல் தொழில் நடக்கும் இடத்தைப் போல மாறியிருக்க வாய்ப்பிருந்த சூரியகுளம் என்னும் பகுதியும் அங்கு வாழ்ந்த அடித்தட்டு மக்களின் வாழ்வும் அக்கதையில் பேசப்பட்டு அழகியபெரியவன் சிறந்த கலைஞனாக இலக்கிய உலகில் அறிமுகம் ஆனார். அதற்குப் பிறகு அழகியபெரியவன் எழுதிய அத்தனைக் கதைகளுமே வேலூர் மாவட்டத்தைக் குறிப்பாக அவர் வாழ்கின்ற பேர்ணாம்பட்டுப் பகுதியை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டன. தமிழ் இலக்கியத்தில் வேலூர் மாவட்ட இடங்களின் பெயர்கள் இடம் பெற்றதற்கு அழகியபெரியவன் மிக முக்கியமானவராக இருக்கின்றார். இந்த நேரத்தில் ஸ்ரீநேசனின் காலத்தின்முன் ஒரு செடி என்னும் கவிதைத் தொகுப்பும் இன்னும் சிலரின் ஆக்கங்களும் வெளிவருகின்றன. குலசேகரனின் ஆயிரம் காலங்களுக்குப் பிறகு என்னும் தொகுப்பும் இப்போது வெளிவந்துள்ளது.

இதற்கு அப்படியே அடுத்த இலக்கில் சுகிர்தராணி. அவருடைய கவிதைகள் உலகப்பெண்ணியத்தைப் பேசக் கூடியதாய் இருந்தன. சுகிர்தராணியின் கவிதைகள் இலக்கிய தளத்திலும் பெண்ணிய தளத்திலும் புதிய அதிர்வுகளையும் பெண்ணிய விடுதலையினையும் சாத்தியப்படுத்தின என்பது சரியானதுதான். சுகிர்தராணியின் கவிதைகள் அவருக்கு உலகப்புகழைப்பெற்று தந்திருக்கின்றன. அவருடைய மூன்று தொகுப்புகள் கைப்பற்றி என் கனவு கேள், இரவு மிருகம், அவளை மொழிப்பெயர்த்தல் என்பன. இதில் இரவுமிருகம் அய்ந்தாவது பதிப்பைக் கண்டிருக்கின்றது. யாழன் ஆதியின் இசையுதிர்காலம். செவிப்பறை, நெடுந்தீ, கஸ்பா ஆகிய தொகுப்புகளும் வெளிவந்திருந்தன.



இதற்கிடையில் அறிவொளி இயக்கத்தின் தாக்கத்தால் அதில் பணியாற்றியவர்கள் பண்பாட்டுரீதியாக கலைத்துறைகளில் பணியாற்றும் போது கிடைத்த அனுபவத்தை வைத்துக்கொண்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைத்து இலக்கியப் பணிகள் ஆற்றினர். திருவண்ணாமலை கலை இரவின் தாக்கத்தில் இங்கும் பல கலை இரவுகள் நடத்தப்பட்டன. இதன் மூலமும் தீவிர இலக்கிய ஆளுமைகள் உருவாகவில்லை. மாறாக குரலிசைக் கலைஞர்கள், தப்பாட்டக் கலைஞர்கள், பெண்கலைஞர்கள் உருவாகினர். இது ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றம் என்றே கூறலாம். மார்க்சியம் அவர்களின் மூலப்பொருளாகி இருந்தது. இதற்கு முதல் காரணமாக கவிஞர் முகில் அவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அவரின் குரல் வளமும் மேடையை அவதானிக்கும் தன்மையும் பலரைக் கலைஞர்களாக மாற்றியது. கூச்சத்தை விட்டுவிட்டு பாடவும் ஆடவும் நடிக்கவும் முன்வந்தனர் மக்கள். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வேலூர் மாவட்ட கவிஞராக அறியப்பட்டு தொகுப்புகளைத் தந்தவர் முல்லைவாசன். இவர் குடியாத்தத்தைச் சார்ந்தவர்.

முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள நாகூர் ரூமியும் வேலூர் மாவட்டத்தில்தான் இருக்கின்றார். அவருடைய நூல்கள். மொழிபெயர்ப்புகள் தமிழிலக்கிய உலகத்திற்கு அதிக அறிமுகமானவை. குட்டியாப்பா என்ற அவரின் குறுநாவல் வேலூர் மாவட்ட களங்களைக் காட்சிப்படுத்தியுள்ளது. அவரின் பிறகதைகளும் அப்படியே.

ஆற்காடு வாலாஜா பகுதிகளில் இயங்கிக்கொண்டிருக்கும் கவிப்பித்தன் கவிதை நூலொன்றையும் சிறுகதை நூலொன்றையும் வெளியிட்டுள்ளார். சோலையார் பேட்டையில் வசிக்கும் சோலை இசைக்குயில் ஹைக்கூத் துறையில் பல நூல்களை எழுதிக் கொண்டிருக்கின்றார். இவர்கள் தவிர வேலூரில் ம.நாரயணன், இலக்குமிபதி போன்றோர்களின் நூல்கள் பெரிய அளவில் வெளி வந்திருக்கின்றன. பாரதிதாசனின் பரம்பரை என்று சொல்லக்கூடிய வகைமையில் இவர்களை நாம் அடையாளப்படுத்தலாம். உவமைக்கவிஞர் சுரதா போன்றோருடன் இவர்களுக்கு நல்ல தொடர்பும் உறவும் இருந்திருகின்றது. இப்படி ஓர் இலக்கிய வரைவியலை வேலூர் மாவட்டத்தில் நம்மால் உருவாக்க இயலும்.

எனினும் இப்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தகத்திருவிழா வேலூர் மாவட்ட மக்களுக்கு மட்டுமல்ல அங்கிருக்கும் ஆக்கவாளிகளுக்கும் ஒரு உத்வேகத்தையும் உணர்ச்சியையும் கொடுத்துள்ளது என்பது உண்மை. மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட செயல்பாடுகளால் மிகக் குறைந்த காலத்தில் கடைகள் அமைக்கப்பட்டன. பெரும்பாலும் அனைத்துப் பள்ளிக்குழந்தைகளும் புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டனர். அவர்களுக்குப் பேருந்து வசதி செய்துகொடுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இலக்கிய நிகழ்ச்சிகளை அழகியபெரியவன் ஒருங்கிணைத்திருந்தார். தமிழகத்தின் முக்கிய ஆக்கவாளிகள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர். மாவட்ட ஆக்கவாளிகளுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. புத்தகத்திருவிழாவிற்கு அழகியபெரியவனின் பங்களிப்பு முதன்மையானதாக இருந்தது. ஆழி செந்தில்நாதன் இன்னொரு திசையில் இந்தப் புத்தகத் திருவிழா வெற்றியடைவதற்குக் காரணமாக இருந்தார். கடை வைத்திருப்பவர்களுக்கு வேண்டியவற்றைத் தருவது. அவர்களின் தேவைகளைச் சரியாகத் தீர்த்துவைப்பது. இலக்கிய அரங்குகளில் பங்கேற்பது என அந்த அமைப்பு முழுவதும் அவருடைய கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

இதற்கெல்லாம் எல்லாவகையிலும் உறுதுணையாக இருந்த மாவட்ட ஆட்சியர் செ. ராஜேந்திரன் அவர்களும் பாராட்டுக்குரியவர். அவருடைய அதிகாரிகளும் சிறந்த பணிகளை ஆற்றினார்கள்.

இந்த ஆண்டு தொடங்கப்பட்ட வேலூர் புத்தகத்திருவிழா நூலாறு என்னும் பெயரிலேயே இனிவரும் ஆண்டுகளிலும் தொடரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

Monday, August 23, 2010

வனமழை

வனத்தின் கனியாகி சிவந்த அவள் உதடுகளில்
சொற்கள் பிரசவமாகி விழுகையில்
மழைத்துளிகளாகின்றன
வனம் பசுமையடைகின்றது
உயிர் ஊறும் வேரில் வாசம் கிளர்ந்து
இறுகுகின்றது வனம்
அடர்த்தியுடன் புதராகி அவள் மேலும் சிரிக்கின்றாள்
வானம் சிவக்கின்றது
கருத்த மேகங்கள் மேலும் மழையைத்தர
கானாறு புறப்படுகின்றது
சருகுகள் நிறந்த கானின் மேனி இப்போது
இசைக்கருவியாகி மீட்டுகின்றது
அவளின் சொற்களை பாடல்களாய்
இப்போது காட்டில் குயில்கள் தோன்றுகின்றன
செவிகள் முளைத்த மரங்கள்
இன்னும் தழைக்கின்றன
மேகங்கள் மரங்களில் குடியேறுகின்றன
இப்போது வேரில் மாரி வர
வனம் மழையானது

Thursday, July 22, 2010

நீர் உரிமை

சந்திரபாபு நாயுடுவின் போராட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தும் தமிழர்கள் வெறுமனே வாளாதிருக்கின்றார்கள். சந்திரபாபு நாயுடு சமீபத்தில் மகாராட்டிர போலீசால் குண்டுகட்டாகத் தூக்கி வரப்பட்டு தனிவிமானத்தில் ஐதராபாத் விமானநிலையத்தில் தன் சகாக்களோடு வந்து கொட்டப்பட்டார். அவர் என்ன இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கா சென்றார். அவருடைய அண்டை மாநிலமான மகாராட்டிராவுக்குத்தான் சென்றார். ஒரு சுற்றுலாப் பயணியாக ஜாலியாக ஒரு டூர் அடித்தால் பரவாயில்லை. ஆனால் மகாராட்டிர மாநிலத்தில் நாண்டெட் மாவட்டத்தில் பாப்லி என்னும் இடத்தில் கோதாவரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணைக்கட்டை தடுக்க வேண்டி அதைப் பார்க்க போயிருக்கின்றார். மகாராட்டிர அரசு இதற்கு தடை விதித்திருக்கின்றது. அதை மீறிதான் அந்தப்போராட்டத்தை மாவீரர் சந்திரபாபு நடத்தியிருக்கின்றார். ஒரே ஒரு காரணம் தான் ஆந்திராவுக்கு வரும் தண்ணீரை அந்த அணை தடுக்கின்றது என்பதுதான் அது. நியாயம் தானே இந்தப் போராட்டம். ஆந்திராவின் முன்னாள் முதல்வர் பிற மாநிலத்தில் அத்துமீறி நுழையலாமா?

ஆற்றங்கரையில் வாழக்கூடியவர்களின் உரிமை அது. அவர்களுக்கான நீர் உரிமை. அதை அப்படியே தமிழ்நாட்டுக்குப் பொருத்துங்கள் பார்க்கலாம். கர்நாடகாவிலிருந்து வரும் காவிரி தமிழர்களுக்கு வாய்க்காமலே போய்விட்டது. மிகை நீராக வரும் ஒகேனக்கல் நீரை தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்குத்தரலாம் என்றால் கர்நாடகக் காரர்கள் தமிழ்நாட்டில் நுழைக்கின்றார்கள். பாலாறும் அங்கிருந்துதான் தொடங்குகின்றது. தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு முன்பு ஆந்திராவின் வழியாகத்தான் வருகின்றது. ஆந்திராவில் அது 30 கிமீ தூரத்திற்குத்தான் பாய்கின்றது.

ஆனால் இந்தக் கூத்தை பாருங்கள். 30கிமீ நீளத்திற்கு 32 தடுப்பணைகள் கட்டப்பட்டு ஒரு சொட்டு தண்ணீர்கூட தமிழகத்திற்கு வருவதில்லை. இப்போது கணேஷ்புரம் என்னும் இடத்தில் ஒரு அணை கட்டப்பட்டு வருகின்றது. இதெல்லாம் யாரால் தெரியுமா? மாவீரர் சந்திரபாபு ஆட்சியால்தான். அதுவும் அவரின் சொந்த தொகுதியான குப்பம் தொகுதியில்தான். சரியா என்று கேட்டால் ‘என் தொகுதி மக்கள் நலந்தான் எனக்கு முக்கியம்’ என்று கூறினார் சந்திரபாபு. ஆனால் இப்போது அவர் போராடுகின்ற அணை மகாராட்டிர மாநில முதல் அமைச்சரின் தொகுதியில்தான் இடம்பெற்றிருக்கின்றது.

கீழ்ப்பாலாறு பகுதியில் இருக்கும் வேலூர் மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் வறண்டுகொண்டிருக்கின்றன. அதற்குக் காரணம் சந்திரபாபு கட்டிய தடுப்பணைகள்.

இதயெல்லாம் கேட்க தமிழகத்தலைவர்கள் போவார்களா? தமிழீழப் பிரச்சினையே இவர்களிடம் படாதபாடு பட்டது. தம்ழிநாட்டு ஓட்டாளிகளின் பிரச்சினையிக் கூட அவர்களால் தங்கள் சுயநலத்திற்காகத்தான் பார்ப்பார்கள்.
தமிழன் என்றால் என்ன அடிமை என்றுதானே அர்த்தம்.