Friday, December 30, 2022

2022 - 2023

 இந்த ஆண்டின் இறுதி நாள் இது. 2022 ஆம் ஆண்டு பல நிகழ்வுகள் நடந்தன. தனிமனித வாழ்வில் எனக்கு எந்தவிதமான மாற்றமும் இல்லை. உடல்நிலை முன்னேற்றம் கண்டிருக்கிறது. நிறைய நிகழ்வுகளில் பங்கேற்றேன். இவ்வாண்டின் இறுதியில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியிலும் எழுச்சித் தமிழரோடு  பேரா.வெற்றிச் சங்கமித்திரா அவர்களின் என் பார்வையில் எழுச்சித் தமிழர் என்னும் நூல் வெளியீட்டு விழாவிலும் பங்கேற்றேன்.

இன்னும் முன்னெற்றங்களை வருகின்ற 2023 எனக்குத் தரும் என்று நம்புகிறேன். மேலும் நூல்கள் பல எழுத, திரைப்படம் சார்ந்து வேலைகள் செய்ய, அரசியலில் ஓரிடத்தை அடைய சமூகப்பணியிலும் தொடர்ந்து இயங்கிட மனம் நினைக்கிறது.

பல படைப்புகள் இதழ்களில் வெளியிடப்பட வேண்டும். அதற்காக ஒரு பக்கம் வேலை செய்ய வேண்டும். புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் சமூக ஊடகங்களையும் உருவாக்க வேண்டும்.

பார்க்கலாம்

முடியும்.

Saturday, March 5, 2022

என்னென்றும் வளரும் ஒரு மூலிகையாய்

பச்சித்த மாலைப் பொழுதுகளில்

கையசைத்த இரு பறவைகள்

கூடடைந்த ரகசிய கதவுகளைச் சாத்தி மகிழ்கிறது

அடுத்து நிகழும் அந்தி. 




Monday, February 21, 2022

 உதடு குவித்து உன் ஆள்காட்டி விரலுக்கு

முத்தமிட்டுக்கொள்கிறாய்

அவ்விரலில்தான் பாலாற்று மணல்திரட்டில்

என்னை வரைந்து வைத்திருந்தாய்

தீர்ந்துவிடாத மணற்கடிகாரத்தின் பிரதி நான்



Tuesday, February 8, 2022

கடல் காற்று கங்குல் : மின்ஹாவின் கவிதைத் தொகுப்பு


 கவிஞர் மின்ஹாவின் முதல் கவிதைத் தொகுப்பு மிக இயல்பாக என் கைகளுக்கு வந்தது. நாங்கூழ் என்னும் அத்தொகுப்பில் நல்ல கவிதைகள் வாசிக்க வாய்த்தன. அவரது இரண்டாவது தொகுப்பு கடல் காற்று கங்குல். முதல் தொகுப்பைவிட சிறந்த கவிதைத் தன்மையும் பாடுபொருள்களின்மீதான தீர்மானமும் வெளிப்படையாகவும் உறுதியாகவும் தெரிகிறது.

பயணத்தூடாக வாழ்வைப் பார்த்தல் என்னும் அனுபவத்தின் கவிதை மொழிகள் இக்கவிதைகள். இதில் வரும் பாதைகள்,  இயற்கை சார்ந்த பார்வைகள், அவற்றை வாழ்வோடிணைக்கும் கவித்துவம் எல்லாம் இத்தொகுப்பில் மிக அமைதியாக நமக்கு வந்துவிடுகிறது.

கவிதை மாமிசத்தின் எச்சமாகவோ உயிரின் உறைவிடமாகவோ மாறிவிடுகிறபோது உணர்வின் பிரதியாக கவிதை வருகிறது. அதனால் வேகமாக அடைக்கப்படும் வார்த்தைகளில் கவிதைக்கானச் சதைத்துண்டம் நம் மேசையின் மேல் பிரதியாய் காற்றில் படபடக்கிறது. அது கடலாகவும் கங்குலாகவும்  உருவமாற்றம் அடையும் போது வாசகரின் தளத்தில் நிகழும் படைப்பானுவம்  முக்கியமாகிவிடுகிறது

தன்மையிலிருந்து படர்க்கையாகிவிடும் நேசத்தால் அணை என்னும் நதிகொல்லும் பெயர்ச்சொல் வினைச்சொல்லாகி ஏதிலிகளை அணைக்கச் சொல்லும் கவிதை மானுடம் தழுவியது. தேடல்களில் பாதைகளை விரல்களால் வரைய முடியாது எனவும் அப்படி வரையும்போது அவ்விரலில் ஒட்டியிருக்கும் மணற்துகள்கள்தான் ஞானம் என்னும் அவருடைய கவிதைப் படிமம் பாராட்டுக்குரியது

இருட்பருத்தி வெடித்துக் கரைந்து

காக்கைகளின் தொண்டைகளில் 

முடிவுறுகின்றன 

என்னும் உவமை நயம் இருளைப் பருத்திக்கு வைத்து முரண்நயத்தைத் தருகிறது.

இருத்தலின் பேறு

நிலையாமை உணர்தலும்

சாத்தான்கள் களைதலும்

அன்பின் தீந்தைக் கொண்டு

எங்கும் ஒரேசீராய்

வர்ணமாக்கிக்கொண்டு

அடங்க்யிருத்தலும் என

நான் பிதற்றுவதைப் பித்து

எனக் கடத்தலும்

என வாழ்வின் நிலையாமையைக் கூறும் கவிதை மனத்திற்கு இதமானது.


தொகுப்பில் இருக்கிற குறுங்கவிதைகள் அனைத்தும் பல்வேறு உணர்வலைகளைக் கொண்டு வந்து சேர்க்கின்றன.

தொகுப்பு நிறைவான ஒன்றாகவே இருக்கிறது.