Saturday, September 14, 2024

 மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பின் அரசியல்





பண்டைய இந்தியாவில் போதைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்ட காலம் மிகவும் பழமையானது. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் மது இல்லை. ஆனால்  வரலாற்றில் வேத காலத்தில் மது உருவாகியிருந்தது என்பதற்கு சோம பானம் சுரா பானங்கள் சாட்சியங்களாய் இருக்கின்றன. வேத காலத்தில் மது எதிர்ப்பு இருக்கவில்லை. ஆனால் அதற்குப் பிறகு மது எதிர்ப்பு  உருவாகியிருக்கிறது. அது புத்தரின் காலம்.

எப்படி வேத மதத்தின் அஸ்வமேதயாகம் ஒழிக்கப்படவேண்டும் என்று புத்தர் விலங்குகளைப் பாதுகாக்க பணியாற்றினாரோ அதைப் போலத்தன் விலங்குகள்போல் மக்களை ஆக்கும் மதுவினையும் ஒழிக்க அவர் போதித்தார். அவர் போதித்த ஐந்து ஒழுக்க நெறிகளில் மிகவும் முக்கியமான ஒன்று

“மதியினை மயக்கிடும் மதுவினை குடிக்க மாட்டேன் என உறுதி ஏற்கிறென்” என்பது. இது பஞ்சசீலத்தில் இருக்கிறது. சீலம் என்றால் ஒழுக்கம் என்று பொருள். எனவே இதை ஒரு போதனையாக இல்லாமல் தினந்தோறும் நாம் பயன்படுத்தும் சொற்றொடர்களாக இருக்க வேண்டும் என்று புத்தர் கருதினார். அதனால்தான் இதை எந்த நிகழ்விலும் சொல்லக்கூடிய உறுதிமொழியாக வைத்தார்.

இதைச் சொல்லுகிற ஒருவர்  அவர் மதுக்குடிப்பவராக இருப்பின்  அவர் மனச்சாட்சியை அது உலுக்கும். இந்த உறுதிமொழியை நாம் அனைவருக்கும் தெரிகிறமாதிரி உரத்துக் கூறுகிறோம் ஆனால் மது அருந்துகிறோமே என அவர்களுக்கு மனத்தில் தோன்றும். இந்த உளநிலையை உருவாக்கினால் போதும் அவர் மதுவருந்தும் அடிமைத்தனத்திலிருந்து வெளியேறுவார். மது அருந்தாதவர்கள் இந்த உறுதிமொழியை தினந்தோறும் கூறுவார்களேயானால் அவர்களின் மனசாட்சியும் மதுவருந்தும் வாய்ப்பு நேருகையில் மாறலாம். மதுவினை அருந்தாமல் அவர்கள் விலகலாம்.

ஆக, ஒரு சமூகத்தைத் தீமையிலிருந்து விடுவிப்பது என்பது தான் புத்தரின் மிகப்பெரிய புரட்சி. அதைத்தான் அவர் துன்பம் என்று கூறினார். துன்பமே மனித வாழ்வின் இருப்பாக இருந்துவிடக்கூடாது என்று அவர் கருதினார். மகிழ்ச்சி நிறைந்த சமூகம் அமைப்பக்கப்பட வேண்டும் என்பது அவரின் போதனை. அப்படியானல் துன்பங்களிலிருந்து விடுபடுவது, அதற்கான வழிகள் இவைதான் என்று அவரால் மிகத்தீவிரமாக இயங்க முடிந்தது. அது இந்தியா மட்டுமல்ல உலகமெல்லாம் பரவியது. இன்றும் பரவுகிறது.

துன்பங்களுக்கானக் காரணங்களைக் கண்டறிவது அவற்றை நீக்குவது என்பது புத்தரின் வழி. இதுதான் உலகமெங்கும் இருக்கிற அறிவியல் பூர்வமான வழி. துன்பங்களை போன ஜென்மங்களோடு தொடர்பு படுத்தலாகாது.

இன்றையச் சமூக துன்பமாக மது இருக்கிறது. போதைப் பொருள்கள் இருக்கின்றன. பள்ளி மாணவர்கள் தொடங்கி வயதானவர்கள் வரை மதுவையும் போதைப் பொருள்களையும் பயன்படுத்துகின்றனர். படித்த இளைஞர்கள், படிப்பை நிறுத்தி அல்லது முடித்து வேலைக்குச் செல்லும் பெரும்பான்மையான இளைஞர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர் என்பது நமக்குத் தெள்ளத்தெளிவாகத் தெரிந்த உண்மை.

இதை மாற்றுவது இப்போது அதிமுக்கியத் தேவை. மதுவை ஒழிக்கமுடியாது என்று ஒரு வாதம் இருக்கிறது. அது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக  ஒரு புறம் இருக்கிறது. அதற்கானப் புறக்காரணிகளும் அகக்காரணிகளும் மிகவும் பொருந்தித்தான் போகிறது. ஆனால் அதனால் விளையும் தீமைகள் இன்று பெருகிவிட்டன.

மாணவர்கள் சீரழிகிறார்கள். இளம்வயதிலேயே இளைஞர்கள் இறந்து விடுகிறார்கள். என்னுடைய ஊரிலேயே இப்படி எத்தனையோ இளைஞர்களின் மரணங்களை என்னால் கூற முடியும். அவர்களின் மனைவிகள் எல்லாம் இன்று இளம் கைம்பெண்களாக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆகவே இதற்கான முன்னெடுப்பு அதிதீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது மிகவும் தேவையான ஒன்று. தமிழகத்தின் பேசுபொருளாக மது மற்றும் போதைப்பொருள்கள் ஒழிப்பு இன்று மாறியிருக்கிறது. பொதுநிலையில் அக்கறைக் கொண்டவர்கள்  இதில் பங்கேற்கிறார்கள். மருத்துவர் கு, சிவராமன் போன்றோரின் அக்கறை மிக்க பேச்சுகளுக்கு இன்று ஒரு நியாயம் கிடைத்திருப்பதாக அவர்கள் உணர்கிறார்கள். மதுவுக்கும் போதைப் பொருள்களுக்கும் எதிராக ஒரு விழிப்புணர்வு  பெருகட்டுமே. இது இந்தியா முழுமைக்கும் வேண்டும் என்று நாம் கேட்கிறோம், மதுவினால் மனித சக்தி வீணாகிறது என்கிறோம். தமிழ்நாட்டிலிருந்துதான் சமூகநீதி பரவியது. அதைப் போல  மது எதிர்ப்பும் பரவட்டுமே.



No comments: