Tuesday, October 1, 2024

 

மது ஒழிப்பின் பேரரசியல்

 

கடந்த இரண்டு மாதங்களாக தமிழக அரசியல் தகித்துக்கொண்டிருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மது மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு மாநாடு குறித்த அறிக்கை வெளியிட்டதிலிருந்து இந்த பரபரப்பு தொடர்கிறது. ஆகஸ்டு 17 ஆம் திகதி தன்னுடைய பிறந்த நாளை முன்வைத்து மது ஒழிப்பில் தனது கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்தார் கட்சியின் தலைவர் திருமாவளவன். ஒருமாதம் மாநாட்டுக்கான களப்பணி,  செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாளில் மாநாடு. இதுதான் முதல் அறிவிப்பு.

ஆனால் அக்டோபர் 2 காந்தியின் பிறந்தநாள். இந்திய அளவில் மதுவிலக்கை வலியுறுத்தியவர் அவர்.  அம்பேத்கரிய அரசியல் இயக்கம் காந்தியின்  பிறந்த நாளை மது ஒழிப்புக்கு தேர்ந்தெடுத்தது தனது விரிந்த பார்வையை மக்களுக்கு உணர்த்துவதற்காக. மக்களுக்குத் தீங்கு தரும் எதுவும் இங்கு வேண்டாம் என்பதுதான் நிலைப்பாடு. ஆக தொண்டர்களுக்கு இன்னொரு மாதம் கூடுதலாகக் கிடைத்ததில் அளவற்ற மகிழ்ச்சி.

களம் தேர்தல் களம் போல் ஆனது. ஒவ்வொரு தொகுதிக்கும் மேலிட பொறுப்பாளர்கள் நியமிக்கப் பட்டார்கள். அவர்கள் அங்கங்கே போய் முகாமிட்டு கிளை அமைப்புகளைத் திரட்டி மாநாட்டிற்காக மக்களைத் திரட்டும் மிகத்தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. பாராளுமன்ற தேர்தலின் போது வேலை செய்த மற்ற அரசியல் கட்சிகள் ஓய்விலிருக்க விடுதலைச் சிறுத்தைகள் இன்னொரு தேர்தல் போலவே மது ஒழிப்பு பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். கட்சியின் தலைமை மண்டலவாரியாக மக்களைச் சந்திக்கிறது. மது மற்றும் போதைப் பொருளின் தீமையை தன்னுடைய கட்சித் தொண்டர்களுக்கு எடுத்துக்காட்டி விரிவான உரையை தலைவர் அவர்கள் நிகழ்த்துகிறார்கள்.  தலைவரைக் கண்ட தொண்டர்கள் இன்னும் தீவிரமாகக் களத்தில் பணியாற்றுகிறார்கள். வயல் வெளிகள்,நூறு நாட்கள் வேலை நடக்குமிடங்கள், மகளிர் அதிகமாகப் பணியாற்றும் தொழிற்சாலைகள், மாலைகளில் கடைத்தெருக்கள், வீடுகள் என விசிக தொண்டர்கள் மாநாட்டுப் பணிகளை அமர்க்களப்படுத்துகின்றனர்.

அமைப்பாய்த் திரள்வோம் என்னும் நூலில் தலைமையின் முக்கியத்துவத்துக்  கூறும் போது தலைமை தத்துவமும் கோட்பாடும் நிறைந்ததாக இருந்தால்தான் இயக்கத்தை மிகச்சரியாக வழிநடத்த முடியும் என  எழுச்சித்தலைவர் அவர்கள்  எழுதியிருபார்கள். அப்படித்தான் இந்த மாநாட்டின் தேவையும் உருவாக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி விசச்சாராயச் சாவுகள் அதிகரித்த வேளையில் அம்மக்களைச் சந்திக்கச் சென்ற  தலைவர்கள் வெறுமனே போய்  ஆறுதல் சொல்லித் திரும்பினர். எழுச்சித் தலைவர் அவர்கள் மட்டுந்தான் அந்த மக்களின் கண்ணீரைக் கண்டார். அது வெறும் கண்ணீர்த்துளி அல்ல. அவை உயிரின் தேவையை அறிந்த கண்ணின் வார்த்தைகள். அவர்களுக்கு எங்ஙனம், ஆறுதல் சொல்லலாகும் என எண்ணிய  அவர்  மதுவையும் போதைப் பொருட்களையும் ஒழிக்க எடுத்த  முடிவுதான்  அரசியலில் பல  கருத்தாடல்களை உருவாக்கியது.

அரசியல் கணக்குகளைத் தாண்டி, இந்த மாநாட்டின் நோக்கம் நிறைவேறுகிறதா என்பது தான் நாம் மிகவும் முக்கியமாகக் கருத வேண்டிய ஒன்று. எந்த நோக்கத்துக்காக இது நடத்தபடுகிறதோ  அது கொஞ்சம் திசை மாற்றப்பட்டிருக்கிறது என்றாலும்  இம்மாநாடு ஒரு சிந்தனை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சிந்தனை அதிர்ச்சி அனைத்துப் பொதுமக்களுக்கும் உண்டாகி இருக்கிறது. அவர்கள் இது குறித்து பொது வெளிகளில் உரையாடுகின்றனர். மதுவை ஒழிக்க முடியாது ஆனால் …. என்று கூறும் தன்மை வந்திருக்கிறது.

அது மட்டுமல்ல தற்காலத்தில் மதுவின்  தீமையோடு  மிகவும் மோசமானது போதைப் பொருட்கள். இது மிகவும் தீமையானது என்பது தெரியாமலே அதன் போதையில் இளைய சமூகம் ஆழ்ந்திருப்பது வேதனையிலும் வேதனை. சமூக அக்கறைக் கொண்டோர் இதை கட்சி ஜாதி மதம் என்னும் எல்லா எல்லைகளையும் தாண்டி யோசிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நாளைய தலைமுறை போதை தலைமுறையாக உருவாவதை நாம் தடுக்க வேண்டும். பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவரையும் வீழ்த்தும் போதைப்பொருட்களை நாம் ஒழித்தாக வேண்டும். மதுவினால் ஏற்படும் தீமையை விட போதைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் மிக மோசமானவைகளாக இருக்கின்றன.  மூளையை மழுங்கச் செய்து என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அதனால் ஏற்படும் பின் விளைவுகளை  அறியாமல் நாம் எங்கே இருக்கிறோம் என்/று தெரியாமல்  ஒட்டு மொத்தமாக சிந்தனைகளை அழித்து பெரும் ஆபத்தை விளைவிக்கும் போதைப் பொருட்கள் நம் மனித வளத்தைக் கெடுக்கின்றன. அதற்கெதிரான விழிப்புணர்வையும் இம்மாநாடு ஏற்படுத்தி இருக்கிறது.

ஓர் அமைதியான மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டரசியலில் தலித் பெண்கள் பெரும்பான்மையான தொண்டர்களாக ஒரு கருத்தியலின் அடிப்படையில் அணியமாகவில்லை. சில முன்நிகழ்வுகள் இருக்கின்றன. அதுவும் அவை எல்லாம் அறிவுஜீவிகளின் கூடுகைகளாக மட்டுமே நடந்திருக்கின்றன. ஆனால் பெரும்பான்மையான பெண்கள் இம்மாநாட்டிற்காகத் திரண்டிருக்கிறார்கள். அவர்களின் திரட்சி நாளை தேர்தல் களத்தில் மாற்றங்களைக் கொண்டுவரலாம். விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல் பலம் உயர்ந்திருக்கிறது  என்பது அப்போது தெரிய வரும். உள்ளாட்சி அமைப்புகளில் வருங்காலங்களில் அவர்கள் அதிகாரத்திற்கு வருவார்கள். பெண்களை அரசியல் படுத்துவது இதன்மூலம் நிறைவேறி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் மாநாடு மது மற்றும் போதை ஒழிப்புக் கருத்தியலில் மட்டுமல்ல அரசியல் அரங்கிலும் வெற்றி பெற்றிருக்கிறது என்பது தான் உண்மை.

 

 

 

 

 

 

 

No comments: