Sunday, September 22, 2024

புரட்சியாளர் அம்பேத்கரும் மது ஒழிப்பும்

 


 

இன்றைய சமூகத்தின் தீராத நோயாக மது மாறியிருக்கிறது. மது என்னும் திரவம் மட்டுமல்ல இங்கே பேராபத்து அதைவிட ஆயிரம் மடங்கு தீமையைப் பயக்கக்கூடியது போதைப்பொருட்கள். மது எதிர்க்கப்பட வேண்டும் என்றால் போதைப்பொருட்கள் ஆயிரம் மடங்கு வெகுதீவிரத்துடன் எதிர்க்கப்பட வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமானது.

மதுவின் தீமைகள் கொடுமையானது. நான் ஒரு தாயைச் சந்தித்தேன். இளம் கணவன்  மனைவி அவர்கள். ஒரு பெண். ஐந்தாம் வகுப்புப் படிக்கிறாள். பெண்குழந்தை அந்த வீட்டிலேயே இருக்க முடியவில்லை தன் பாட்டி வீட்டிற்குச் செல்கிறேன் என அடம்பிடிக்கிறது. ஏனெனில் அவளின் அப்பா நகரத்தில் வேலை பார்க்கிறார். சம்பாதிப்பதில் பாதியை குடிக்குச் செலவழித்து விட்டு மீதியைத்தான் குறைந்த அளவே வீட்டிற்குச் செலவுக்குத் தருகிறார். அதனால் அவருக்கும் அவர் மனைவிக்கும் வாக்குவாதம். சண்டை சச்சரவு. அந்தப் பெண்குழந்தைக்கு இது பிடிக்கவில்லை. சக மாணவர்கள் அக்கம்பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் பள்ளிக்கு வந்து சொன்னால் என்ன ஆவது என்னும் அச்சம் அந்தக் குழந்தையைச் சூழ்ந்துக் கொள்ள் அக்குழந்தை வீட்டிலும் இயல்பாக இல்லாமல் பள்ளியிலும் இயல்பாக இல்லாமல் மிகவும் நெருக்கடியான ஒரு மனநிலையில் உழல்கிறாள். இப்படி எத்தனை தனி ஆய்வுகளையும் நம்மால் கூற மூடியும்.

ஆகவே தற்காலத்தின் தீமையாக இருக்கும் மது எதிர்காலத்தின் அழிவாய் மாறிக்கொண்டிருக்கிறது என்பதை மிகவும் நாம் வேதனையோடுதான் பார்க்கவேண்டியிருக்கிறது. புத்தரின் காலத்தில் மதுக்குடியாமை ஓர் உறுதியாக மேற்கொள்ளப்பட்டது, இல்லறத்தாரானாலும் துறவிகளானாலும் அந்த உறுதி மொழி பொதுவானது.

சுராமேரய மஜ்ஜா பமாதட்டான

வேறமணி சிக்காபதம் சமாதியாமி

என்பது புத்தரின் போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி.  போதைப் பொருட்களை உண்ண மாட்டேன் என்று உறுதி ஏற்கிறேன் என்று பொருள் அதற்கு.

புரட்சியாளர் அம்பேத்கர் தன் வாழ்க்கையின் மிக முக்கியமானக் களத்தில் மது எதிர்ப்பைப் பேசியுள்ளார்கள். மகத் குளப்போராட்டம். புரட்சியாளர் அம்பேத்கர் வரலாற்றில் மிக முக்கியமானது. 1927  டிசம்பரில் நடைபெற்ற அப்போராட்டம் 24, 25 ஆகிய தேதிகளில் பல்வேறு தடைகளுக்கு இடையே அம்மாநாடு நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் மாநாட்டில் உரையாற்ற அனுமதிக்க 4000 பேர் கொண்ட மாநாட்டில் உரையாற்றினார்.  டிசம்பர் 27 அன்று மாலையும் மாநாடு தொடங்கியது. இரவு 10  மணிக்கு மாநாடு முடிந்தது. பிறகு 3000 பெண்கள் கூடிய  அந்தக் கூட்டத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் உரையாற்றினார். மிகச்சாதாரணமாக அவர் உரையாற்றி இருக்கிறார். ஆனால் அது மிகவும் முக்கியமானது.

“தீண்டப்படாதவராக உங்களை எப்போதும் கருதாதீர்கள். தூய்மையாக உடுத்துங்கள், அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள், சுய உதவி உணர்ச்சியைப் பெருக்கிக் கொள்வதிலும் நாட்டம் செலுத்துங்கள்என்று கூறிவிட்டு மீண்டும் தன்னுடைய குரலைத் தாழ்த்தி ரகசியம் பேசுவதைப் போல பேசியிருக்கிறார்.

‘உங்கள் கணவரோ மகன்களோ குடிகாரர்களாக இருப்பின் அவர்களுக்கு உணவு தராதீர்கள்

இது புரட்சியாளர் அம்பேத்கர் தலித் பெண்களுக்கு தந்த அறிவுரை.

இன்றைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் மாநாடு மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடாக நடக்க இருக்கிறது. மிகச்சிறந்த திட்டமிடலுடனும் பெண்களை அணியமாக்கி அதன்மூலம் ஒரு மாற்றத்தை உருவாக்கவும் அந்தக் கட்சியும் அதன் தலைவரும் மிகத்தீவிரமாக களப்பணியாற்றுகின்றனர்.

மதுவுக்கும் போதைப் பொருள்களுக்கும் எதிராக அது ஒரு பொதுமனநிலையை உருவாக்கினால் அதுவே மாபெரும் வெற்றி.

பல்வேறு பெண்கள் அமைப்புகள், இம்மாநாட்டில் பங்கு பெற வேண்டும். இம்மாநாட்டை அரசியலாய்ப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

 

No comments: