Friday, October 28, 2011

தீராத விளையாட்டுப் பிள்ளையா கண்ணன்



தமிழ்க் கவிஞர்களின் ஈழத்தமிழருக்கான டெல்லிப் போராட்டம் குறித்து ‘அகவிழி திறந்து’ என்னும் பத்தியில் ‘ஷூட்டிங்’ என்னும் தலைப்பில் அவருடைய பத்திரிகையான காலச்சுவடில் எழுதியிருக்கிறார் திரு.கண்ணன் அவர்கள். ஒரு பத்திரிகை முதலாளி தன்னுடைய கார்ப்போரேட் தனமான நிறுவனத்தின் செய்தி மடலாக வரும் பத்திரிகையில் தன் கருத்தை எழுதுவது என்பது உலகில் நடக்காத செயல் அல்ல. ஆனால் அவர் எதை எழுதுகிறார் என்பதுதான் நம்மை இப்படி எதிர்வினை ஆற்ற வைக்கிறது.

அப்பத்திரிகையோடு தொடர்புடைய எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆக்கவாளிகளும் இதைக் கேட்க வேண்டும் என்னும் வேண்டுகோளையும் வைக்கிறோம்.

ஈழத்தில் போர் நடந்து அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டபோதெல்லாம் தமிழர்கள் தமிழ்நாட்டில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பது ஓர் அரசியல் செயல்பாடாகத்தான் கடந்த காலங்களிலிருந்து தொடர்ந்து வருகிறது. திராவிட அரசியல் உணர்வுள்ள அல்லது வானம்பாடிகளின் வரிசையில் வந்தவர்கள் மட்டுமே எழுத்தளவில் தங்கள் எதிர்ப்பினை இப்பிரச்சினையில் பதிவாக்கியுள்ளனர். மற்றவர்கள் அப்படி இருந்திருக்கிறார்களா எனக்கூற முடியவில்லை. பிரமிள் தன் கவிதைகள் சிலவற்றில் ஈழப்பிரச்சினையைப் பதிவாக்கியிருக்கிறார்.

ஆனால் 2009ஆம் ஆண்டு பிப்ரவரியில் தமிழ்க்கவிஞர்கள் ஈழப்படுகொலைக்கு டெல்லியில் ஆற்றிய போராட்டச் செயல்பாடுகள் கண்ணன் அவருடைய எழுத்தில் சொல்வதைப் போல ‘போராட்ட ஜோரில்’ (இத்தகையப் பகடியை அவருடையத் தந்தையிடமிருந்து கற்றிருப்பார் போல) டெல்லிக்குப் போகவில்லை. படைப்பாளிகளுக்கேயுரிய உணர்வெழுச்சியும் மானுட நேயத்தின் உந்துதலும்தான் அப்போராட்டத்தில் பங்கேற்க எங்களுக்குக் காரணாமாயிருந்தது.

இன்னும் சொல்லப்போனால் படிக்கிற காலங்களில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகப் போராடி ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு ஆட்படுத்தப்பட்டவர்கள் நாங்கள். ஏதோ இப்போது கவிதை எழுதுகிறோம் என்பதற்காக போராடப் போகவில்லை. கவிதை எழுதுவதும் பத்திரிக்கை நடத்துவதும் எங்கள் குலத்தொழில் அல்ல. போராடுவது எங்கள் ரத்தத்தில் ஊறியது. சாதி ஒழிப்புப் போரில் நூற்றாண்டு வரலாறு வாய்ந்தது எங்கள் தனிவாழ்க்கையும் சமூக வாழ்க்கையும். பள்ளிப் பருவத்தில் குட்டிமணி,ஜெகன் படுகொலையைக் கண்டித்து வேலைநிறுத்தம் செய்து தண்டனைப் பெற்றவர்கள் நாங்கள். இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து திலீபன் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தபோது எங்கள் ஊரில் தொடர் உண்ணாவிரதம் நடத்திப் போராடியவர்கள் நாங்கள். ரயில் மறியல் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டவர்கள் நாங்கள். அப்போதெல்லாம் கண்ணன் என்ன செய்துகொண்டிருந்திருப்பார் என்று நான் சொல்லத் தேவையில்லை. தமிழில் எழுதக்கூடியவர்களுக்கு அது தெரியும். அது கூட தெரியாதவர்களா நாம்!

டெல்லியில் நடந்த போராட்டம் கவிஞர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டமாக இருக்கலாம். ஆனால் அதில் கவிஞர்கள் எழுத்தாளர்கள் மட்டுமல்ல மனித உரிமை அமைப்பினர், மீனவ அமைப்பினர், மாணவர்கள், வழக்கறிஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்ற போராட்டம் அது. அது மட்டுமல்ல அப்போராட்டத்தை நடத்துவதற்கு லீனா மணிமேகலை மட்டுமே ஒருங்கிணைப்பாளர் அல்ல. கவிஞர்கள் சுகிர்தராணி, மாலதி மைத்ரி, போன்றவர்களும் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டனர். லீனா மட்டும் பணம் செலவழிக்கவில்லை. பணம் செலவானதற்கான ரசீதுகள் எல்லாம் இன்னும் சுகிர்தராணியிடம்தான் இருக்கிறது. மாலதி மைத்ரி நிகழ்ச்சிகளை வடிவமைத்தார்.மீனவ அமைப்புகளை, மனித உரிமை ஆர்வலர்களைத் திரட்டினார்.

பெண்களின் தலைமையை ஏற்க வேண்டும், அவர்களின் வழிகாட்டுதலில் நடக்க வேண்டும் என்னும் சீரிய சிந்தனைதான் ஆண் ஆக்கவாளிகளிடம் அன்றையப் போராட்ட நாட்களில் இருந்தது.(இப்படி ஒரு விஷயத்தைச் சொல்வதைக் கூட ஆணாதிக்கம் என்றுதான் நான் நினைக்கிறேன்) அதனால்தான் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளாக இருக்கக் கூடிய கோணங்கி, ரமேஷ், கரிகாலன், அஜயன் பாலா,அசதா, திருநங்கைக்களுக்காகப் போராடும் லிவிங் ஸ்மைல் வித்யா,சுகிர்தராணி, மாலதி மைத்ரி, இன்பா, நரன், செல்மா பிரியதர்ஷன், லட்சுமி சரவணக்குமார் என இன்னும் நிறைய பேர் கலந்துகொண்டார்கள்.

இவர்கள் கண்ணன் சொல்வதைப் போல போராட்ட ஜோரில் வந்தவர்கள் இல்லை. உண்மையான அக்கறையில் வந்தவர்கள்.

லீனாவிறகும் காலச்சுவடிற்கு உள்ள கருத்துவேறுபாடுகளினால் லீனாவை கேள்வி கேட்கும் எண்ணத்தில் எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் எப்படி அவரால் இழிவுப்படுத்த முடியும்? அவருக்கு அத்தகைய எந்த உரிமையும் இல்லை என்றே நான் கூறுகிறேன்.

அந்தப் போராட்டம் டில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த உணர்ச்சிகரமான போராட்டம். தமிழக அரசியல்வாதிகள் எல்லாம் வந்து போராட்டத்தினை வாழ்த்திவிட்டு சென்றார்கள். எங்கள் கருத்தோடு உடன்படாதவர்கள் எங்களை வாழ்த்த வந்தபோது வேண்டாம் என தடுத்து நிறுத்தினோம். பக்கத்தில் கட்சித்தொண்டர்களுடன் வைகோ உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.

யாருமே கண்டுகொள்ளாத அந்தத் தெருவில் தமிழ்படைப்பாளிகள் தொண்டைக் காய கத்தினோம். அடுத்த நாள் இலங்கைத் தூதரகம் முன்னால் அனுமதியின்றி போராடி, தூதரக பெயர்ப்பலகையை செருப்பால் அடித்து, அங்கிருக்கும் துப்பாக்கி வைத்திருந்த காவலாளிகளுக்கு அஞ்சாமல் ராஜபக்சேவின் கொடும்பாவியைக் கொளுத்தி, டில்லியின் முக்கிய பகுதியான நெரிசலான போக்குவரத்துடைய சாலையை மறித்து கைது செய்யப்பட்டு சாணக்கியபுரி காவல்நிலையத்தில் ஒரு நாள் முழுமையும் வைக்கப்பட்டு படைப்பாளிகள் போராடினார்கள். அத்தகைய உணர்ச்சி வசப்பட்ட போராட்டம் அது. அதை கண்ணன் போராட்ட ஜோர் எனக் கொச்சைப்படுத்துவதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?


அவர்கூறும் குற்றச்சாட்டு, லீனா எடுத்திருக்கிற செங்கடல் படத்தில் டெல்லியில் நடத்தப்பட்ட போராட்ட காட்சிகள் வருகிறது என்பது. அதற்காக படத்தயாரிப்பாளர் தந்த பணத்தில்தான் போராட்டம் நடந்தது என்றும் கூறுகிறார். இது முற்றிலும் பொய்யானது. படத்திற்கான ஸ்கிரிப்ட் அப்போதே எழுதப்பட்டது என்பதையும் பார்த்த மாதிரியே கூறுகிறார்.

அதனால்தான் அவரால் தன்னுடைய இதழில் எழுதி தன்னுடைய பதிப்பகத்தில் புத்தகம் போடுவதற்காக படைப்புகளைத் தந்து அவருடைய வியாபாரத்தைப் பெருக்கும் எழுத்தாளர்களையே அவரால் துணை நடிகர்கள் என்று சொல்ல முடிந்திருக்கிறது. போராட்டத்தின் முன்னணியினர் காலச்சுவடு இதழோடு தொடர்புடையவர்களாக இருக்கும்போது அவர்களிடம் ஒரு வார்த்தை கேட்டு கண்ணன் இதை எழுதியிருக்கலாம்.

இப்போராட்டத்தின் காட்சி செங்கடல் படத்தில் இடம்பெறுவது குறித்து எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. போராட்டத்தை செய்தியாக்கும் ஊடகங்கள் யாரும் இதை செய்தியாகப் போடலாமா என போராடுபவர்களிடம் உத்தரவுக் கேட்டுக்கொண்டு செய்தியாக்குவதும் இல்லை. செய்தியில் வரும் யாரும் துணை நடிகர்களும் இல்லை. கண்ணனுக்குத் தெரியாததா!

ஆனால் அவர் ஏன் இப்படிப்பட்ட விஷத்தை படைப்பாளிகள் மேல் கக்குகிறார் எனத் தெரியவில்லை. லீனாவுடனானப் பிரச்சினையை அவர் அகவிழியைத் திறந்து பேசுவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆனால் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவது ஏன்?

மற்றவர்கள் நடத்தும் போராடங்களைத்தான் படங்களில் பயன்படுத்தவேண்டும் என்பது விதி ஒன்றும் அல்ல. போராட்டம் நடத்தியவரே அதை ஓர் இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்னும் தேவை வரும்போது பயன்படுத்தலாம் என்பதும் குற்றமில்லை. மேலும் செங்கடல் படத்தில் அப்போராட்டம் என்ன நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

செங்கடல் படம் முழுமையும் சரியானது என நாம் சொல்லவரவில்லை.அதில் நாம் முரண்படக் கூடிய இடங்களும் இருக்கலாம்.படம் இன்னும் பார்வையாளனுக்குக் கிடைக்கவே இல்லை. அதற்குள் அதைப் பற்றி பேசுவதில் என்ன நாகரிகம் இருக்கப்போகிறது.

மேற்படி போராட்ட பயணத்தில் பங்கேற்றவன் என்னும் உரிமையில் இந்தக் கருத்தைக் கண்ணன் அறிய நான் கூறுகிறேன், உங்கள் தனியான காழ்ப்புணர்வுகளுக்கெல்லாம் எங்கள் ஒட்டுமொத்த போராட்டத்தை பகடி செய்ய வேண்டாம். அது எங்கள் உணர்வுகளோடு விளையாடுவது.

Saturday, October 8, 2011

உயிர்க்கொடி




இன்னும் விடியவில்லை. இருளின் பிடியிலிருந்து விலகாமல் வானம் மூச்சுத் திணறிக்கொண்டிருந்தது. கிணற்றின் சுவரோரம் பல்லி ஒன்று கத்தியது. காற்று வீசியதால் கயிறு அசைந்து ராட்டிணத்திலிருந்து ஒலி எழும்பிக்கொண்டிருந்தது. இரவு குறித்த அச்சம் இன்னும் குறையவில்லை அமிர்தத்திற்கு. இலேசான வெளிச்சக்கோடுகள் வந்தால்கூட பரவாயில்லை என்று தோன்றியது அவளுக்கு மடியில் தூங்கிக்கொண்டிருந்த தன் ஒரு வருடக் குழந்தையை மேலும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அது தைரியம் கொடுப்பதாக உணர்ந்தாள்..

அமிர்தத்திற்கு இது புதிது. பிறந்த ஊரில் ஒரு பட்டாம்பூச்சியாய் பாடி திரிந்தவள் அமிர்தம். ஆம்பூருக்கு வந்து வாழ்க்கைப்பட்டு அவள் இப்படி துன்பப்படுவாள் என்று கனவில்கூட நினைத்திருக்கவில்லை. நேற்று இரவு மாமியாருடன் போட்ட சண்டையில் வீட்டிற்கு வெளியே துரத்தப்பட்டவள் இரவெல்லாம் இப்படி கிணற்றருகிலேயே உட்கார்ந்திருக்கின்றாள். அது தாழ்வாரம் இறக்கிக் கட்டப்பட்ட வீடு. மனையில் பாதிதான் வீடாக இருந்தது. மீதி இடத்தில் முருங்கை மரம் ஒன்றும் ஈசானி மூலையில் வேப்பமரமமும் கிணறும் இருந்தன. வலது ஓரத்தில் குளியலறை. கிணற்றண்டையில் பூசணிக் கொடி படர்ந்து மஞ்சள் நிற பூசணிப்பூக்களும் பூக்களுக்குப்பிறகான பிஞ்சுகளும் தெறித்திருந்தன. தன்னுடைய முந்தானையை எடுத்து தலையிலிருந்து கால்வரை இழுத்துப் போர்த்தி ஒரு கூடாரத்தைப் போலாக்கி கால்களை மடக்கி தொட்டிலாக்கி அதில் குழந்தையைப் படுக்கவைத்து கால்களை மெதுவாக ஆட்டி தூங்கப்பண்ணினாள். இந்த இரவு முழுக்க ஒரு பொட்டு தூக்கத்தைக்கூட அவள் தூங்கவில்லை. கண்கள் மூடும்போதெல்லாம் அவளுக்கு கோபமும் அழுகையும் பீறிட்டு வந்துக் கொண்டிருந்தது.

’இவ்ளோ தூரம் கண்காணாத எடத்துல குடுக்கணுமாப்பா?’ எனக் கேட்ட அம்மாவைப் பார்த்து ’டீச்சருக்கு வாத்தியாருதான் நல்லது. மிலிட்டரிகாரனுக்கா பொண்ண கொடுக்கமுடியும்?’ என்று சொன்ன சின்ன அண்ணன் நினைவுக்கு வந்தான். குழந்தையாய் இருக்கும்போது அவன்தான் தலைவாரி பவுடர் பூசி அலங்காரம் செய்து பள்ளிக்கு அனுப்புவான். அந்தக் கிராமத்தில் அப்போது கடைகள்கூட கிடையாது ஆனால் தினமும் பள்ளிக்குப் போகும்போது காசு தருவான். தான் வேலை பார்க்கும் கரும்புத் தோட்டத்திலிருந்து தேர்ந்தெடுத்த நல்ல சிவந்த கரும்பினை வெட்டி அதன் தோலை செதுக்கி முள்ளங்கி பெத்தையைப் போல கரும்பினை ஒரே அளவாக அரிந்து தன்னுடைய துண்டில் ஒரு முனையில் மூட்டையைப் போல் கட்டிக் கொண்டு தங்கச்சிக்குத் தருவான். இது அவனுடைய அன்றாட வேலை. இவள் அதை தன் பாவாடையில் வைத்துக் கொண்டு சாப்பிடத் தொடங்குவாள்.

அம்மாவின் விரல் அளவு கோடுகள் பதிந்திருக்கும் சாணம் மெழுகிய திண்ணையில் உட்கார்ந்து ஒவ்வொரு துண்டாய் கரும்பினை எடுத்து வாயில் போட சாறு தொண்டைக்குள் இறங்கும். மேலும் அதை மெல்லமெல்ல மீதிச்சாறு உதட்டு வழியாக வாய்க்கு வெளியே வரும். உதட்டைச் சுழித்து உள்ளங்கையில் துணையோடு கரும்புச்சாற்றை மீண்டும் வாய்க்குள் செலுத்த எழும் சப்தம் வித்தியாசமான ஒரு பறவை கத்துவதைப் போல இருக்கும். கரும்புச் சத்தைகளை மென்று அந்த இடத்திலேயே துப்பி இருப்பாள் அமிர்தம். சுற்றி எறும்புகள் மொய்த்துக் கொள்ளும். ‘ஏம்பாப்பா எதனா ஒரு எடத்துல போடக்கூடாது?’ எனக்கேட்டுக் கொண்டே குனிந்து அவற்றை எடுத்துக்கொண்டிருக்கும் அம்மாவின் இடுப்பைக் கிள்ளிவிட்டு ஓடிவிடுவாள் அமிர்தம். அவள்தான் அவ்வீட்டில் கடைக்குட்டி. ஒரே பெண்.

அமிர்தம் அந்தக் கிராமத்தின் செல்லப்பெண்ணாக வலம் வந்தவள். நெல்வயல்களும் கரும்புத்தோட்டங்களும் சூழ்ந்திருக்கும் அழகிய கிராமம் அது. அந்த ஊருக்குள் செல்லவேண்டுமென்றாலே ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரில் நடந்துதான் செல்லவேண்டும். பாலாற்றங்கரையில் அமைந்த வளமான ஊர் அது. வாலாஜா முக்கிய சாலையிலிருந்து கிளைபிரிந்து தெற்கு திசையில் திரும்பும் சாலையில் போனால் அணைக்கட்டு வரும் அவ்விடத்தில் பாலாறு இரு கிளைகளாகப் பிரிந்து செல்லும். அந்த இரண்டு ஆறுகளுக்கு இடையேயுள்ள கிராமங்களில் சாதம்பாக்கமும் ஒன்று. இருண்ட தென்னந்தோப்புகள் அதிகம். பறவைகளும் அவற்றின் சப்தங்களும் எப்போதும் அவ்வூரின் வெளியை நிறைத்துக் கொண்டேயிருக்கும்.

இரண்டு தெருக்கள் கொண்டது இவர்கள் வாழ்ந்த பகுதி. எல்லா வீடுகளின் பின்பகுதி காலி இடங்களில் உயர உயரமான கோணக்கா மரங்கள். அவர்கள் அதை கொர்கலிக்காய் மரம் என்று சொல்லுவார்கள். கோடை காலங்களில் உயரங்களில் சிவந்து வெடித்த கோணக்காய் சுளைகளைக் கொத்தித் தின்ன கிளிகள் வந்து கூடும். மக்களுக்கு விவசாயம்தான் முக்கியத் தொழில். சேடை அடிப்பது,ஏரோட்டுவது, நெல்லறுப்பது, கரும்பு வெட்டுவது, ஆலை ஆடுவது. வெல்லம் பிடிப்பது என்று அவர்கள் தொழில் விவசாயத்தையே சார்ந்ததாக இருக்கும். காலையிலும் மாலையிலும் மாடு ஓட்டிக்கொண்டு பால் சொசைட்டிக்குப் போய் பால் கறந்து கொடுத்துவிட்டு அப்படியே கால்வாயில் மாட்டைக் கழுவிக் கொண்டு பக்கத்தில் இருக்கும் கிணற்றில் இரண்டு குதிப்பான்களைப் போட்டு குளித்துவிட்டு வீடு வருவார்கள். கால்களில் படிந்திருக்கும் புழுதியில் அழுக்கிருக்காது. அதில் வண்டல்தன்மை படிந்திருக்கும்

சாத்தம்பாக்கத்திலிருந்து வடக்கு பக்க ஆற்றைக் கடந்து வரப்புகள்மீது நடந்து பக்கத்து ஊரான பூண்டியில் உள்ள பள்ளியில்தான் படித்தாள் அமிர்தம். பள்ளிக்கு போவது வருவதும் ஒரு கொண்டாட்டமாகவே அவர்களுக்கு அன்றாடம் இருக்கும். பூண்டி கோயிலில் அர்ச்சனையை முடித்துவிட்டு வரும் சுப்புரு அய்யர் இவர்கள் எதிரே வருகிறார்கள் என்பதற்காக வேறு வரப்பில் வருவார். ஆனால் அமிர்தமும் அவளுடன் பூண்டியில் படிக்கும் பையன்களும் விடமாட்டார்கள். சுப்புரு அய்யர் எந்த வரப்பில் வருவாரோ அந்த வரப்பிற்கு அப்படியே தாவிச் சென்றுவிடுவார்கள். தலையில் அடித்துக்கொண்டு வேறு வழியில்லாமல் கழனிச்சேற்றில் கால்கள் பதிய இறங்கி நடந்துச் செல்வார் சுப்புரு அய்யர்.

பத்தாம் வகுப்புவரை பூண்டியில்தான் படித்தாள் அமிர்தம். அவளுடைய அத்தை ஆசிரியப்பயிற்சி முடித்துவிட்டு சாத்தம்பாக்கத்திற்கே ஆசிரியையாக வேலைக்கு வந்தாள். இருவரும் நல்ல ஜோடி சேர்ந்தார்கள். புத்தகங்களைப் படிப்பதுதான் இருவரின் முக்கிய வேலை. அமிர்தத்தின் தாத்தா பாவலர் அந்தப்பகுதியில் அப்போது முக்கியமான சமூகத் தொண்டர். அதனால் இவர்களின் படிப்புக்கும் வாசிப்புக்கும் எந்த குந்தகமும் இல்லை.

அமிர்தம் அவளுடைய பத்தாம் வகுப்பு விடுமுறையில் நா.பார்த்தசாரதியின் குறிஞ்சிமலர்கள் நாவலைப் படித்துவிட்டு அவள் அண்ணனுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு பூரணி என்ற அந்நாவலில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் பெயரை வைத்தாள். சும்மா இருக்கும் நேரங்களில் அமிர்தமும் அவள் அத்தையும் ஊரில் இருக்கும் ரேடியோ ரூமுக்கு போய் பாடல்களை வைப்பார்கள். எந்த நேரத்தில் எந்த ஸ்டேஷன் எடுக்கும் என்று இவர்கள் இருவருக்கும்தான் தெரியும். சிவாஜி கணேசன் பாடல்கள் என்றால் அந்த ஊர் மக்களுக்கு கொள்ளைப்பிரியம். ’ஏம்பாப்பு! அண்ணன் பாட்டு எதனா வையேன்’ என்று இவளிடம்தான் கேட்பார்கள்.

பத்தாம் வகுப்புக்குப் பிறகு ராணிப்பேட்டையிலுள்ள தன்னுடைய இன்னொரு அத்தை வீட்டில் தங்கி ஆசிரியைப் பயிற்சியை இரண்டு ஆண்டுகள் படித்து முடித்துவிட்டு மீண்டும் தன் கிராமத்திற்கு வந்தாள் அமிர்தம். அனைவருக்கும் ஒரே ஆச்சரியம். ‘திவ்ளோண்டு புல்லுகிட்டி மாதிரி இருந்துக்குண்ணு இந்தப் புள்ள டீச்சாராயிடுச்சே!’ என்று புகழ்ந்து அமிர்தத்தின் அம்மாவிடமே சொல்லியிருக்கின்றார்கள். ஆறுமாதங்கள் கழித்து எந்தப்பள்ளியில் அமிர்தம் படித்தாளோ அந்தப்பள்ளிக்கு ஆசிரியையாக வேலை வந்திருந்தது. அவளுடைய அண்ணன்களுக்கு பெருமிதம். அவளுடைய பெரிய அண்ணன் அந்த கிராமத்தின் தலைவராக ஆகியிருந்தார். ’தலைவரூட்டுப் பொண்ணுக்கு வேலை வந்திருச்சி’ என்று அனைவரும் பேசினார்கள்.

அமிர்தம் முதல் சம்பளத்தை தன் அம்மாவிடம் கொடுக்க அதை அன்போடு வாங்கி அண்ணன்களிடத்தில் கொடுத்தாள் அம்மா. வீடே இன்னொரு சொர்கமாய் இருந்தது. அண்ணன் குழந்தைகள், வேலை, வீடு, அந்த அழகிய கிராமம் என்று இருந்தாள் அமிர்தம். அவளுக்கு என்று தனி மரியாதை கூடியிருந்தது.

அன்று பூண்டி பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள் அமிர்தம். ஊரின் எல்லையிலுள்ள அரசமரத்தடியில் வரும்போது அவளுடைய ஊர்க்கார தம்பிகள் ரச்சக்கல்மீது உட்கார்ந்திருந்தனர். ’யக்கா சீக்கிரமா ஊட்டண்ட போ; உன்ன பொண்ணு பாக்க சாயந்தரம் பஸ்சுக்கு வந்திருக்காங்க’ என்று ரேணு கத்தி சொன்னான். ரேணு எதிர்த்த வீட்டு பையன். அமிர்தத்திற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் சின்ன உடலில் சுற்றிக்கொண்டிருந்த புடவை அவிழ்வதைப் போல உணார்ந்தாள். அடிவயிற்றில் இலேசான கலக்கம். வீட்டிற்கு புறக்கடை வழியாகச் சென்றாள்.

‘எம்மா பொயக்கட வழியாகத்தான வந்த. போய் மூஞ்ச கழுவினு வா’, தங்கம் பெரியம்மா சொன்னபோது கோபமாக வந்தது. பெரிய அண்ணன் சீக்கிரமா வா என்று அதட்டிவிட்டு போனான்.

ஆம்பூருலர்ந்து வந்திருக்காங்க; மாப்பிள்ள வாத்தியாராம். நல்ல கருப்பா கட்டையாத்தான் இருக்கார் என்று வனிதா சொன்னபோது பார்க்க வேண்டும் என்று தோணவே இல்லை அமிர்தத்துக்கு. திருமணம் பேசி முடிக்கப்பட்டு கல்யாணநாள் குறித்தபிறகு கூட அவள் இன்னும் சரியாக மாப்பிள்ளையை பார்க்கவில்லை. சனிக்கிழமையானால் வாரந்தோறும் வீட்டுக்கு மாப்பிள்ளை வந்தாலும்கூட பேசியதில்லை அமிர்தம். தண்ணீரும் சாப்பாடும் தருவதோடு சரி.

மிக நேராக அவள் மாப்பிள்ளையை பார்த்தது காஞ்சிபுரத்தில்தான். புடவை எடுக்கவந்த கடையில் எதிரில் இருக்கும் கண்ணாடியில்தான் மாப்பிள்ளையை முழுமையாகப் பார்த்தாள் அமிர்தம். அவள் மனதுக்குள் எதுவுமே தோன்றவில்லை. அண்ணன்கள் சொல்லிவிட்டார்கள் என்பதோடு நின்றாள்.

கல்யாணம் ஆம்பூரில்தான் நடந்தது. அப்போதுதான் இவ்வளவு தூரம் ஆம்பூர் இருக்கும் என்று அவ்வூரிலிருந்து கல்யாணத்திற்கு வந்திருந்தவர்களுக்குத் தெரிந்தது. ஏன் அமிர்தத்துக்கே அப்போதுதான் தெரியும். ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமைகளில் நடக்கும் ஆசிரியர் கூட்டங்களுக்கு வாலாஜா வரை வருவாள். அவளுடைய தோழி கஸ்தூரியிடம் பேசுவதற்காகவே அங்கு வருவாள். இல்லை என்றால் வாலாஜாவிலுள்ள நூலகத்திற்கு வருவாள். அவ்வளவு தூரம்தான் அவள் அதிகம் பயணம் செய்த தூரம் அவள் திருமணத்திற்கு போகும்போதுதான். வாலாஜாவைத் தாண்டி வண்டி வேலூருக்கு வந்தது. இடையில் இருக்கும் ஆற்காடு, விஷாரம் ஆகிய ஊர்களில் எல்லாம் அவளுக்கு உறவினர்கள் இருக்கின்றார்கள். ஒரு நாளும் அவள் அவர்கள் வீட்டிற்குச் சென்றதில்லை. இப்போது அவர்கள் ஞாபகத்தில் வந்தார்கள். கல்யாணத்திற்கு வருவார்களா என்று மனதுக்குள் எண்ணத்தை ஓட்டினாள்.

வேலூர் வருவதற்கு ஒருமணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டிருந்தது. ஆம்பூர் இன்னும் ஒருமணி ஆகும் என்று வாத்துக்காரமூட்டு சுப்பிரமணி சொன்னான். எம்மாந்தூரம் என்று சலித்துக்கொண்டாள் அமிர்தத்தின் தாய். ஆம்பூர் வந்து எதோ ஒரு சந்தில் வளைந்து மீண்டும் நேராக போய் ஓர் அரசமரத்தடியில் வந்து வண்டி நின்றது. இரவாகி விட்டிருந்தது. நிலா அரசமரத்தின் இலைகளை ஜொலிக்க வைத்துக்கொண்டிருந்தது. அரச மரத்து இலைகள் இவர்கள் திருமணத்திற்கு ஜோடிக்கப்பட்ட தேர்போல அந்த இரவில் மின்னியது.

மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்திருந்தார்கள். மாரியம்மன் கோயில் மேடைமீது பாய்கள் விரிக்கப்பட்டு நடுவில் பெட்ரோமாகஸ் விளக்கு வைக்கப்பட்டிருந்தது. அது வெளிச்சத்தையும் சப்தத்தையும் ஒருசேர தந்துகொண்டிருந்தது. பெண்ணைக் கூட்டிக்கொண்டு போய் அங்கே உட்காரவைத்தார்கள்.மேடையை சுற்றி சின்ன பையன்களும் பெண்களும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். புதுப்பெண்ணைப் பார்க்கும் ஆசை அவர்களுக்கு. இந்தா, என்று வேகமாக ஒருகை பித்தளை வாழைக்காய் செம்பை நீட்டியது. பானகம். வெல்லம் வாழைப்பழம் போட்டுக் கரைத்தது. வாங்கிக் குடி என்று யாரோ இடிக்க அமிர்தம் வாங்கிக் குடித்தாள். எப்போதும் குவளையில் வாய் வைத்து அவள் குடித்ததில்லை. யாராவது அப்படி குடித்தாள் திட்டுவாள். ஆனால் இன்று தலைநிமிராமல் வாய் வைத்துக் குடித்தாள். வெல்லம் கரைந்து கரையாமல் இருந்த சின்ன சின்ன கரும்புத்துணுக்குகள் தொண்டையில் சிக்கியது. துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருந்த நேரத்தில்தான் ’அதான் ஒன் சின்ன நாத்தனா’ என்று காதில் சொன்னாள் அத்தை. அவளைப் பார்க்கக் கூட முடியவில்லை. வந்த மாதிரியே போய்விட்டிருந்தாள் அவள். பெண்ணை அழைத்துக் கொண்டு மாப்பிள்ளை வீட்டுக்கு உப்பில் கைவைக்க சென்றார்கள். எறவானம் சற்று இறக்கமாக இருப்பதால் குனிந்துதான் செல்லவேண்டும். அதை கவனிக்காத அமிர்தத்தின் சின்ன அண்ணன் வீட்டினுள் நுழையும்போது தலை இடித்துக் கொண்டான். ’வரும்போதே தல இடிக்குதே’ என்று சொல்லிக்கொண்டே உள்ளே போனான்.

அடுத்த நாள் காலையில் மணமகன் இல்லத்தில் திருமணம். ஊர் பெரியவர் ஆதிமூலமும் கிராமத்திலிருந்து வந்திருந்த பாவலரும் வாழ்த்துரை வழங்கி கல்யாணத்தை நடத்தி வைத்தார்கள்.

அதன்பிறகு ஒன்றரை வருடங்கள் ஒடிவிட்டிருந்தன. ஒரு கனவைப்போல இவற்றையெல்லாம் அந்த இரவு முழுதும் நினைத்திருந்தாள் அமிர்தம். இடையில் பூண்டியில் செய்த ஆசிரியை வேலையை வீட்டுக்காரர் சொன்னார் என்பதற்காக ராஜினாமா செய்து அது தெரிந்த சின்ன அண்ணன் அவளிடம் பேசாமலே இருந்துவிட்டார். பெரிய அண்ணன்தான் கல்யாணத்திற்குப் பிறகான சீர்களையெல்லாம் செய்தார்.

பொழுது விடிந்துவிட்டிருந்தது. அன்று வழக்கத்திற்கு மாறாக வானம் சற்று கருமையாக இருந்தது. பூசணிக்கொடியில் புதிய பூசணிப்பூக்கள் பூத்திருந்தன. பக்கத்து வீட்டில் சண்முகம் வெள்ளாவியைப் பற்றவைக்கும் சத்தம் கேட்க் ஆரம்பித்தது.

குழந்தைக்குப் பால் கொடுத்தாள் அமிர்தம். எதுவுமே தெரியாத அக்குழந்தை பாலை உள்ளிழுத்துக் குடித்துக்கொண்டிருந்தது. தன்னையறியாமலேயே அமிர்தத்தின் கண்களில் கண்ணீர் வழிய குழந்தையின் மார்பின்மீது சொட்டியது. கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள். உரலின் அருகில் குழந்தையைக் கிடத்திவிட்டு கிணற்றில் கயிற்றை விட்டு தண்ணீரை சேந்தி எடுத்து முகம் கழுவிக்கொண்டாள். புடவையை உதறி இறுக்கிக் கட்டிக்கொண்டு குழந்தையை தோளில்மேல் போட்டுக்கொண்டு நடந்தாள்.பேருந்து நிலையம் நோக்கி அவள் கால்கள் சென்றுக்கொண்டிருந்தன. அவள் மனம் எதையெதையோ எண்ணிக்கொண்டிருந்தது. போய் அம்மாவின் மடியில் படுத்துக்கொள்ள வேண்டும் கதறி அழ வேண்டும் என என்னென்னவோ அவளுக்குத் தோன்றியது.

வேலூர் பஸ் ஏறி உட்கார்ந்து டிக்கெட் எடுத்தாள். குழந்தை சிணுங்கினான். மீண்டும் குழந்தைக்கு பாலூட்டினாள். சன்னல் காற்றில் இலேசாக கண்ணய்ர்ந்தாள். வேலூரில் இறங்கினால் பதினோரு மணிக்கு அவள் கிராமத்துப் பேருந்து கிடைக்கும். நேராக சென்று விடலாம். இல்லையென்றால் அடுத்த பேருந்து ஒரு மணிக்குத்தான். அதில் போனால் மூன்று மணிக்குத்தான் போக முடியும் என்ற கணக்கு தூக்கத்தோடே அவளுள் ஓடிக்கொண்டிருந்தது. வேலூரில் பஸ் இறங்கியதும் அம்மாவுக்குப் பிடித்த கமலா பழமும் கருப்பு திராட்சையையும் வாங்கிக்கொண்டு காத்திருக்க சாத்தம்பாக்கம் பேருந்து வந்தது. ஏறி தனக்கு வாகான இடத்தில் அமர்ந்துகொண்டாள். காலையிலிருந்து எதையும் அவள் சாப்பிடவில்லை ஒரு தேநீர் குடித்தால் தேவலாம் போலிருந்தது. ஆனால் அது முடியாது அதற்குள் பேருந்தை எடுத்துவிட்டார்கள். பேருந்து கிளம்பி நிலையத்தை விட்டு வெளியேறி சி.எம்சி. சத்துவாச்சாரி என ஆட்களை ஏற்றிக்கொண்டே முக்கியச்சாலைக்கு வந்து வேகம் பிடித்தது. விஷாரம் வழியாக ஆற்காடு சென்று ராணிப்பேட்டையைக் கடந்து வாலாஜா பேருந்து நிலையத்தில் வந்து நின்றபோது அவளுக்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. யாராவது ஊர்க்காரர்கள் ஏறுவார்கள் என்று நம்பினாள். கூட்டம் முந்தித் தள்ளியது. அவள் ஊர் மொழிவழக்கு அவள் காதுகளுக்கு எட்டியது.

’அமிர்தம் இப்பத்தான் வர்றியா? வாத்தியாரு வர்ல? நேத்தே வருவேன்னு நினைச்சோம். நாங்காலயில பஸ்சுக்கு வந்து வாய இலைய மார்கெட்டுல போட்டுட்டு வர்றேன்.’ என்று நீளமாகப் பேசி முடித்தார் பின்னிருக்கையில் இடம்பிடித்திருந்த ஜெயப்பால். தொடர்ந்து அவரால் பேச முடியவில்லை. கூட்டம் இருவருக்கும் இடையே தடுப்புச்சுவர்போல நின்று விட்டிருந்தது. ’ஏன் இவரு நேத்தே வருவேன்னு நினச்சாரு’ என யோசித்தாள். குழந்தை அழவே அந்த சிந்தனை அவளுக்குள் அறுந்துபோனது.

பேருந்திலிருந்து இறங்கியதும் ஜெயப்பால் குழந்தையை வாங்கிக்கொண்டார். மெல்ல நடந்தார்கள். கால்களுக்கு இதமாக இருந்தது. எத்தனை முறை இந்தத்தெருவில் அவள் ஓடி விளையாடி இருக்கின்றாள்! நினைக்க மன்சில் இன்னும் துக்கம் அடைத்துக்கொண்டது. அவள் நினைத்த மாதிரியே ஊர் எல்லையில் உள்ள கால்வாயில் தண்ணீர் ஓடியது. அதன் மேல் மெல்லிய அலைகள் பரவியிருந்தன. அந்த நேரத்திலும் தவளைகள் கத்திக்கொண்டிருந்தன. வாத்துகளை கூட்டமாக ஓட்டிகொண்டு எதிரில் வந்தான் செம்பட்டை முடியுடன் ஒரு சிறுவன். அமிர்தத்தைப் பார்த்ததும் அவன் தலையை கீழே போட்டுக்கொண்டான். சின்ன சின்ன நீர்ப்பூச்சிகளை குறிவைத்து வாத்துகள் தண்ணீருக்குள் தலைகளை விட்டு தேடிக்கொண்டே நீந்திக்கொண்டிருந்தன. கால்வாயிலிருந்து ஏறும் இடத்தில் கால்களை அலசிக்கொண்டு ஏறினாள். குழந்தையை ஜெயப்பாலிடமிருந்து வாங்கிக்கொண்டாள்.

’ஏங்கொழந்த இப்பத்தான் வர்றீயா?’ என்று கேட்டாள் அன்னம் சித்தி. அன்னம் சித்தி கால்வாய்க்கரையில் மாரியம்மா கோயிலுக்குப் பக்கத்திலே இருப்பவள். யார் வருகிறார்கள் போகிறார்கள் என்பது அவளுக்கு அத்துப்படி. அவள் கண்களில் ஏதோ பரிதாபம் இழையோடியது. அதை அமிர்தம் கவனிக்கவில்லை. கோயிலைக் கடந்து ரேடியோரூமைத் தாண்டி நடந்தாள், சின்ன அண்ணன் எசேக்கியல் வீட்டு அகன்ற திண்ணையில் உட்கார்ந்திருந்தான். அவனைக் கட்டிக்கொண்டு அழ வேண்டும் போலிருந்தது. ஆனால் இருவரும் பார்வையத் தவிர்த்துக்கொண்டனர். பால் சொசைட்டிக்காகப் புதிதாக கட்டப்பட்டிருந்த கட்டிடத்தில் வெளியே நாய் ஒன்று சுற்றிக்கொண்டிருந்தது.

வீடு நெருங்க நெருங்க வேகமாக நடந்தாள். எல்லாவற்றையும் விட்டுவிட்டு அம்மாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஓவெனக் கதறி அழவேண்டும் என்று நினைத்தாள். வீட்டிற்குள் போகவும் அண்ணி வெளியே வரவும் சரியாக இருந்தது. கையில் வைத்திருந்த கஞ்சி குடிக்கும் கட்றாவை கீழே போட்டுவிட்டு குழந்தையை கையில் வாங்கிக்கொண்டு தேம்பிதேம்பி அண்ணி அழ ஒன்றுமே புரியவில்லை அமிர்தத்துக்கு.’பாப்பா அம்மாவுக்கு ரெண்டுநாளா ஒடம்பே சரியில்ல; எதுவுமே இறங்கல; கண்ணத் தொறக்கவே முடியல’ என்று சொல்லி ஓவென அழுகையைத் தொடர அம்மாவை கிடத்தி வைத்திருந்த வீட்டிற்குள் ஓடினாள்.

அம்மா படுக்க வைக்கப்பட்டிருந்தாள். முகம் வீங்கியிருந்தது. வீக்கத்திற்குள் கண்கள் புதைந்திருந்தன. கண்களை திறக்க முடியவில்லை. கைகால்களும் வீங்கியிருந்தன. கிட்டே போனாள் அமிர்தம். அவளால் இப்போது அழ முடியவில்லை. ’யம்மா எம்மா நா அமிர்தம் வந்திருக்கேன். குழந்தைய தூக்கிட்டு வந்திருக்கேன். கண்ண தொறந்து பாரு’ காதோரம் சென்று கெஞ்சினாள். அம்மாவின் கண்களிலிருந்து நீர் வடிந்து காதுகளைத் தொட்டது. கண்கள் மெல்ல மேலே வர ஆரம்பித்தன. ஏறக்குறைய மூன்று மணி ஆகியிருந்தது. ‘இந்தா இந்த பால கொஞ்சம் வுடுமா.ரெண்டு நாளா ஒண்ணுமே சாப்டல’ ஒரு சின்ன டம்ளரில் பாலையும் கரண்டியையும் கொண்டு வந்து கொடுத்தார்கள். அமிர்தம் ’ம்மா குடிம்மா’ என்று கூறிக்கொண்டே கரண்டியில் பாலை அள்ளி ஊட்டினாள். கொஞ்சம் கொஞ்சமாக பால் உள்ளே இறங்கியது. ’இந்தப் புள்ளைய பாக்கணுனுதான் இந்தம்மா நெனச்சி இப்டியிருக்கு’ என்று குழந்தையைக் காட்டினார்கள். அம்மா பெரிதும் முயற்சி எடுத்து கண்களைத் திறந்துப் பார்த்தாள். அண்ணிதான் அம்மாவை தலையைப் பிடித்து முதுகைத் தூக்கி சுவரில் சாய்த்து உட்கார வைத்தாள். குழந்தையை மடியில் கிடத்தினார்கள். குழந்தை பாட்டியின் மடிமீது படுத்துக்கொண்டு கைகளையும் காலையும் யாரோடோ சண்டை போடுவதைப் போல ஆட்டிக்கொண்டிருந்தான்.

அன்று மாலை ஆறு மணிக்கெல்லாம் அம்மாவின் வீக்கம் குறைந்திருந்தது. முகம் தெளிவாகியது. கம்மிய குரலில் அம்மா கேட்டாள் ‘யாமா வாத்தியார் வரல?’ ‘அவருக்கு எதோ முக்கியமான வேல இருக்குன்னு என்னய அனுப்புனாரு. நாளக்கி வராங்கலாம்’ என்று கையை அதிகமாக சைகை காட்டி பேசினாள் அமிர்தம். அம்மா புரிந்துகொண்டதைப் புன்னகையால் சொன்னாள்.

இரவு, பாயைப் போட்டு அம்மாவை படுக்க வைத்தாள் அமிர்தம். சூடாக கஞ்சி காய்ச்சி கொடுத்திருந்தாள். ’கொயந்தையை எம்பக்கத்துல போடு’ அம்மா கேட்டதும் குழந்தையைப் படுக்க வைத்தாள். தன்னுடைய தளர்ந்த கைகளால் குழந்தையை அணைத்துக் கொண்டு ஒரு குழந்தையைப் போல கண்களை மூடி தூங்க ஆரம்பித்தாள் அம்மா. ஆழமாக மூச்சை இழுத்துவிடும் சப்தம் வந்தது. அண்ணன் வந்து பார்த்தார். ‘நா பாத்துக்கிறேன் நீ போய் படு’ என அனுப்பிவிட்டு அம்மாவின் புடவைகளை விரித்துப்போட்டுவிட்டு படுத்தாள் அமிர்தம். தன்னுடைய எந்தப் பிரச்சினையும் அவள் நினைவில் இல்லை. தான் வந்ததும் அம்மா எழுந்து உட்கார்ந்தது, குழந்தையைப் பார்த்தது, பேசியது, சாப்பிட்டது எல்லாம் ஒரு நிறைவாக அவள் மனதுள் இருந்தது. அயர்ந்து தூங்கினாள்.

மறுநாள் காலை ஏழு மணி. குழந்தை சத்தமாக அழுதுகொண்டிருந்தான். அமிர்தம் ஆழ்ந்த உறக்கதில் இருக்கின்றாள். பெரிய அண்ணன் வந்து ‘பாப்பா! பாப்பா! கொயந்த அழுவுறான் பாரு’ சத்தமாக கத்தினார். ’இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்லை எழுப்பு அவங்களே’ இன்னும் சத்தம் அதிகமானது.

அமிர்தம் மெல்ல நகர்ந்து அம்மாவிடம் போனாள்.
‘யம்மா யம்மா எம்மா’
சலனமில்லை.
குழந்தைமேலிருந்த கையை தன் கையால் தூக்கினாள் அமிர்தம்.
அம்மாவின் கை சில்லிட்டிருந்தது.
இறுகிபோயிருந்தது.

Friday, October 7, 2011

பரமக்குடி படுகொலை கண்டன கருத்தரங்கம்



பறை விடுதலை இயக்கம் நடத்திய பரமக்குடி படுகொலை கருத்தரங்கம் கடந்த 24.09.2011 அன்று மாலை 6.00 மணியளவில் சென்னை தேவநேயப்பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்றது.


ஆக்கவாளிகளும் பத்திரிகையாளர்களும் சேர்ந்து ஒருங்கிணைத்திருந்த இந்நிகழ்வில் கவிஞர் கரிகாலன் வரவேற்புரையாற்றினார். “அரசயங்கரவாதத்தை எதிர்ப்பதுதான் ஒரு எழுத்தாளனின் முக்கிய பணி. எழுதுவதே ஒரு கலகச்செயல்பாடு என்று பலர் இருக்கின்றனர். இத்தகைய வன்கொடுமைகளைக் கண்டும் அமைதியாகவும் சலனமில்லாமலும் இருக்கும் தமிழ்ச்சமுதாயத்தை என்ன சொல்வது எனத் தெரியவில்லை. ஒரு படைப்பாளி தான் வாழ்கின்ற காலத்தில் நடக்கும் அக்கிரமங்களை எதிர்க்கும் வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். அப்போதுதான் எழுத்தும் வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்கும். ஈழம் சார்ந்த போராட்டங்களில் ஒன்றுபட்ட இலக்கிய புலம் இந்த படுகொலையைக் கண்டு கனத்த மௌனத்தைக் கடைபிடிப்பது ஏன் என்று தெரியவில்லை. பரமக்குடி படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு அரசபயங்கரவாதம் தான் என்பது வெளிப்படையான ஒன்று. இதை எதிர்ப்பதற்காக இணைய வேண்டியவர்கள் இணையாமல் இருப்பது நியாயமல்ல. இந்த வரவேற்புரை என்பது ஏதோ சம்பிரதாயத்திற்கு அல்ல. நம்மீது சுமத்தப்பட்ட இந்த கனத்த சோகத்தைத் தாங்கிக் கொண்டுதான் நாம் இயங்குகிறோம்” என்று கூறி கருத்தரங்கிற்கு வந்திருந்தவர்களை வரவேற்றார்.


கருத்தரங்கில் உரையாற்றிய வழக்கறிஞரும் எழுத்தாளருமான ச.பாலமுருகன் பரமக்குடி படுகொலையின் பின்னணியில் இருக்கும் ஆதிக்க சாதி உளவியலையும் அது அரசு எந்திரங்களில் இயங்கும் விதத்தினையும் விளக்கினார். சந்தைகளை பாதிக்காத அளவுக்குதான் சட்டங்கள் இயற்றப்பட்டன. இதைத்தான் நியோ காலனிசம் என்று சொல்ல வேண்டும். 1993ல் மனித உரிமைப் பாதுகப்புச் சட்டங்கள் வந்தன. அதன்பிறகுதான் பல ஆணையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. ஆனால் அந்த ஆணையங்களின் அதிகார வரம்பு என்பது சந்தையை பாதிக்காத வகையில் மட்டுமே இடுக்கும்படி அதிகாரவர்க்கம் பார்த்துக்கொண்டது. அதனால் தவறு செய்யும் அதிகாரிகளை தண்டிக்கும் சட்டம் எந்த அமைப்பிலும் இல்லை. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியும். ஒருய் லட்சம் தருகிறார்கள் என்றால் கொஞ்சம் போராடியோ வற்புறுத்தியோ அதிகம் கேட்கலாம். அனால் தவறுசெய்த அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க முடியுமா என்றால் அதற்கு வழியில்லை. அது எந்த ஆணையமாக இருந்தாலும் அப்படித்தான். இப்படிப்பட்ட கேள்வி எழுப்ப முடியாத அதிகாரம் காவல்துறை இருக்கிறது. அய்யாவின் ஆட்சியானாலும் அம்மாவின் ஆட்சியானாலும் துப்பாக்கியால் சுடுகிற அதிகார வன்முறையை கேள்வி கேட்க இயலாது. அரசியல் சட்டம் மனிதனுடைய மாண்பைக் காக்க வேண்டும். தலித்துகளுக்குக் கோபம் கொள்ளக் கூடிய தேவை இருக்கிறது. காவல்துறைக்கு என்ன தேவை இருக்கிறது. காவல்துறையைத் தொடர்ந்து வன்மப்படுத்தகிற வேலையை அரசியல்வாதிகள் செய்துகொண்டிருக்கின்றனர். துப்பாக்கிச் சூடு நடப்பது ஜனநாயகத்தின் பெரிய அவமானம்’ என்று உரையாற்றினார்.


எவிடன்ஸ் கதிர் அவர்கள் உரையாற்றிய போது, பரமக்குடியில் நடந்த படுகொலை காவல்துறையின் சாதி மனோபாவத்தின் வெளிப்பாடு அல்லது அடையாளம். பல ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து வந்தபிறகு ஜான்பாண்டியன் அவர்கள் சுற்றுப்பயணத்தை நடத்தினார். அவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதைக்கண்டித்த தலித்துகள் 26 பேரை அபிராம் காவல் நிலையத்தில் வைத்து வதைத்தார்கள். இது வெளிவராத செய்தி. தேவர்சிலை மீது அவமதிப்பு நடத்தியபோது காவல்துறை ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவரைக் கைது செய்தது. ஆனால் தேவரை இழிவாக எழுதினார்கள் என்று பொய் சொல்லி பழனிக்கும்மர்சட்டத்திற்குப் புறம்பாக கூடுகின்ற கூட்டத்தை எப்படிக் கலைக்கவேண்டும் என்பதற்கு கேரள காவல் அறிக்கை 1970 என்ன கூறுகிறது என்றால் தடியடி நடத்தும்போது தடிக்கும் அடிக்கப்படுகிறவருக்கும் இடைவெளி அரையடியாகத்தான் இருக்கவேண்டும். அடிக்கும்போது உடலின் மென்மையானப் பகுதிகளில்தான் அடிக்க வேண்டு. ஆனால் பரமக்குடி கலவரத்தில் கொல்லப்பட்டவர்களில் அடித்தே சித்திரவதை செய்யப்பட்டவர்கள் இருக்கிறார்கள். ஆறுபேரில் மூன்று பேர் அய்ம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள். இருவர் மட்டுந்தான் குருபூஜைக்கு சென்றவர்கள். மீதி நான்குபேர் பொதுமக்கள். நமக்கெல்லாம் ஒரு செய்தி புலனாகவில்லை. நாமெல்லாம் தூக்குதண்டனைக்கு எதிராக கத்துகிறோம். ஆனால் நிறைய பேர் இந்தப் படுகொலையைக் கண்டிக்கக்கூட இல்லையே. கேமிராவுக்கு கட்டுப்பட்டவர்களாக போராட்டங்களை அவர்கள் நடத்துகிறார்கள். பொதுவுடைமைவாதிகளில் சி.பி.எம் கண்டித்தது. ஆனால் சி.பி.ஐயில் தா.பாண்டியன் கண்டிக்கவில்லை, நல்லக்கண்ணு அவர்கள் கண்டிக்கிறார்கள். இது புரியவே இல்லை. நாம் தமிழிதேசிய அரசியலில் இருக்கிறோமோ அல்லது தலித் அரசியலில் இருக்கிறோமே என்று தெரியவில்லை என்று அடக்குமுறை சட்டங்களின் பல பிரிவுகளை எடுத்துக்காட்டி எவிடன்ஸ் கதிர் அவர்கள் உரையாற்றினார்.


ஓவியா அவர்கள் காவல்துறையின் வன்முறையால் விளைந்த இந்த படுகொலை நடந்திருக்கிறது. குழந்தையை அடிப்பதுபோல காவல்துறையினர் மக்களை கலைவதற்காக அடித்திருக்கலாம் ஆனால் இப்படி வெறியாட்டம் நடத்துவது ஏற்ற்குகொள்ள முடியாதது. கண்டிக்கத் தக்கது. பெயர்களை வைத்து சாதிய வெறியாடுவது படித்த சமூகத்திற்கு அழகல்ல என்றார்.

பரமக்குடி துப்பாக்கி

அந்த கிராமத்தில் நாங்கள் நுழைந்த போது பெண்கள் கோபமாக எங்களைச் சூழ்ந்துகொண்டார்கள். மதுரையிலிருந்து பரமக்குடிக்குப் போகும் சாலையில் பரமக்குடியின் வெகு அருகில் இருக்கும் சேரிப்பகுதி அது. எச். பரளை என்று அதற்குப் பெயர்.’

இப்படியே போயினு இருந்தா நாங்கெல்லாம் முசுலீமா மாறவேண்டியது தான்’ 2011 செப்டம்பர் மாதம் தலித்துகள்மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத்திற்குப் பிறகு அங்கு பல உண்மை அறியும் குழுக்கள் செல்கின்றன. யார் போனாலும் பரளைக்குக் கண்டிப்பாகச் செல்கிறார்கள். சாலையோரத்திலேயே அமைந்த பகுதி அது என்பதால் சீக்கிரமாக யார் வேண்டுமானாலும் உள்ளே நுழைந்துவிடலாம் என்னும் நிலை பரளைக்கு உண்டு. துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் பரளை மட்டுமல்ல பரமக்குடியில் இருக்கும் தலித் குடியிருப்புகள், பரமக்குடியைச் சுற்றியுள்ள தலித் கிராமங்கள் எதிலும் ஆண்கள் இருப்பதில்லை. பனிரெண்டு வயது சிறுவன் கூட எங்காவது ஒளிந்துகொண்டுதான் இரவைக் கழிக்கவேண்டியிருக்கிறது. அப்படி இருக்கும்போது ஏதாவது பூச்சிப் பொட்டு கடிச்சி எதனா ஆச்சினா என்ன செய்வது என்பது அப்பகுதியில் இருக்கும் பெண்களின் கேள்வி. தாழ்த்தப்பட்டவர்கள் தலைநிமிர்ந்தே வாழக்கூடாதா என்று அப்பெண்கள் கேட்கும் கேள்விகளில் நியாயம் மட்டுமல்ல ஆத்திரம் கோபம் ஏமாற்றம் எல்லாம் அடங்கியிருக்கிறது.

பரமக்குடியில் வன்முறை நிகழ்த்திவிட்டு எச். பரளையிலும் காவல் துறையின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை என்கின்றனர் அம்மக்கள். ஆண்களைக் கொண்டு வந்து விடுங்கள் அல்லது அய்ம்பதாயிரம் பணம் கொடுங்கள் என்று காவல்துறை மிரட்டுகின்றனர். அதன் உச்சகட்டமாக கடந்த செப்டம்பர் 18 ம்தேதி துப்பாக்கிச் சூட்டிற்கு ஒரு வாரத்திற்குப் பின் எச். பரளைக்கு காவல் துறை வண்டிகள் வந்திருக்கின்றன. எல்லோரும் ஓடி ஒளிந்துகொள்ள இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறங்கி இருக்கிறார்கள். அப்பகுதியில் நூற்றைம்பது வீடுகள் இருக்கின்றன. ஒரு தெரு நீளமாகவும் அகலமாகவும் கிழக்கு மேற்காக இருக்கிறது. அப்பகுதியின் முக்கியத் தெருவாக அது இருக்க வேண்டும்.

அத்தெருவில் இறங்கிய அவர்களில் பாதி பேர் காவல்துறையின் சீருடையில் இருக்கிறார்கள், மீதி பேர் சாதரண உடையில் இருக்கிறார்கள். எல்லாரும் காவலர்களா அல்லது ஆட்களை காவல்துறையே திரட்டி வந்ததா என்று அம்மக்களால் தீர்மானமாக கூற இயலவில்லை.வீடுகளில் பதுங்கிக்கொண்டு அவர்கள் என்ன நடக்கிறது என பார்த்துக்கொண்டிருந்திருக்கின்றனர். சீருடையில் இல்லாதவர்களில் பெரும்பாலோர் தலைகளில் திடீரென தலித் இயக்கங்களின் கொடிகளைக் கட்டிக்கொண்டனர். சீருடையில் இருக்கும் காவல் துறையினர் கைகளில் தற்காப்பு அரண்களாக இருக்கும் கருவிகளை எடுத்துக்கொண்டனர். திடீரென்று “போலீஸ் ஒழிக’ என்னும் சப்தம் கேட்க மீண்டும் கலவரம் தொடங்கிவிட்டதாக தலித்மக்கள் அஞ்சி நடுங்க கல்லெறிதல் நடைபெற்று இருக்கிறது. அவ்வளவு கற்களை எங்கிருந்து எடுத்து வந்திருப்பார்கள் என்று தெரியவில்லை. அவ்வளவு கற்கள் அந்தப்பகுதியில் எங்கும் உடனே கிடைக்க வாய்ப்பில்லை.

ஒருபக்கம் இருப்பவர்கள் போலிஸ் ஒழிக என கல்லடிப்பதும் உடனே எதிர்ப்பக்கமுள்ள சீருடை அணிந்த காவலர்கள் பின்வாங்கி ஓடுவதும் என அங்கே நிகழ்ந்திருக்கிறது. இதை இரண்டு மூன்று கேமிராக்களை வைத்து படமெடுத்து இருக்கின்றனர். இறுதியில் இது காவல் துறையின் வேலை என்பதை உணர்ந்த பெண்களில் சிலர் வந்து என்ன நடக்கிறது எனக் கேட்க, “கலவரம் நடந்தால் எப்படி தடுக்க வேண்டும் என பயிற்சி எடுப்பதாகச் சொல்லியிருக்கின்றனர் காவலர்கள்.

கலவரம் நடந்தால் அதைத் தடுப்பதற்கானப் பயிற்சியை தலித் மக்கள் வாழும் இடத்தில் தான் எடுக்க வேண்டுமா? அதுவும் துப்பாக்கிச் சூடு நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் இப்படிப்பட்ட நடவடிக்கையை எதற்காக காவல்துறையால் எடுக்கப்படுகிறது? தலித் மக்கள் எழுச்சி அடைந்துவிடக்கூடாது என்பதற்காக காவல்துறை நடத்தும் அச்சுறுத்தல் நாடகம் இது என்பது மிகவும் எளிதாகப் புரியும் உண்மை. மேலும் இத்தகைய செயல்கள் ஏன் காவல்துறையால் கையெடுக்கப்படுகிறது என்பது நாம் நாட்களை பரமக்குடி துப்பாக்கிச்சூடு வரை திருப்பினால் தெரியும்.

துப்பாக்கிச் சூடு பற்றிய உண்மை நிலைகளை அறிய எழுத்தாளர்கள்,இதழியலாளர்கள்,பேராசிரியர்கள்,சமூகவியலாளர்கள் அடங்கிய ஒரு குழுவோடு ஸ்டாலின் ராஜாங்கத்தின் ஏற்பாட்டால் நாம் பரமக்குடி மற்றும் பிறபகுதிளுக்குச் சென்றிருந்தோம்.

20ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவராக இருக்கும் திரு.அருண்ராய் அவர்களை எங்களுடைய குழு சென்று சந்தித்தது. மிகவும் இளையவராக இருந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் எங்கள் குழுவினர் பல கேள்விகளை முன் வைத்தோம். அப்படி முன்வைக்கும் எல்லா கேள்விகளுக்கும் அவரால் பதில்களைத் தர முடிந்தது. தலித்துகள் மீது இப்படிப்பட்ட துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றால் சம்மந்தப்பட்ட மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் நிகழ்வு நடந்த இடத்தில் ஒரு மணி நேரத்தில் இருக்க வேண்டும் என்பது எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமைத் தடை சட்டம் 1989 இன் ஒரு பிரிவு,அதனடிப்படையில் நீங்கள் சென்றீர்களா என்று கேட்டோம். அதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சாலைகள் எல்லாம் மறிக்கப்பட்டதால் அவ்விடத்திற்குப் போகமுடியவில்லை என்றார், மேலும் செந்தில்வேலன் போன்ற காவல் துறை அதிகாரிகளே தாக்கப்பட்டபோது நான் எப்படி அங்கே போக முடியும்? என்றார்.

ஆனால் துப்பாக்கிச்சூடு குறித்துக் கேட்ட போது அவர் துப்பாக்கிச் சூட்டிற்கு தான் ஆணையிடவில்லை என்றும் அது அங்கிருக்கிருக்கும் அதிகாரிகளே எடுத்த முடிவு என்று கூறினார். துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்த மக்கள் சொன்ன சில செய்திகளை நாம் மாவட்ட ஆட்சித்தலைவரோடு பகிர்ந்துகொண்டோம். அதில் மக்கள் மேல் கற்களை எறிவதற்கு காவலர்களே பிளாஸ்டிக் சாக்குப் பையில் கற்களைக் கொண்டுவந்தனர் என்ற குற்றச்சாட்டைக் கூறினோம். அதற்கு அவர் மறுத்தார். மக்கள் தான் கொண்டு வந்தனர். என்று கூறினார். ஆனால் நீங்கள் எச். பரளையின் நிகழ்ச்சியை மீண்டும் நினைவு கூர்ந்தால் யார் கல்லை எடுத்து வந்திருப்பார்கள் என்பது எளிதாகப் புரிந்துவிடும்.

சரி அது இருக்கட்டும். அடுத்ததாக துப்பாக்கிச் சூடு எவ்வளவு நேரம் நடந்திருக்கும்? காலை சுமார் 10.30க்கு ஆரம்பித்த காவல்துறையினரின் தாக்குதல் மாலை நான்கு மணிவரை நீடித்திருக்கிறது. தலித் தலைவர் ஜான்பாண்டியன் அவர்கள் கைது செய்யப்பட்டார் எனக் கேள்விப்பட்ட உடனே மக்கள் அதற்கு தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மக்கள் அதிகமாகக் கூடினார்கள் என்றால் அதைக் கலைப்பதற்கு காவல் துறையினருக்கு பல வழிகள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் மக்களைத் தாக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் மக்கள் கூட்டம் சொல்லும்படியாகக் கூட இல்லை என்று பார்த்தவர்கள் சொல்லியிருக்கின்றனர்.

ஜான் பாண்டியனை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நுழைவதற்குத் தடையாக அவரை தூத்துக்குடியில் கைது செய்து வல்லநாடு காவல்துறை துப்பாக்கிச்சுடும் பயிற்சியகத்தில் கொண்டுபோய் வைக்கப்படுகிறார். அவர் மீது புகார் இல்லை. நீதிபதியிடம் அவர் சமர்ப்பிக்கப் படவில்லை. ஆனால் நிர்வாகம் அவரை காட்டுக்குள் இருக்கும் ஓர் இடத்திற்கு அழைத்துச் செல்கிறது, அவ்விடம் என்கவுண்ட்டர்கள் செய்வதற்கான இடம் என்று அறியப்பட்ட ஒன்று. இதை அறிந்த மக்கள் ஆத்திரமுறுகின்றனர். தென் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அவருடைய ஆதரவாளர்கள் இந்தக் கைதைக் கண்டித்துப் போராடுகின்றனர். இப்படி பரமக்குடியிலும் போராட்டம் நடைபெறுகிறது. இந்த நாளில் தான் பரமக்குடியிலிருக்கும் தியாகி இம்மானுவேல் சேகரன் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு மக்கள் வந்துகொண்டிருந்தனர். அப்படி வந்த அனைவரும் ஜான்பாண்டியனின் ஆதரவாளர்களும் கிடையாது. அப்படியென்றால் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பார்கள் என்று சொல்லவும் முடியாது. பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடைபெறுவதற்கு பத்துநிமிடங்களுக்கு முன் ஆளுங்கட்சியினர் அஞ்சலி செலுத்தியிருக்கின்றனர். அவர்கள் முடித்து சென்றபிறகுதான் துப்பாக்கிச்சூடே நடந்திருக்கிறது.

இப்படி குறைந்த அளவே அதாவது அய்ம்பது ஆர்ப்பாட்டக்காரர்களையும் இறுதி அஞ்சலி செலுத்த வந்த கூட்டத்தையும் பகுத்துப் பார்க்கும் அரசியல் பார்வையும் சமூக அவதானிப்பும் இல்லாதவர்கள்தான் எல்லோருமே ஆர்ப்பாடம் செய்பவர்கள் என நினைத்து தலித்துகளைத் தாக்கியிருக்கின்றனர், சுட்டுத் தள்ளியிருக்கின்றனர்.

துப்பாக்கிச்சூடு, காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையின்படி பிற்பகல் 12.00 மணிக்கு ஆரம்பித்து இருக்கிறது. முப்பது முறை சுட்டிருக்கின்றனர். 303, 410 மஸ்கட் மற்றும் கைத்துப்பாக்கி ஆகிய துப்பாக்கி வகைகள் மூலம் சுட்டனர். இதிலிருந்தே இது கூட்டத்தைக்கலைப்பதற்காக நடத்தப்பட்டது அல்ல என்பது தெரியும். அடிபட்டவர்கள் உடனடியாக எந்தவிதமான மருத்துவ உதவிக்கும் உட்படுத்தப்படவில்லை.

பதினொரு மணிக்குத் தாக்கப்பட்டவர்களும் 3.00 மணிக்குத் தாக்கப்பட்டவர்களும் ஒன்றாக ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில் தீர்ப்புக்கனியும் வெள்ளைச்சாமியும் உயிரோடிருந்திருக்கின்றனர். உடனடியாக மருத்துவ உதவிகள் தரப்பட்டிருப்பின் உயிர் பிழைத்திருந்திருப்பார்கள்.

ஜெயப்பால் சுடப்பட்டு வீழ்ந்த பிறகு அவரைக் காப்பாற்ற ஒரு முதியவர் அய்யோ எங்க பரம்பரையையே அழிக்கிறீங்களே’ என்று அங்கலாய்த்து அவரைத் தூக்கச் செல்ல அவரையும் சுட்டு இருக்கிறார்கள். பிணமாக இருந்தவரை அடையாளம் காணக்கூடாது என்பதற்காக அருகில் இருக்கும் டிஜிட்டல் பேனரைக் கிழித்து போர்த்தியிருக்கின்றனர். கையில் கிடைத்தவர்களையெல்லாம் கண்மூடி தாக்கியிருக்கிறார்கள். அய்ந்து அடி நீளமுள்ள தடிகளைக் கொண்டு தாக்கியிருக்கின்றனர். இப்படி தாக்கப்பட்டு இறந்தவர்கள் இரண்டு பேர். நான்கு பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியாகி இருக்கின்றனர்.

துப்பாக்கிச்சூடு குறித்த புகாரைப் பரமக்குடி காவல்நிலையத்தில் தந்தவர் அக்காவல் நிலையத்திலேயே ஆய்வாளராகப் பணியாற்றும் சிவக்குமார் என்பவர். அவர் புகாரில் தான் பலமாகத் தாக்கப்பட்டதால் சுட்டதாகக் கூறுகிறார். பலமாகத் தாக்கப்பட்டவர் எப்படி தன்னுடைய கைத்துப்பாக்கியை எடுத்துச் சுட முடியும்? ஆனால் அந்தத் தகவல் அறிக்கையின்படி தாசில்தார் உத்தரவு தந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திலேயே தாசில்தாரைவிட உயரதிகாரியான ஆர்.டி.ஓ இருக்கும்போது தாசில்தார் எப்படி துப்பாக்கிச்சூட்டிற்கான ஆணையைத் தந்தார்?

இன்னும் நிறைய கேள்விகள் இருக்கின்றன.

நாங்கள் சந்திக்க சென்ற போது பலத்த காயம் அடைந்ததாகச் சொல்லப்படும் பரமக்குடி காவல்நிலைய ஆய்வாளர் சிவக்குமார் அவர்கள் நல்ல ஆரோக்கியத்தோடு இருந்தார். விசாரணைக் கமிஷன் போடப்பட்டிருப்பதால் தான் எதுவும் பேசமுடியாது என்று கூறி எங்களிடம் பேசாமல் பக்கத்திலிருக்கும் அவருடைய வாகனத்தருகில் சென்று கைப்பேசியில் பேச ஆரம்பித்தவரை பத்துநிமிடங்கள் நாங்கள் பார்த்துக்கொண்டே இருந்தோம். ஆனால் அவர் வருவது மாதிரி தெரியாததால் நாங்கள் காவல் நிலையத்திலிருந்து வெளியேறிவிட்டோம்.

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 என்று முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கிறார்கள். சுடப்பட்டது 30 முறைகள் என்ற கணக்குக்காக அப்படிச் சொல்லப்படுகிறது. துப்பாக்கி குண்டடிப்பட்டவர்களைத் தவிர காவலர்களின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் ஏராளம். மதுரை ராசாசி மருத்துவமனையிலும், அப்பலோ மருத்துவமனையிலும் உள்நோயாளிகளாக இருப்பவர்களைப் பார்த்தால் தெரியும் எப்படிப்பட்ட தாக்குதலை ஆயுதமில்லாத உடல் வலிமையில்லாத தலித் மக்கள் மீது காவல்துறையினர் நிகழ்த்தியிருக்கின்றனர் என்பது.

ஒருவருக்கு வலது காலின் பாதத்திலிருந்து அவருடைய உயிர்நிலை வரை ஓர் அங்குலத்திற்கு ஓரிடம் என்ற வகையில் காயம் ஏற்படு தையல் போடப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒரு கையும் காலும் காலும் உடைக்கப்பட்டிருக்கிறது. ஓர் இளைஞரின் முழங்கால் எலும்பு உடைக்கப்பட்டிருக்கிறது. ஒருவருக்கு உடலெல்லாம் அடி. அடிபடாத இடம் அவருடைய உடம்பில் இல்லை. ஓங்கி அவருடைய உயிர் நிலையில் மிதித்திருக்கிறார்கள். அதனால் அவருடைய சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்படித் தனித்தனியாக இருந்தாலும் எல்லாருக்கும் முதுகிலும் புறங்ககைகளிலும் மிக அதிகமான தடி யடிகள் விழுந்ததினால் ஏற்பட்டிருக்கிற காயங்கள் பார்க்க முடியாமல் அழுகையை வர வழைக்கின்றன. ஈழத் தாக்குதல்களுக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல இது.

ஒருவர் தனியாக சிக்கிக் கொண்டால் பத்துபேராக கையில் ஆயுதங்களை வைத்திருக்கும் காவலர்கள் அவரைக் கைது செய்து விடலாம். ஆனால் அறத்திற்கு மாறாக தனியாளாக மாட்டிக்கொண்டவர்களை எல்லாம் கும்பலாக தங்களிடமிருக்கும் ஆயுதங்களைக் கொண்டு தாக்குவது என்பது எந்த போலிஸ் சட்டத்தில் இருக்கிறது? ஒருவரால் பலருக்கு ஆபத்தா? பலரால் ஒருவருக்கு ஆபத்தா? என்று பாமரத்தனமாகக் கூட ஒரு கேள்வியை நாம் வைக்கலாம்.

இப்படித் தாக்கப்பட்டவர்கள் தான் கற்களை எடுத்துவந்திருக்கிறார்கள் என்கிறார்கள் அதிகாரிகள். தங்கள் விடுதலைக்காக உயிர்கொடுத்த ஒரு தலைவனுக்கு மலர் மாலையை எடுத்து வந்தவர்கள் அவர்கள்.

ஆனால் தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம், தியாகி இம்மானுவேல் பேரவையின் சார்பில் நடத்தப்படும் மரியாதைச் செலுத்தும் நிகழ்ச்சிக்கு யாரும் போகக்கூடாது என்று செப்டம்பர் 11ந்தேதிக்கு முன்பிருந்தே காவல்துறை மக்களை மிரட்டி இருக்கிறது. அப்படிப் போவதென்றால் யார் யார் செல்கிறார்களோ அவர்கள் பெயர்களை காவல்நிலையத்தில் தெரிவித்துவிட்டு செல்லவேண்டும் என மக்கள் கூறியிருக்கின்றனர். அது மட்டுமல்ல கிராமங்களிலிருக்கும் ஆதிக்க சாதியினரும் விழாவுக்குப் போகக்கூடாது என மிரட்டி இருக்கிறார்கள். இவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்துதான் ஆயுதங்களைத் தயாராக வைத்திருந்தனர் காவலர்கள் என்பது புலனாகிறது.

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு முன்பே மதுரை சிந்தாமணிப் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இது நடந்து ஒரு மணிநேரம் கழித்துதான் தனக்குத் தெரியும் என ஆகச்சிறந்த ஆட்சியராக நாம் கருதும் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்து இருக்கிறார்கள். அந்தத் துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமாக அதிகாரிகள் சொல்வது தாமிரபரணி படுகொலைக்குச் சொல்லப்பட்ட காரணம்தான். இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு புகார் அளித்திருப்பவர் காளியம்மா என்னும் பெண் காவலர். அவர் கூறும் காரணம் என்னவாக இருக்கும் என்று நாம் சொல்லவே தேவையில்லை. பெண் காவலர்களை அவர்களின் மனித மாண்புக்கு எதிராக அவர்களையே பேசச்சொல்லும் அரசதிகாரத்தின் உளவியலின் மோசமான அம்சம் இது. தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு மரியாதைச் செலுத்த பாட்டம் என்னும் ஊரிலிருந்து திறந்தநிலை வண்டியில் முழக்கங்களை எழுப்பி வந்தவர்களை சிந்தாமணியில் காவல் இருந்த காவலர்கள் தடுத்து இப்படி போகக்கூடாது என்று கூற அதனால் வாக்குவாதம் ஏற்பட்டு அந்த வண்டியிலிருந்து வந்தவர்கள் போய்விட்டார்கள். ஆனால் அதன்பிறகு டாட்டா சுமோ வில் பரமக்குடிக்கு மரியாதை செலுத்துவதற்காக வந்த தலித் மக்களைத் தடுத்து நிறுத்தி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது. ஏன் சுடுகிறார்கள் என்று தெரியாமலே மக்கள் சிதறி ஓட ஆரம்பித்திருக்கிறார்கள். என்ன தவறு செய்தோம் என்றே தெரியாமல் தாக்குதலுக்கு இலக்கான அம்மக்களின் நிலையை அரசு புரிந்துகொள்ள முயற்சி செய்யவில்லை என்பது தான் உண்மை. துப்பாக்கி சூடு நடத்திய காவல் அதிகாரி இப்போது பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதனால் பாய்ந்த குண்டுகள் திரும்பி அவருடைய துப்பாக்கிக்குள் மீண்டும் சென்றுவிடுமா என்ன?

அதேபோல் இளையான்குடி துப்பாக்கிச் சூடு. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பரமக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இளயான்குடி புறவழிச்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட தலித் இளைஞர்கள் பத்துபேர் கூட இருக்கமாட்டார்களாம். அவர்களைக் கலைக்க வேண்டி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் ஆனந்த் என்னும் தலித் இளைஞரின் கையில் குண்டுபாய்ந்து காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்த உடனே கூடைகளில் கற்களை எடுத்துவந்து சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகள் போட்டிருக்கிறார்கள். அதிகமான கற்களைக் கொண்டு தலித்துகள் காவல்துறையினரைத் தாக்கினார்கள் என்று அதை படம்பிடித்தும் சென்றிருக்கின்றனர். காவல்துறைக்கு எத்தனையோ சலுகைகளை வழங்குகின்ற அரசு கற்களுக்கான சலுகைகளையும் வழங்க வேண்டும். இல்லை என்றால் எச்.பரளையில், பரமக்குடியில், இளையான்குடியில் இப்படி கற்களைக் கொண்டு கலவரத்தை எப்படி நடத்துவதாம்.

துப்பாக்கிச்சூட்டில் பலியான ஜெயபாலின் ஊரான மஞ்சூருக்குச் சென்றோம். ஊர் வெறிச்சோடி இருந்தது. திருமணமான ஓர் ஆண்டுகூட ஆகாத அவரின் மனைவி காயத்ரியைச் சந்தித்தோம். இருவருக்கும் கலப்புத்திருமணம். வளைகாப்புக்கு தாய்வீட்டில் இருக்கும் மனைவியைப் பார்க்க வந்தவருக்கு குண்டுகள் பரிசாகக் கிடைத்திருக்கிறது. ஜெயபாலைக் கொன்று அவரை கொஞ்சமும் இரக்கமின்றி கட்டையால் முட்டுக்கொடுத்து தூக்கி வந்து அருகில் இருந்த பேனரைக் கிழித்து மூடியிருக்கிறார்கள்.

தன்னுடைய கணவன் வரவில்லை என்று குடும்பத்தோடு தேடியிருக்கிறார் காயத்ரி. உறவினர்கள் தேடி இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எந்தவிதமான செய்தியும் தெரியாமலேயே இருந்திருக்கிறது. ஜெயபாலின் கைப்பேசிக்கு தொடர்பு கொள்ள இவ்வளவு நேரம் அணைத்து வைக்கப்பட்ட கைப்பேசி இயங்க யாரோ போலீஸ்காரர் எடுத்துப் பேசி எதுவுமே சொல்லாமல் போனைத் துண்டித்து மீண்டும் அணைத்துவிட்டு இருக்கிறார். எனவே குடும்ப உறுப்பினர்கள் ராமநாதபுரம் மருத்துவமனைக்குச் சென்று பார்த்திருக்கிறார்கள். அங்கே அவருடைய உடலை அடையாளம் காணக்கூட காவல்துறை மறுத்திருக்கிறது. பின்னர் ,மீண்டும் கைப்பேசியில் தொடர்பு கொள்ள குண்டுப் பட்டு இறந்த செய்தியை காவல்துறை உறுதிப்படுத்த அதற்குள் ஜெயபால் கொலையுண்ட செய்தி தொலைகாட்சிகளில் ஒலிபரப்பாகியிருக்கின்றது. உடலை வாங்குவதற்கு அவர்கள் படாத பாடு பட்டிருக்கிறார்கள்.

இப்படி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது.இத்தகைய கொடூரத்தைக் காவல்துறையினர் நிகழ்த்தி பரமக்குடியில் தலித்துகளின் மேல் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தலித் மாணவர் பழனிக்குமார் கொல்லப்பட்டது செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி. இந்தக் கொலை நடத்தப்பட்டதன் பின்னணி என்பதே தலித்துகள் யாரும் தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு மரியாதை அளிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என்னும் எச்சரிக்கைத்தான்.

ஆப்ப நாட்டு மறவர் சங்கம் என்னும் அமைப்பு விடுத்துள்ள அறைகூவலில் இது தெளிவாகத் தெரிகிறது. முத்துராமலிங்கத்தின் குருபூஜையைப் போலவே இம்மானுவேலின் மரியாதை நிகழ்ச்சியும் லட்சக்கணக்கான மக்கள் திரளுகின்ற விழாவாக மாறி இருக்கிறது. அதை அரசுவிழாவாக மாற்றாமல் நாம் தடுப்பதற்காக அணிதிரளவேண்டும் என்னும் அந்த சுற்றறிக்கை கவனத்தில் கொள்ளத் தக்கது.

அது மட்டுமல்ல மின்சாரவாரிய தலித் பணியாளர்கள் வைத்த பதாகையில் இம்மானுவேல் சேகரனைக் குறிப்பிடும்போது “தெய்வத்திருமகன்’ ‘தேசியத் தலைவர்’ என்னும் புகழ்மொழிகளைப் போட்டிருக்கின்றனர். இது முத்துராமலிங்கத்திற்கு மட்டுந்தான் சொந்தம் என்று அந்தப் பதாகையை எடுக்க வேண்டும் என ஆதிக்க சாதியினர் வற்புறுத்த காவல்துறையும் அதற்கு ஒத்துழைத்து தலித்துகளை அப்பதாகைகளை எடுத்துவிட வலியுறுத்தியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டிற்கான உளவியல் காரணம் என்பது தலித்துகள் அதிக்கப்படியாக இது போன்ற பண்பாட்டு விழாக்களில் ஒன்றாகிவிடக்கூடாது. தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 50 வது நினைவு நாளிலிருந்து அவருடைய கல்லறைக்கு வரும் மக்களின் எண்ணிக்கைக் கூடிக்கொண்டே இருக்கிறது என்று தியாகி இம்மானுவேல் பேரவையின் தலைவர் பூ.சந்திரபோஸ் கூறியது நினைவில் கொள்ள வேண்டியது.

இதைத் தடுப்பதற்காக காவல்துறையில் உள்ள ஆதிக்க சாதியினர் இந்த நிகழ்ச்சியை சரியாகப்பயன்படுத்திக்கொண்டனர். அப்படி என்றால் தலித்துகளை இவ்வாறு கொடுமையாக அடிப்பது என்பது அப்போது எடுத்த முடிவல்ல என்பது நன்றாக விளங்கும். அவர்களின் நெஞ்சில் எப்போதும் இருக்கும் சாதீய வன்மம் உருக்கொண்டு வெளிவர இது சரியான தருணாமாகிவிட்டது என்பதுதான் உண்மை. இதில் தேவர் சாதியை சார்ந்தவர்கள் மட்டுந்தான் என்றில்லை. இத்தகைய சூழலில் ஆதிக்கசாதியினரின் அனைத்துப் பிரிவினைகளும் ஒன்றாக மாறிவிடுவார்கள் என்பது நாம் கண்கூடாக காணுகின்ற ஒன்றாக இருக்கிறது.

எனவே இத்தகைய பகுதியிகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இருக்கும் ஆதிக்கசாதி காவல்துறையினரை வேறு மாவட்டங்களுக்கு மாற்றவேண்டும். அவர்கள் உயர்ந்த பதவி வகிப்பவர்களானாலும் அடிமட்ட காவலர்களானாலும் அவர்களுக்கு இத்தகைய இடங்களில் பணிவாய்ப்பு என்பதைத் தரக்கூடாது.

இத்தகைய நேரங்களில் காவல்துறையினர் மற்றும் முடிவெடுக்கும் நிலையிலிருக்கும் அதிகாரிகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்னும் உளவியல் பயிற்சியையும் இந்திய, தமிழக இனவரைவியல், பண்பாட்டு வாழ்வியல், சமூகப் படியாக்கம் ஆகியவற்றை சரியான நீள அகலத்தில் பார்க்கும் பார்வையை வளர்க்கும் பயிற்சிகளைத் தரவேண்டும்.

நாங்கள் சென்று பார்த்த தலித் பகுதிகள் எல்லாம் தலித்துகள் குடிப்பதற்குக்கூட தண்ணீர் இல்லாதவர்களாக, வேலை வாய்ப்புகள் ஏதுமற்றவர்களாக, நிலமற்றவர்களாக, ஆதிக்கசாதியினரின் நிலத்தையோ அவர்களின் கைகளையோ எதிர்ப்பார்த்து இருப்பவர்களாகவே இருக்கின்றனர். விவசாயம் என்பது முற்றிலும் அற்றுப்போன இடங்களாக அக்கிராமங்கள் இருக்கின்றன. குடும்பங்கள் என்றால் ஒரு பகுதியில் 60 முதல் 100 வரைதான் இருக்கின்றன. அதில் வேலைவாய்ப்பு அற்றவர்களையும் வாழ்வியல் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாதவர்களையும் அத்தகைய கிராமங்களை விட்டு குடிபெயர்த்தி வேலைவாய்ப்புகள் உள்ள நகரங்களில் அரசே கொண்டு வந்து வைக்கவேண்டும்.

துப்பாக்கிச் சூடு குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின்மீது யாருக்கும் நம்பிக்கையில்லை. அவர்கள் கண்டிப்பாக மக்களைதான் குற்றம் சொல்வார்கள். எனவே இந்த துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணை என்பது மத்திய புலனாய்வுத்துறையினாரால் நடத்தப்பட வேண்டும் என்பது மக்களின் விருப்பம். அதுவரை துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யவேண்டும்.

பரமக்குடி துப்பாக்கிச் சூடு போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடக்காத வண்ணம் இருக்கவேண்டும் என்றால் மக்கள் சாதிக்கெதிரானப் போராட்டங்களை முன்னேடுப்பதற்கான கருத்தியல்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

Thursday, October 6, 2011

பரமக்குடி துப்பாக்கி சூடு - உண்மை

[பரமக்குடி படுகொலைகள் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டஓவியர் சந்துரு, பேராசிரியர்கள் டி.தருமராஜன், சி.லட்சுமணன், அன்புச்செல்வம், ஸ்டாலின் ராஜாங்கம், எழுத்தாளர்கள் யாழன் ஆதி, ஆதவன் தீட்சண்யா, யுவபாரதி, கவின்மலர், சந்திரா, முத்துக்கிருஷ்ணன், ஜெகன்னாதன், வழக்குரைஞர்கள் பால்ராஜ், பகத்சிங், ராமகிருஷ்ணன், பத்திரிகையாளர்கள் பிரேமா ரேவதி, வையவன் உள்ளிட்ட உண்மை அறியும் குழுவினரின் அறிதல்களின் (Findings) அடிப்படையில்... ]



2011 செப்டம்பர் 11ம் நாள் பரமக்குடியில் காவல்துறை நிகழ்த்திய கலவரத்தினை முழுமையாக ஆராய்வதற்காக கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அடங்கிய 25 பேர் கொண்ட குழுவினர் பரமக்குடியில் பாதிக்கப்பட்ட கிராமங்கள், பாதிக்கப்பட்ட மக்கள், அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்துத் திரட்டிய செய்திகளின் அடிப்படையில் கீழ்கண்ட தரவுகளும், பரிந்துரைகளும் முன் வைக்கப்படுகின்றன. 21.09.11 காலை 11 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பிற்காக வெளியிடப்படும் சுருக்கமான அறிக்கை இது.

• பரமக்குடியில் காவல்துறை நடத்திய வன்முறை குறித்து ஊடகங்களும், அரசாங்கமும் வெளியிட்ட தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை அல்லது மேலோட்டமானவை என்பதை எங்களின் ஆய்வின் மூலம் கண்டோம்.

• திரு. ஜான்பாண்டியன் அவர்களைக் கைது செய்ததால் அவரது ஆதரவாளர்கள் 1000 பேர் சேர்ந்து மறியல் செய்து போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறு செய்து கலவரங்களில் ஈடுபட்டனர் என்று கூறுவது முழுக்க கட்டுக்கதை கற்பனை என்பதை நேரடியான சாட்சியங்கள் (மக்கள், உள்ளூர் தலித் அமைப்புகள், வீடியோ மற்றும் புகைப்பட சாட்சியங்கள்) மூலம் அறிந்தோம். ஜான் பாண்டியனை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் சுமார் 20லிருந்து 30 பேர் மட்டுமே.ஆர்ப்பாட்டம் நடக்கும் போது அஞ்சலி செலுத்தும் பல்வேறு அமைப்பினர் வாகனங்களில் சென்றும் வந்தும் கொண்டிருந்தனர். அதே போல் இம்மானுவேல் குரு பூஜைக்காக போக்குவரத்து வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டு குறிப்பிட்ட அச்சாலை குருபூஜைக்கான பயன்பாட்டில்தான் இருந்து வந்தது. எனவே அன்றைக்கு ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் பெரும் திராளனவர்கள் என்று சொல்வதோ, போக்குவரத்திற்கு இடையூறு செய்தவர்கள் என்று கூறுவதோ காவல்துறையின் வன்முறையை நியாயப்படுத்த வலிந்து சொல்லப்படும் பொய் என்றே அறிகிறோம்.

• மறியல் செய்தவர்களைக் கலைப்பதற்கான முன்னெச்சரிக்கை சமிக்ஞைகள் எதையும் செய்யாமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதை களத்தரவுகள் நிரூபிக்கின்றன. முதல் சூடு நெற்றியை நோக்கியே செலுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான உடல்களில் குண்டு காயம் இடுப்புக்கு மேலே தான் உள்ளது. காலை சுமார் 11.30 மணியளவில் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதும் கூட்டம்சிதறியது. ஆனால் மாலை 5 மணி வரை காவல்துறை துப்பாக்கி சூட்டை மீண்டும் தனித்த முறையில் நடத்தியிருக்கிறது. அதில் மறியலோடு தொடர்பில்லாமல் கையில்கிடைப்போரையெல்லாம் சுட்டதோடு, அவர்களை பிடித்து வந்து கடுமையாகத் தாக்கவும் செய்துள்ளனர் (வீடியோ ஆதாரம்) இவ்வாறு மாலை 4 மணியளவில் தனது இரு சக்கர வாகனத்தை எடுக்க வந்த தீர்ப்புக்கனி என்ற டிப்ளமோ படித்த 21 வயது இளைஞரைப் பிடித்து அடித்தே கொன்றுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

• ஊடகங்களில் வெளியானது போல் காவல் துறையினரது வஜ்ரா வாகனம் பிற வாகனங்களும் மக்களால் தான் கொளுத்தப்பட்டன என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை. தங்களது துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த விரும்பிய காவல் துறையினரே இதில் ஈடுபட்டிருக்கலாம் என்பதைப் பலரின் சாட்சியங்கள் மூலம் சந்தேகமாக கருதுகிறது. ஏனெனில் வஜ்ரா வாகனம் துப்பாக்கிச் சூட்டிற்குப் பின் மக்கள் சிதறி ஓடிவிட்டதால் முழுக்க முழுக்க காவல்துறை கட்டுப்பாட்டில்தான் இருந்தது என்பதை தக்கசான்றுகள் மூலம் அறிகிறோம்.

• சட்டபேரவையில் முதலமைச்சரும், ஊடகங்களும் தெரிவித்ததைப் போல இது இனக்கலவரம் அல்ல. மாறாக எளிமையாக கையாண்டிருக்கக் கூடிய விசயத்தை சிக்கலாக மாற்றிய காவல்துறையின் வன்முறை என்றே சொல்ல
முடிகிறது. ஒடுக்கப்பட்ட தேவேந்திரகுல வேளாளர்களின் அரசியல் எழுச்சியை மட்டுப்படுத்துவது அதன் மூலம் இம்மானுவேல் குருபூஜைக்காக திரளும் அந்த வகுப்பார் மீது சாதிக் காழ்ப்பு கொண்டு செயற்படும் ஆதிக்க வகுப்பினரைத் திருப்திபடுத்துவது என்பதே அரசாங்கம் மற்றும் காவல்துறை ஆகியவற்றின் நோக்கம் என்பதை அறிக்கையின் மூலம் தெரிகிறது.

• துப்பாக்கிச் சூட்டிலும், காவல்துறையின் தாக்குதலாலும் பாதிக்கப்பட்டோரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவில்லை. உரிய 3சிகிச்சையும் உடனடியாக அளிக்கவில்லை. தாக்கப்பட்ட குடும்பத்தாருக்கு உரிய தகவல்களை அளிக்கவில்லை என்று அலைக்கழிக்கப்பட்டுள்ளனர், ஒருவரை உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதை அறியாமலேயே பிணவறைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

• துப்பாக்கிச்சூடு, தாக்குதல் போன்றவற்றோடு நில்லாத காவல்துறை பல்வேறு கிராமங்களிலுள்ள தலித்துகள் மீது பொய் வழக்குகள் புனைந்து அவர்களை கைது செய்யத் தேடிக் கொண்டிருப்பதால் எந்த கிராமத்திலும் இப்போது ஆண்கள் இல்லை. பெண்களும், குழந்தைகளும் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளதை எங்கள் குழுவினர் அறிந்தோம். தலித் மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தும் பொருட்டு காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக எச்.பரளை என்ற கிராமத்தில் 18.09.2011ம் நாளில் பயிற்சி என்ற பெயரில் 30க்கும் மேற்பட்ட போலீசார் தெருவுக்குள் இறங்கி, கற்களை வீசுதல், டயர்களை எரித்தல், இரு தரப்பு மோதல் என்றெல்லாம் இரண்டு மணி நேரமாக முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் பெண்களும், குழந்தைகளும் மட்டுமே இருந்த நிலையில் அச்சமூட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

• வன்முறையாளர்கள் சுட்டதாக காவல்துறை கூறுகிறது. ஆனால் சுடப்பட்ட பேரில் ஒருவர் கூட ஜான்பாண்யன் ஆதரவாளர்களாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

• இத்துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டோர் மற்றும் காயமுற்றோர் குறித்த முழுமையான தகவல்களைச் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களுக்கோ பத்திரிகைகளுக்கோ இதுவரை காவல்துறை அதிகாரப் பூர்வமாக தெரிவிக்கவில்லை. மாறாக அலைக்கழிப்பை ஏற்படுத்துகிறது.

• கலவரத்திற்கு காரணமாக தமிழக அரசு கூறும் பள்ளப்பச்சோரி சம்பவம் முழுக்க இட்டுக்கட்டப்பட்டது. அச்சம்பவத்திற்கும் பரமக்குடி வன்முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதே எம்குழுவின் ஆய்வு. பள்ளப்பச்சேரியில் தேவரை இழிவுப்படுத்தி எழுதியதாக கூறப்படுவதற்கும், பழனிக்குமாருக்கும் எந்த தொடர்பும் இல்லை அவரை இழிப்படுத்தி எழுதியதையோ, எழுதியவரையோ கண்ணுற்றவர் எவருமில்லை. மேலும் எழுதியதாகக் கூறப்படும் இடம் முழுக்க முழுக்க தேவர் வகுப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள இடம். எனவே இச்சம்பவத்திற்கும் பரமக்குடி வன்முறைக்கும் தொடர்பில்லை. ஜான்பாண்டியனை தக்க பாதுகாப்போடு குருபூஜைக்கு காவல்துறையினர் அழைத்து வந்திருக்க முடியும்.

பரிந்துரைகள்

• காவல்துறையின் தாக்குதலால் காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் வழக்குகளுக்கு பயந்து மருத்துவமனையில் சேர்ந்து உரிய சிகிச்சை பெற முடியாத நிலையில் உள்ளனர். மேலும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் வீடு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். எனவே தலித்துகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்.

• தாக்குதலில் இறங்கிய காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். வழக்கு பதிவு செய்தால் அதைSC/STவன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு மாற்றி பாதிக்கப்பட்டோருக்கு அதனடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும்.

• இறந்த குடும்பங்களுக்கு 5 லட்சம் நிவாரணமும், தகுதியானோருக்கு தகுதியான அரசுப் பணிகளையும் வழங்க வேண்டும்.

• இத்தாக்குதல் குறித்து விசாரிக்க அரசு நியமித்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கமிஷன் மீது நம்பிக்கை இல்லை. எனவே சி.பி.ஐ விசாரணை வேண்டும்.

• விரிவான பொது விசாரணை வேண்டும்.

Thursday, June 30, 2011

திசையடங்கா காட்டின் மூலையொன்றில்
தளிர்த்த இளம்பச்சை நிற குருத்தோலையில்
பதிவாகும் சின்ன குயிலின் இசை நரம்புகள்
அடர்ந்து வனமாகும் வேலையில்
பாடலின் பெரும்பரப்பெங்கும்
குயில்தாயின் பால்சுவடுகள்
கொத்திக்கிளறாத பேரமைதியில் காடுறங்கும்
தத்தித் தாவிவரும் புதுப்பாட்டு
அப்போதும் பிரசவமாகும்.

Wednesday, June 22, 2011

சமச்சீர் கல்வி என்னும் சதுரங்கத்தில் வெட்டப்பட்டக் காய்களும் வாழநினைக்கும் ராணிகளும்

கல்வியின் நிலை தமிழ்நாட்டில் இன்று பெரிய கேள்விக் குறியாகியுள்ளது. எந்தப் பாடத்திட்டம் என்று முடிவுபெறாத சூழல் ஒன்றில் சிக்கித் தமிழக மாணவர்கள் நூலறுந்த பட்டத்தின் திண்டாட்டத்தினை உணர்ந்தவர்களாகின்றனர். தமிழகப் பொது மக்களோ கடந்த ஏப்ரல் 13-ந் தேதியிலிருந்து மே 13-ந்தேதி வரை தங்களுடைய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவிட்டதாகவும் இதற்கு மேல் நமக்கும் இதற்கும் எந்தவிதமான சம்மதமும் இல்லை என்று வாழப்போய்விட்டார்கள். இப்போது தவிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் தாங்கள் என்பதையும் மறந்து வெந்ததைத் தின்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

2011 ஜூன் 10-ஆம் திகதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாண்பமை எம்.ஒய். இக்பால், சிவஞானம் ஆகியோர் கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வியை இக்கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளனர். பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரால் தொடுக்கப்பட்ட பொதுநலன் கோரும் மனுவிற்காக அளிக்கப்பட்ட தீர்ப்பு இது. தற்போதைய தமிழக அரசின் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தை அணுகுவதற்காகத் தற்போது டெல்லியில் இருக்கின்றார். கோடை விடுமுறையில் இருக்கும் உச்ச நீதிமன்றத்தில் அவசரகால மனுபோட்டு தற்போது தரப்பட்டிற்கும் தீர்ப்பிற்குத் தடை வாங்கி வந்து தன்னுடைய முதல்வரின் பொற்பாதங்களில் சமர்ப்பித்தால்தான் தன்னுடைய பெயர் அமைச்சரவையில் இருக்கும் என்னும் அவரின் அவஸ்தையினை யார் புரிந்துகொள்ள முடியும்?

சரி அது இருக்கட்டும். தமிழக அரசு சமச்சீர்கல்விக்கான தடையை உருவாக்கிச் சட்டவரைவை தமிழக அரசு கொண்டுவந்தபோது சமச்சீர் கல்விக்கானப் போராட்டங்களை அக்காலங்களில் நடத்திய தமிழகப் பொதுவுடைமைப் பாண்டியர்களும் ராமகிருஷ்ணர்களும் கூட்டாளி தர்மத்தினைக் கடைபிடித்துத் தங்கள் செங்கடமையை ஆற்றி நிறைவடைந்திருக்கின்றனர். செவ்வணக்கம் தோழர்களே! தாய் அமைப்புகள் அமைதிக்காக்க மாணவர் அமைப்புகள் போராட்டம். அம்மாவுக்கு அடங்காத பிள்ளைகள்.

கருணாநிதி அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ளாத முத்துகுமரன் அறிக்கையின் அடிப்படையில் குறைந்த பட்ச தேவைக்கான திட்டமாக அவருடைய காலத்தில் சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது. மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பாடதிட்டம், மத்திய அரசு பாடத்திட்டம், மாநில பொதுக்கல்வி திட்டம் என வரையறுக்கப்பட்ட வேறுபாடுகளுடன் தமிழகக் கல்வித்துறை இயங்கி வருகின்றது. மெட்ரிக் பள்ளி என்பது உயர் நடுத்தர வர்க்கத்திற்கும் மத்திய அரசு பாடத்திட்டம் என்பது மாநகர உயர் வர்கத்தினருக்குமான கல்வி முறையாகவும் மாநில அரசின் பாடத்திட்டம் என்பது ஏழை பாழைகளுக்கானது எனவும் வர்க்க வேறுபாட்டுடனும் அமைக்கப்பட்ட கல்வி அமைப்பு என்பது இந்துயாவின் வேதகால கல்வி அமைப்பின் நீட்சியாகத்தான் இருக்கின்றது. இந்த வேதகால கல்வி அமைப்பில்தான் குலக்கல்வித்திட்டமும் இருந்தது. சாதி ஆதிக்கத்தின் வேரை ஊன்றிய மிக முக்கியமான இடம் கல்வியாக இருந்தது என்பது மிக முக்கியமாகக் கருதப்படவேண்டியது. சாதி அமைப்பினையும் ஏற்றத்தாழ்வுள்ள சமூக அமைப்பினையும் கட்டிக்காக்கும் அமைப்பாக கல்விக்கூடங்கள் இருந்தன. பார்ப்பனர்கள் வேதம் ஓதுவதற்கும் சத்திரியர்கள் போர்த்தந்திரங்கள் பயில்வதற்கும் குருகுல கல்விமுறை இருந்தது. இதன் அடிப்படையில்தான் வேதம் படிப்பதைத் தன் காதால் கேட்டால் கூட ஈயத்தைக் காய்ச்சி காதில் ஊற்ற வேண்டிய கடுமையான தண்டனைகளை வகுக்கக்கூடிய மனுதர்மங்கள் வாசிக்கப்பட்டன.

ஆக, சமூக அமைப்பில் வேறுபாடுகளை களைய முடியாதவைகளாகத்தான் இந்தக் கல்வி திட்டங்கள் இருந்தன. தற்போது இருக்கும் வேறுபாடுகளுள்ள கல்வி திட்டங்கள் வர்க்க வேறுபாட்டை உருவாக்கக் கூடியன. ஒரு உதாரணத்திற்காகப் பேசுவோம் பொதுத்தேர்வுக் காலங்களில் அரசுப்பள்ளி மாணவர்களும் மெட்ரிக் பள்ளி மாணவர்களும் ஒன்றாக ஒரே அறையில் தேர்வு எழுதக் கூடிய சூழ்நிலை எல்லா இடங்களிலும் ஏற்படும். அப்போது மெட்ரிக் பள்ளி மாணவர்களின் நடவடிக்கைகளை அவர்களின் இயல்புகளை காணும்போது அரசுப்பள்ளி மாணவர்கள் கீழ்நிலை மனோநிலையை அவர்கள் அடைக்கின்றனர். அவர்களைப் போல இல்லையே என்னும் ஏக்கம் ஏழைக்குழந்தைகளின் உள்ளங்களில் ஏற்படுக்கின்றது. சீருடை திட்டத்தைக் கொண்டுவரும்போது பணக்காரன் ஏழை என்னும் வேறுபாடு தெரியாமலிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று படிக்காத காமராஜரால் சொல்ல முடிந்திருக்கின்றது. ஆனால் கல்வி அமைப்பில் இவ்வளவு வேறுபாடுகளை படித்தவர்களால் கொண்டுவர முடிந்திருக்கின்றது.

இந்த வேறுபாடுகளைக் களைவதற்காக அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்துதல் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் அவர்களின் சமூகப் பொருளாதார ஏற்றுத்தாழ்வுகளிலிருந்து அவர்களை விடுவிக்க ஆவன செய்தல் என்றில்லாமல் கடந்த அரசு மேம்போக்காக சமம் என்னும் வார்த்தையைப் பயன்படுத்திக்கொண்டு ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கியது. கல்வியாளர்கள், நவீன படைப்பாளிகள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் எனப் பலர் கலந்து ஒரு பாடதிட்டத்தை உருவாக்கி அதைக் கடந்த கல்வி ஆண்டிலேயே முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு நடைமுறை படுத்தியது.

அரசுப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் இது நடமுறைக்கு வந்தது. அப்போது மெட்ரிக் பள்ளிக்காரர்கள் அப்பாடதிட்டம் மிகவும் எளிமையாக இருப்பதாகவும் அப்புத்தகத்தினை அவர்களின் மாணவர்கள் மூன்றே மாதங்களில் படித்து முடித்து விட்டதாகவும் கூறினார்கள். ஆனால் அரசுப்பள்ளிகளில் நிலைமை தலைகீழ். ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர்களின் சூழ்நிலை என்று அப்புத்தகம் கல்வியாண்டு வரை நடத்தப்பட்டு தேர்வும் வைக்கப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்ட நிலையில் சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாகப் புதிய அரசு அறிவித்தது.

மற்ற வகுப்புகளுக்கான புத்தகங்கள் 206 கோடி செலவில் அச்சடிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கும் நிலையில் அவற்றை நிறுத்துவதாகவும் பழைய பாடத்திட்டத்திலேயே புத்தகத்தை அச்சடிப்பதாகவும் அதுவரை ஜூன் 15ம் தேதி வரை பள்ளி விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டது.

நமக்கு சில கேள்விகள் ....

தமிழநாட்டின் தேர்தல் ஒருவேளை ஆகஸ்டில் நடந்து செப்டம்பரில் முடிவுகள் வெளிவந்து புதிய ஆட்சி பதவி ஏற்றிருப்பின் பாடப்புத்தகங்கள் என்னவாகி இருக்கும்?

கருணாநிதியின் கவிதை சங்கமம் மற்றும் பிற இந்த ஆட்சிக்குப் பிடிக்காத பாடங்கள் தமிழ்ப்பாடத்தில்தான் இருக்கும். அறிவியலில் ஏதும் இருக்க வாய்ப்பில்லையே? ஆய்வகத்தில் ஆக்ஸிஜன் தயாரிப்பது - கருணாநிதி முறை என்று இருக்க வாய்ப்பில்லை. அதே போலத்தான் ட்ரிக்னாமெட்ரி இருக்கும் கருணாமெட்ரி என்று அதை மாற்ற முடியாது என்பது உண்மைதானே?

எனவே உயர்நீதிமன்றம் கூறியதைப் போல தற்போதைய அரசு புதிய பாடத்திட்டக் குழுவை நியமித்து பாடங்களை உருவாக்கி அடுத்தக் கல்வியாண்டில் விநியோகிக்கலாம். தற்போது இருக்கும் புத்தகங்களை உடனடியாகக் கொடுத்து இவ்வாண்டே சமச்சீர் கல்வியைத் தொடங்கலாம்.

இல்லை சமச்சீர் கல்வி வேண்டாம் என்னும் தனியார் பள்ளிகளின் தரகுமுதலாளிகள் கூறுவது போலத்தான் தமிழக அரசு நடக்கும் என்றால் அது கண்டிப்பாகத் தனக்கு வாக்களித்த கோடானுகோடி விளிம்புநிலை வாக்காளர்களுக்கு அது செய்யும் முதல் துரோகமாக இது பதிவாகும்.

நன்றி
தடாகம்.காம்

Monday, June 6, 2011

அழகர்சாமியின் குதிரை

பெயரற்ற எண்ணிலிருந்து என் கைப்பேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது.
“யாரு யாழன் ஆதியா?”
“ஆமாம். வணக்கம்.யாருங்க பேசறது?”
“ தோழர் நான் யுகபாரதி பேசறேன்”
யுகபாரதி என்னுடைய நெருங்கிய கவித்தோழமை. திரைத்துறையில் பாடலாசிரியராக ஆகப்போதுமான உயரத்தினை அடைந்திருந்தாலும் நண்பர்களை சக மனிதனை நேசிக்கிற அன்பு அவரிடம் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடித்த ஒன்று.
யுகபாரதி பேசினார்.
“பாஸ்கர் சக்தியின் அழகர்சாமியின் குதிரை நாவலைத் திரைப்படமாக இயக்குநர் சுசீந்திரன் பண்ணியிருக்கிறார். அப்படத்தை எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்களுக்கு தனிக்காட்சியாகப் போட்டுக் காட்டவேணுமின்னு
நெனக்கிறார். உங்க முகவரி குடுங்க தோழர்.”
முகவரியைச் சொல்ல எழுதிக்கொண்டார். அக்கடிதம் வந்தது. மே 10ந்தேதி, மாலை 6 மணிக்கு சத்யம் திரையரங்கில் என்று அக்கடிதம் சொன்னது. கடிதம் எழுதப்பட்ட முறை உண்மையிலே அக்கறையோடு அழைப்பதாக இருந்தது.


10ந்தேதி காலை ஆம்பூரிலிருந்து தொடர்வண்டி ஏறி 3.00 மணிக்கு சென்னையை அடைந்தேன். அங்கிருந்து நுங்கம்பாக்கம் சென்று தலித்முரசு அலுவலகத்தில் இருந்த வேலைகளை முடித்துக்கொண்டு ஆசிரியர் புனிதபாண்டியனின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சத்யம் திரையரங்கு வந்து சேர்ந்தேன். சென்னையில் இருசக்கர வாகனத்தை ஓட்டுவது எனக்கு மிகவும் பிடித்தமானது.வெயில் தணிந்த அந்த மாலை என்னை வசீகரித்திருந்தது. தியேட்டருக்கு முன்பு வண்டியை நிறுத்திவிட்டு பார்த்த போது கவிஞர் ரவி சுப்பிரமணியம் அன்பு ததும்ப கையசைத்தார். சல்மாவும் வந்திருந்தார். நேரம் ஆக ஆக சென்னையில் இருக்கும் படைப்பாளிகள் எல்லாம் வந்திருந்தனர். கவிஞர்கள் கடற்கரை,ரகசியன், கவின்மலர், இந்திரன், ஓவியர் மருது, திரைப்பட இயக்குனர் அஜயன் பாலா, பொன் சுதா, அருள் எழிலன், எழுத்தாளர் பா.ராகவன், வெளி.ரங்கராஜன் இன்னும் சில நடிகர்கள், என கலைப்பட்டாளமே அழைக்கப்பட்டிருந்தது. ஒரு இலக்கிய அந்தஸ்த்தை அந்தத் தனிக்காட்சிப் பெற்றிருந்தது.

7.00 மணிக்கு படம் ஆரம்பித்தது. வாயிலிர்ருந்து அனைவரையும் வரவேற்றார் இயக்குனர் சுசீந்திரன். ஏற்கெனவே இரண்டு வெற்றிப்படங்களைத் தந்தவர் என்னும் கர்வம் சிறிதும் இன்றி முதல் படத்தை இயக்கிய ஒருவரின் வாஞ்சை அவரின் முகத்தில் இருந்தது. அருகில் அப்படத்தின் முக்கிய பாடலை எழுதிய கவிஞர் யுகபாரதி.

பாஸ்கர் சக்தி எழுதிய அழகர்சாமியின் குதிரை என்னும் கதை தமிழ் வாசிப்புத்தளத்தில் படிக்கப்படவேண்டிய முக்கியமான கதைகளில் ஒன்று என்று ஏற்கெனவே வரிசைப்படுத்தப்பட்டது.

தமிழ் இலக்கிய உலகிற்கும் திரை உலகிற்கும் ரொம்ப தூரம். சிறந்த திரைப்படங்களை சிறந்த இலக்கியங்களிலிருந்து உருவாக்கலாம் என்பதற்கு தமிழ்சினிமா ஒரு விதிவிலக்கு. தமிழ் நாவல்களின் இயங்குநிலை என்பது தமிழ்சினிமாவின் வரையறுக்கப்பட்ட வாய்ப்பாட்சு சூத்திரத்திற்கு ஒத்துவரவில்லை. இன்னொரு செய்தியையும் நம்மால் கூற முடியும். தமிழ் இலக்கியத்தைத் தொடர்ந்து வாசிக்கின்ற இயக்குனர்கள் மிகக்குறைவு. ஆனால் இப்போதிருக்கும் இயக்குனர்கள் வாசகர்களாக இருப்பதினால் சில படங்கள் வருகின்றன. மகேந்திரன் புதுமைப்பித்தன் கதையைப் படமாக்கினார்.உமாசந்திரன் கதையைப் படமாக்கினார். தங்கர் பச்சானின் அழகி ஒரு நல்ல நம்பிக்கையான இடம். அடுத்து அவரே இயக்கிய சொல்ல மறந்த கதை நாஞ்சில் நாடனின் கதை. இயக்குனர் கௌதமன் இயக்கிய மகிழ்ச்சி நீலபத்ம நாபனின் தலைமுறைகள் என அவ்வரிசை மிகச்சொற்ப எண்ணிக்கையையே கொண்டது.

அழகர்சாமியின் குதிரை படம் முடிந்து வெளியேறும்போது ஒரு கிராமத்தின் வாழ்விலிருந்து வெளிவந்ததைப்போல இருந்தது. அது ஒரு எண்பதுகளில் நடக்கும் ஒரு கதை. தேனிமாவட்ட கிராமம் ஒன்றில் கதை நிகழுகின்றது. எண்பதுகளில் பயன்படுத்தப்பட்ட கிராமம், செல்போன் இல்லாத மனிதர்கள், பகுத்தறிவு பேசும் இளைஞர்கள்( தற்போதைய தொழில்வளர்ச்சியில் அப்படிப்பட்ட சமூக அக்கறையுள்ள இளைஞர்களைப் பார்க்க முடியாது) பயன் படுத்தப்படும் ரூபாய் நோட்டுகள், பாத்திரங்களின் உடைகள் என மிகவும் துல்லியமாகப் படம் திட்டமிடப்பட்டுள்ளது.

ஹீரோயிசம் என்னும் தனிமனித வழிப்பாடு படத்தில் எந்த இடத்திலும் இல்லை. சாதாரண மக்கள். அவர்களின் இயற்கையான உரையாடல்கள். அழகிய மலைகள் சூழ்ந்த இடங்கள், எல்லா இடங்களிலும் பொருந்திபோகின்ற இசைஞானியின் இசைக்கோவைகள் என படம் தமிழ் சினிமாவிற்கு நம்பிக்கைத் தரும் மாற்று சினிமாவாக வந்திருக்கின்றது.

மனித வாழ்வில் பிறருக்காக ஈரம் கசிவது என்பது அக்கால கிராமங்களின் இதயமாக இருந்தது. அதை அப்படியே இயல்புகெடாமல் தந்திருப்பது இயக்குனர் சுசீந்தரனின் உழைப்பும் சினிமா ஆர்வமும்தான். மழையே வராத அக்கிராமத்தில் அழகர்சாமியின் குதிரை காணாமல் போவதும் அதனால் ஏற்படும் அந்த கிராமத்து மக்களின் மாற்றங்களும் சிறப்பாக இருக்கின்றன. குதிரை காணாமல் போனது குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கும் காட்சி அப்பாவி கிராம மக்களின் வெள்ளந்தி மனங்களைச் சொல்லுகின்றது. கட்டை குதிரை காணாமல் போக ஒரு உண்மையானக் குதிரை வர அதை வைத்துக்கொண்டு மலையாள மாந்திரீகரும் போலீஸ்காரர் ஒருவரும்செய்யும் மோசடிகள் நகைச்சுவையானவை. பிரபு என்னும் சிறுவன் பாத்திரம் அருமையான சித்தரிப்பு. படத்தில் வரும் காதல் மிகவும் யதார்த்தமாக நகர்த்தப்பட்டிருப்பதும் மற்ற படங்களின் காதலைப் போலல்லாமல் உண்மையாக இருப்பதும் மிகவும் அருமை.

உயிர் உள்ள குதிரையின் சொந்தக்காரன் அழகர்சாமியின் பாத்திரம் அவருடைய திருமணம், அவர் நடிப்பு, அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கின்றது.

படத்தின் இன்னொரு சிறப்பு கதையோட்டத்தோடு அமைந்திருக்கும் நகைச்சுவை.

இப்படி எல்லாவற்றையும் சொல்லலாம்.

அழகர்சாமியின் குதிரை திரைப்படம் தமிழ்சினிமா நல்ல திசைநோக்கிப் பயணிக்க பயன்படும் கைக்காட்டி மரம்.

புரிந்துகொள்வார்களா தமிழ்சினிமாக்காரர்களும் சினிமா பார்வையாளர்களும்.

Saturday, May 21, 2011

வரலாற்றின் மொழி

ஆந்திர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பேராசிரியர் டாக்டர் பி.டி.சத்யபால் இந்திய மரபார்ந்த வரலாற்றின் பின்னணியில் தன் உரையாடலை நிகழ்த்துபவர். சாதி அதன் தோற்றம் வரலாற்றில் சாதி அடைந்திருக்கும் இடம் என அவர் அடுக்கும் ஆண்டு கணக்குகளும் நிகழ்ச்சிகளும் ஆச்சர்யம் தரத்தக்கன. ஒரு துண்டு காகித குறிப்பும் இன்றி ஒவ்வொரு ஆண்டும் அதில் நடந்த நிகழ்வுகளையும் அவரின் அழகான ஆழமான எளிமையாய் யாருக்கு வேண்டுமானாலும் புரியக் கூடிய ஆங்கிலத்தில் கூறும் போது ஆயிரக்கணக்கான வரலாற்று நூல்களைப் படித்த அனுபவம் கிட்டும்.

இந்திய மக்களின் ஒரே ஒற்றுமையாய் விளங்கும் சாதிய அமைப்பின் தோற்றம் அதன் வளர்ச்சி அது இன்றுவரை அடைந்திருக்கும் பல்வேறு பரிணாமங்கள், பருவநிலை மாற்றங்கள் என அனைத்தையும் அறிவியல்பூர்வமாக தன் உரையாடல் மூலம் அவர் வெளிக்கொணர்கின்றார். பெரும்பான்மை மக்களை குறைந்தபட்ச அளவே உள்ள பார்ப்பனர்கள் எப்படி வரலாற்றின் இடுக்குகளிலெல்லாம் இருந்துகொண்டு ஆட்டிப்படைக்கின்றார்கள் என்பதை சத்யபாலின் உரையில் தெளிவாக நம்மால் உணரமுடியும்.

சாதியற்ற சமூகத்தை உருவாக்க பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் ஒற்றுமையும் வலிமையும் எவ்வளவு அவசியம் என்றும் அதை உருவாக்க இந்திய நிலப்பரப்பெங்கும் எழுந்த தலைவர்கள் அவர்களின் பணிகள் ஆளுமைகள் என ஆண்டின் அடிச்சுவடியோடு அவரின் உரை அமைந்திருக்கும்.

வெற்றுக் கூச்சல் போடும் அரங்காக அது இல்லாமல் அறிவின் ஊற்றாக கற்றுக் கொள்வதற்கான வகுபறையாக புத்தாக்கம் செய்துகொள்வதற்கான இடமாக சத்யபால் அவர்களின் உரை அமைந்திருக்கும்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக அவரின் உரையாற்றும் திறன் தொடர்ந்து எட்டு மணிநேரங்கள் அவ்வளவு கருத்துகள் சுரக்கும் அறிவார்ந்த தகவல்கள். இப்படிப்பட்ட மனிதரை சந்திக்க அது சரியான தருணம்.

ஒருமுறை அவரின் கூட்டத்தில் பங்கெடுத்துப் பாருங்கள்.

சத்யபால் மீண்டும் சென்னையில் பேசுகின்றார்

நாள்: 28.05.2011
தொடர்பு கொள்ள : ஆர்.ஆர்.சீனிவாசன் 9444065336
மோகன் 99620 71957, 94432 21600

Friday, May 13, 2011

அப்படியே ஆகக்கடவது

அடைவதின் காயத்தை சுமந்து தவிக்கின்றது
தேவனால் கைவிடப்பட்ட
ஆடொன்று
முட்கள் நிறைந்தொரு பள்ளத்தாக்கில்
கம்மிய தன் தொண்டைய
செருமிசெருமி கத்தும் அதன் சன்னக் குரலில்
தாகம் இழையோடுகிறது
ஆட்டைத் தேடிவந்த தேவகுமாரனின்
கண்களில் விழுந்த தூசியை எடுக்க
கானாற்றில் கண்கழுவ போனவனை
கால்களை கடித்து உள்ளிழுத்துக்கொள்கிறது
நீண்ட வாயும் கூரிய பற்களையும் உடைய
முதலை
விழுங்கப்படும் தேவகுமாரனின் கடைசி வார்த்தை
என் கடவுளே என் கடவுளே ஏன் என்னை கைவிட்டீர்
என்பதாம். ஆமென்

Sunday, February 13, 2011

புறாக்களின் கைகளைக் கொத்தி
தின்றுவிட்டு
உதிர்ந்துவிட்டன ஆலிவ்மர இலைகள்
நிழல்கள் எரியும் ஒரு தருணத்தில்
பூத்து இருக்கும் பூவொன்றை
கடித்து சாப்பிட்டுவிட்டு
வேகமாகத் தாவி ஓடுகின்றது
சாமிக்கு நேர்ந்துவிட்ட ஆட்டுக்கிடாய்
கோலங்களை மிதித்து அழித்துவிட்டு
அழுக்கேறிய கால்களோடு நடக்கிறாள்
வீதிக் கம்பங்களில் விளக்கேற்றும் பெண்
புராதனக் கோயில்களின் மேல் அமர்ந்த
கருப்புப் பறவைகள் எச்சமிடுகின்றன
சிதைந்த வெளிச்சுவர் மீதிருக்கும் சிற்பங்கள்மீது
என்னவென்று அறியா கருப்பு மனநிலையில்
இக்கவிதையைப் பிடித்துத்
தொங்கிக் கொண்டிருக்கின்றேன் நான்