Sunday, February 13, 2011

புறாக்களின் கைகளைக் கொத்தி
தின்றுவிட்டு
உதிர்ந்துவிட்டன ஆலிவ்மர இலைகள்
நிழல்கள் எரியும் ஒரு தருணத்தில்
பூத்து இருக்கும் பூவொன்றை
கடித்து சாப்பிட்டுவிட்டு
வேகமாகத் தாவி ஓடுகின்றது
சாமிக்கு நேர்ந்துவிட்ட ஆட்டுக்கிடாய்
கோலங்களை மிதித்து அழித்துவிட்டு
அழுக்கேறிய கால்களோடு நடக்கிறாள்
வீதிக் கம்பங்களில் விளக்கேற்றும் பெண்
புராதனக் கோயில்களின் மேல் அமர்ந்த
கருப்புப் பறவைகள் எச்சமிடுகின்றன
சிதைந்த வெளிச்சுவர் மீதிருக்கும் சிற்பங்கள்மீது
என்னவென்று அறியா கருப்பு மனநிலையில்
இக்கவிதையைப் பிடித்துத்
தொங்கிக் கொண்டிருக்கின்றேன் நான்