Sunday, October 1, 2023

 


மத அரசியல் 1

இன்றைய அரசியல் வெளியில் பா.ஜ.கவின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளும் அச்சங்களும் மிகவும் முக்கியமானவை.  தமிழ்நாட்டின் எந்தவிதமான பண்பாட்டுத்தளத்திலும் உடனிருக்க முடியாத அல்லது தன்னியல்புக்கு மீறியவற்றைக் கொண்டுதான் பா.ஜ.க தமிழ்நாட்டில் தன்னைக் கட்டமைக்கிறது.

ஒட்டுமொத்த தமிழர்களில் இந்துக்களைத் தனியாகப் பிரிக்கும் எந்தவிதமானத் தந்திரங்களும் இங்கு பலிக்கவில்லை என்பது அவர்களுக்கு மிக ஆச்சர்யத்தைத் தந்துகொண்டிருக்கிறது. இந்து மதத்தின் புறவய அடையாளங்களைக் கொண்டும் சில சாதுர்யமான முழக்கங்களைக் கொண்டும் ஓர் இயக்கத்தை இங்கே உருவாக்கிட முடியாது. அதுதான் பா.ஜ.கவின் இன்றைய நிலை. அதன் மாநிலத்தலைவர் திரு.அண்ணாமலை அவர்களின் பாதயாத்திரை எதற்காக என்பதான எண்ணங்கள் நமக்குள் இருந்தாலும் அந்த யாத்திரையின் வடிவம் என்பது  இந்துக்களின் திருவிழாவைப் போலத்தான் காட்சி அளிக்கிறது. கரகம் ஆடுவது , தேர் இழுப்பது என்பன போன்ற காட்சிகள் ஏராளம். காவித்துண்டும் வேட்டியும் அணிந்த மனிதர்கள் நடமாடுகிறார்கள். அவர்கள் தொண்டர்களா அல்லது பக்தர்களா என்பது பெருத்த சந்தேகம். பக்தியோடு அரசியல் செய்வது தமிழ்நாட்டில் ஆகாது என்னும் அடிப்படையை யாரும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

இதை ஆன்மீக மண் என்கிறார்கள். அப்படியல்ல சகல தத்துவார்த்தங்களையும் இங்கே நாங்கள் தவழ விடுகிறோம். அவற்றில் அனைவருக்குமான  நல்லவைகளை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். பௌத்தமும் சமணமும் இங்கே கோலோச்சி இருக்கிறது. ஆசிவகம் இங்கே இருந்திருக்கிறது.சைவ, வைணவ கோட்பாடுகள் இங்கு சொல்லப்பட்டிருக்கின்றன. கூடவே அவற்றிலிருக்கும் உண்மைகளை உணரும் உளவியலும் இந்த மக்களுக்கு இருக்கிறது.

பத்துத்தலை ராவணனை ஒத்த தலை ராமன் வென்றான் என்னும் கதையாடலை இங்கே பகடிதான் செய்தார்களே ஒழிய அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. அப்படி அவர்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளும் வகையிலும் ராமாயணம் இங்குச் சொல்லப்படவில்லை. கம்பன் அவனுடைய கவிதைக்காக வாசிக்கப்பட்டான். அதில் இருக்கும் கவிதையின் மேன்மை கம்பனை நுணுகி நுணுகி வாசிக்க வைத்ததே அல்லாமல் வேறெந்த கடவுள் கலையும் அல்ல.

அப்படி கடவுளைக் கட்டமைக்க நினைத்த பக்தி இலக்கியங்கள்கூட நேரடியாக கடவுளைக் கட்டமைக்க விழையவில்லை. ஆனால் நீதிகளை அவை கூறின. நீதிகள் எடுத்துக்கொள்ளப்பட்டனவே ஒழிய கடவுள்கள் அல்லர். 

            வேறுபடும் சமயமெல்லாம் புகுந்து பார்க்கின்

            நின் திருவிளையாடல் அல்லால்  வேறொன்றும்

            காண்கிலேன் பராபரமே

என்று தாயுமானவர் பாடும் போது எல்லா சமயங்களும் ஒன்றுதான் என்னும் எண்ணம்தான் நீதியாய் ஆனது. அதைத் தமிழர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

        கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ

என ஆண்டாள் பாடிய போது அவளின் பக்தியைவிட அவளின் மேம்பட்ட காதல்தான் இங்கே உள்வாங்கப்பட்டது. இப்படி நிறைய சொல்லலாம். ஒருவேளை கடவுள் கட்டமைக்கப்படுகிற அந்த குறித்த நேரத்தில் இங்கே தோன்றிய திராவிட இயக்கங்கள், தலித் இயக்கங்கள் கடவுள் குறித்த கருத்தைப் பின்னுக்குத் தள்ளி அறிவை முன்னுக்கு வைத்தனர்.  கடவுளா அறிவா என்னும் கேள்வியில் தமிழர்கள் அறிவின்பக்கம் தான் நின்றார்கள் . அதனால்தான்  இங்கே கடவுள்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கொண்டாட்டத்திற்குரியவர்களாக இருக்கிறார்கள். மீதி நேரங்களில் மக்கள் தங்கள் அறிவுடன் தான் வாழ்கிறார்கள். வினையாற்றுகிறார்கள்.

வேதங்களை ஓதும் பார்ப்பனர்கள் கூட தமிழ்நாட்டில் வேறுமாதிரிதான் இருக்கிறார்கள். அவர்களால் புராணீகர்களாக விசேஷ நேரங்களில் இருக்க முடிகிறதே  ஒழிய எப்போதும் அவர்களால் அப்படி இங்கே இயங்க முடியவில்லை. கேள்விகளும்  விமர்சனங்களும் விளைந்த மண் இது. எல்லாவற்றையும் கேள்வி கேட்க முடிந்த காரணங்களால்தான் பள்ளிக்கூடங்கள் முளைத்துக் கிளைத்தன.

அதற்கான அதிகாரங்களும் ஆட்சியாளர்களும் இங்கே இருந்தார்கள். ஆனால் என்ன முழுமையான தீர்வை நோக்கி நகர முடியாமல் அவர்களால் பாதியில் இப்பணிகளை விட்டனர். விட்டவற்றைப் பிடித்து மேறினர் ஒடுக்கப்பட்ட மக்கள். மதம் அதுவும் இந்துமதம் அவர்களுக்கு முழுவிரோதி என ஓதப்பட்ட புரட்சியாளரின் கோட்பாடுகளை உள்வாங்கியப் பின்பு அவர்கள் இன்னும் வீரியமாக்கப்பட்டார்கள்.

ஜாதிகளின் அநியாயங்கள் இங்கே இப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கின்றன, ஆனால் அவை ஒட்டுமொத்த இந்துக்களின் ஆதரவோடு இல்லை. பெரும்பான்மை இந்துக்களின் எதிர்ப்புணர்வில்தான் ஜாதிய மோதல்கள் இங்கு நடக்கின்றன. நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.

இந்த அடிப்படையில் அரசியலை அணுகாமல் மதரீதியாகவே பா.ஜ.க தன் அரசியலை தமிழகத்தில் கட்டமைக்க நினைக்கிறது. அதன் ஆகப்பெரும் பின்னடைவு தமிழகத்தில் நேர்வதற்குக் காரணம் இதுதான்.

திரு.அண்ணாமலையின் யாத்திரைத் தொடங்கப்பட்டபோது  உடனிருந்த அதிமுக இன்று அவர்களுடன் இல்லை. உள்ளே ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் வெளியே திராவிட இயக்கத்தலைவரான அண்ணா அவர்களை அண்ணா என்றும் பாராமல் அண்ணாமலை இழிவுப்படுத்தியதால் இப்பிளவு ஏற்பட்டுள்ளது.

வழக்குகள் வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என எடப்பாடி அவர்கள் கூறியபிறகு  பா.ஜ.கவுக்கான அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டன என்பது தான் உண்மை.