Thursday, June 30, 2011

திசையடங்கா காட்டின் மூலையொன்றில்
தளிர்த்த இளம்பச்சை நிற குருத்தோலையில்
பதிவாகும் சின்ன குயிலின் இசை நரம்புகள்
அடர்ந்து வனமாகும் வேலையில்
பாடலின் பெரும்பரப்பெங்கும்
குயில்தாயின் பால்சுவடுகள்
கொத்திக்கிளறாத பேரமைதியில் காடுறங்கும்
தத்தித் தாவிவரும் புதுப்பாட்டு
அப்போதும் பிரசவமாகும்.

Wednesday, June 22, 2011

சமச்சீர் கல்வி என்னும் சதுரங்கத்தில் வெட்டப்பட்டக் காய்களும் வாழநினைக்கும் ராணிகளும்

கல்வியின் நிலை தமிழ்நாட்டில் இன்று பெரிய கேள்விக் குறியாகியுள்ளது. எந்தப் பாடத்திட்டம் என்று முடிவுபெறாத சூழல் ஒன்றில் சிக்கித் தமிழக மாணவர்கள் நூலறுந்த பட்டத்தின் திண்டாட்டத்தினை உணர்ந்தவர்களாகின்றனர். தமிழகப் பொது மக்களோ கடந்த ஏப்ரல் 13-ந் தேதியிலிருந்து மே 13-ந்தேதி வரை தங்களுடைய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவிட்டதாகவும் இதற்கு மேல் நமக்கும் இதற்கும் எந்தவிதமான சம்மதமும் இல்லை என்று வாழப்போய்விட்டார்கள். இப்போது தவிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் தாங்கள் என்பதையும் மறந்து வெந்ததைத் தின்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

2011 ஜூன் 10-ஆம் திகதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாண்பமை எம்.ஒய். இக்பால், சிவஞானம் ஆகியோர் கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வியை இக்கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளனர். பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரால் தொடுக்கப்பட்ட பொதுநலன் கோரும் மனுவிற்காக அளிக்கப்பட்ட தீர்ப்பு இது. தற்போதைய தமிழக அரசின் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தை அணுகுவதற்காகத் தற்போது டெல்லியில் இருக்கின்றார். கோடை விடுமுறையில் இருக்கும் உச்ச நீதிமன்றத்தில் அவசரகால மனுபோட்டு தற்போது தரப்பட்டிற்கும் தீர்ப்பிற்குத் தடை வாங்கி வந்து தன்னுடைய முதல்வரின் பொற்பாதங்களில் சமர்ப்பித்தால்தான் தன்னுடைய பெயர் அமைச்சரவையில் இருக்கும் என்னும் அவரின் அவஸ்தையினை யார் புரிந்துகொள்ள முடியும்?

சரி அது இருக்கட்டும். தமிழக அரசு சமச்சீர்கல்விக்கான தடையை உருவாக்கிச் சட்டவரைவை தமிழக அரசு கொண்டுவந்தபோது சமச்சீர் கல்விக்கானப் போராட்டங்களை அக்காலங்களில் நடத்திய தமிழகப் பொதுவுடைமைப் பாண்டியர்களும் ராமகிருஷ்ணர்களும் கூட்டாளி தர்மத்தினைக் கடைபிடித்துத் தங்கள் செங்கடமையை ஆற்றி நிறைவடைந்திருக்கின்றனர். செவ்வணக்கம் தோழர்களே! தாய் அமைப்புகள் அமைதிக்காக்க மாணவர் அமைப்புகள் போராட்டம். அம்மாவுக்கு அடங்காத பிள்ளைகள்.

கருணாநிதி அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ளாத முத்துகுமரன் அறிக்கையின் அடிப்படையில் குறைந்த பட்ச தேவைக்கான திட்டமாக அவருடைய காலத்தில் சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது. மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பாடதிட்டம், மத்திய அரசு பாடத்திட்டம், மாநில பொதுக்கல்வி திட்டம் என வரையறுக்கப்பட்ட வேறுபாடுகளுடன் தமிழகக் கல்வித்துறை இயங்கி வருகின்றது. மெட்ரிக் பள்ளி என்பது உயர் நடுத்தர வர்க்கத்திற்கும் மத்திய அரசு பாடத்திட்டம் என்பது மாநகர உயர் வர்கத்தினருக்குமான கல்வி முறையாகவும் மாநில அரசின் பாடத்திட்டம் என்பது ஏழை பாழைகளுக்கானது எனவும் வர்க்க வேறுபாட்டுடனும் அமைக்கப்பட்ட கல்வி அமைப்பு என்பது இந்துயாவின் வேதகால கல்வி அமைப்பின் நீட்சியாகத்தான் இருக்கின்றது. இந்த வேதகால கல்வி அமைப்பில்தான் குலக்கல்வித்திட்டமும் இருந்தது. சாதி ஆதிக்கத்தின் வேரை ஊன்றிய மிக முக்கியமான இடம் கல்வியாக இருந்தது என்பது மிக முக்கியமாகக் கருதப்படவேண்டியது. சாதி அமைப்பினையும் ஏற்றத்தாழ்வுள்ள சமூக அமைப்பினையும் கட்டிக்காக்கும் அமைப்பாக கல்விக்கூடங்கள் இருந்தன. பார்ப்பனர்கள் வேதம் ஓதுவதற்கும் சத்திரியர்கள் போர்த்தந்திரங்கள் பயில்வதற்கும் குருகுல கல்விமுறை இருந்தது. இதன் அடிப்படையில்தான் வேதம் படிப்பதைத் தன் காதால் கேட்டால் கூட ஈயத்தைக் காய்ச்சி காதில் ஊற்ற வேண்டிய கடுமையான தண்டனைகளை வகுக்கக்கூடிய மனுதர்மங்கள் வாசிக்கப்பட்டன.

ஆக, சமூக அமைப்பில் வேறுபாடுகளை களைய முடியாதவைகளாகத்தான் இந்தக் கல்வி திட்டங்கள் இருந்தன. தற்போது இருக்கும் வேறுபாடுகளுள்ள கல்வி திட்டங்கள் வர்க்க வேறுபாட்டை உருவாக்கக் கூடியன. ஒரு உதாரணத்திற்காகப் பேசுவோம் பொதுத்தேர்வுக் காலங்களில் அரசுப்பள்ளி மாணவர்களும் மெட்ரிக் பள்ளி மாணவர்களும் ஒன்றாக ஒரே அறையில் தேர்வு எழுதக் கூடிய சூழ்நிலை எல்லா இடங்களிலும் ஏற்படும். அப்போது மெட்ரிக் பள்ளி மாணவர்களின் நடவடிக்கைகளை அவர்களின் இயல்புகளை காணும்போது அரசுப்பள்ளி மாணவர்கள் கீழ்நிலை மனோநிலையை அவர்கள் அடைக்கின்றனர். அவர்களைப் போல இல்லையே என்னும் ஏக்கம் ஏழைக்குழந்தைகளின் உள்ளங்களில் ஏற்படுக்கின்றது. சீருடை திட்டத்தைக் கொண்டுவரும்போது பணக்காரன் ஏழை என்னும் வேறுபாடு தெரியாமலிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று படிக்காத காமராஜரால் சொல்ல முடிந்திருக்கின்றது. ஆனால் கல்வி அமைப்பில் இவ்வளவு வேறுபாடுகளை படித்தவர்களால் கொண்டுவர முடிந்திருக்கின்றது.

இந்த வேறுபாடுகளைக் களைவதற்காக அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்துதல் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் அவர்களின் சமூகப் பொருளாதார ஏற்றுத்தாழ்வுகளிலிருந்து அவர்களை விடுவிக்க ஆவன செய்தல் என்றில்லாமல் கடந்த அரசு மேம்போக்காக சமம் என்னும் வார்த்தையைப் பயன்படுத்திக்கொண்டு ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கியது. கல்வியாளர்கள், நவீன படைப்பாளிகள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் எனப் பலர் கலந்து ஒரு பாடதிட்டத்தை உருவாக்கி அதைக் கடந்த கல்வி ஆண்டிலேயே முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு நடைமுறை படுத்தியது.

அரசுப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் இது நடமுறைக்கு வந்தது. அப்போது மெட்ரிக் பள்ளிக்காரர்கள் அப்பாடதிட்டம் மிகவும் எளிமையாக இருப்பதாகவும் அப்புத்தகத்தினை அவர்களின் மாணவர்கள் மூன்றே மாதங்களில் படித்து முடித்து விட்டதாகவும் கூறினார்கள். ஆனால் அரசுப்பள்ளிகளில் நிலைமை தலைகீழ். ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர்களின் சூழ்நிலை என்று அப்புத்தகம் கல்வியாண்டு வரை நடத்தப்பட்டு தேர்வும் வைக்கப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்ட நிலையில் சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாகப் புதிய அரசு அறிவித்தது.

மற்ற வகுப்புகளுக்கான புத்தகங்கள் 206 கோடி செலவில் அச்சடிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கும் நிலையில் அவற்றை நிறுத்துவதாகவும் பழைய பாடத்திட்டத்திலேயே புத்தகத்தை அச்சடிப்பதாகவும் அதுவரை ஜூன் 15ம் தேதி வரை பள்ளி விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டது.

நமக்கு சில கேள்விகள் ....

தமிழநாட்டின் தேர்தல் ஒருவேளை ஆகஸ்டில் நடந்து செப்டம்பரில் முடிவுகள் வெளிவந்து புதிய ஆட்சி பதவி ஏற்றிருப்பின் பாடப்புத்தகங்கள் என்னவாகி இருக்கும்?

கருணாநிதியின் கவிதை சங்கமம் மற்றும் பிற இந்த ஆட்சிக்குப் பிடிக்காத பாடங்கள் தமிழ்ப்பாடத்தில்தான் இருக்கும். அறிவியலில் ஏதும் இருக்க வாய்ப்பில்லையே? ஆய்வகத்தில் ஆக்ஸிஜன் தயாரிப்பது - கருணாநிதி முறை என்று இருக்க வாய்ப்பில்லை. அதே போலத்தான் ட்ரிக்னாமெட்ரி இருக்கும் கருணாமெட்ரி என்று அதை மாற்ற முடியாது என்பது உண்மைதானே?

எனவே உயர்நீதிமன்றம் கூறியதைப் போல தற்போதைய அரசு புதிய பாடத்திட்டக் குழுவை நியமித்து பாடங்களை உருவாக்கி அடுத்தக் கல்வியாண்டில் விநியோகிக்கலாம். தற்போது இருக்கும் புத்தகங்களை உடனடியாகக் கொடுத்து இவ்வாண்டே சமச்சீர் கல்வியைத் தொடங்கலாம்.

இல்லை சமச்சீர் கல்வி வேண்டாம் என்னும் தனியார் பள்ளிகளின் தரகுமுதலாளிகள் கூறுவது போலத்தான் தமிழக அரசு நடக்கும் என்றால் அது கண்டிப்பாகத் தனக்கு வாக்களித்த கோடானுகோடி விளிம்புநிலை வாக்காளர்களுக்கு அது செய்யும் முதல் துரோகமாக இது பதிவாகும்.

நன்றி
தடாகம்.காம்

Monday, June 6, 2011

அழகர்சாமியின் குதிரை

பெயரற்ற எண்ணிலிருந்து என் கைப்பேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது.
“யாரு யாழன் ஆதியா?”
“ஆமாம். வணக்கம்.யாருங்க பேசறது?”
“ தோழர் நான் யுகபாரதி பேசறேன்”
யுகபாரதி என்னுடைய நெருங்கிய கவித்தோழமை. திரைத்துறையில் பாடலாசிரியராக ஆகப்போதுமான உயரத்தினை அடைந்திருந்தாலும் நண்பர்களை சக மனிதனை நேசிக்கிற அன்பு அவரிடம் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடித்த ஒன்று.
யுகபாரதி பேசினார்.
“பாஸ்கர் சக்தியின் அழகர்சாமியின் குதிரை நாவலைத் திரைப்படமாக இயக்குநர் சுசீந்திரன் பண்ணியிருக்கிறார். அப்படத்தை எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்களுக்கு தனிக்காட்சியாகப் போட்டுக் காட்டவேணுமின்னு
நெனக்கிறார். உங்க முகவரி குடுங்க தோழர்.”
முகவரியைச் சொல்ல எழுதிக்கொண்டார். அக்கடிதம் வந்தது. மே 10ந்தேதி, மாலை 6 மணிக்கு சத்யம் திரையரங்கில் என்று அக்கடிதம் சொன்னது. கடிதம் எழுதப்பட்ட முறை உண்மையிலே அக்கறையோடு அழைப்பதாக இருந்தது.


10ந்தேதி காலை ஆம்பூரிலிருந்து தொடர்வண்டி ஏறி 3.00 மணிக்கு சென்னையை அடைந்தேன். அங்கிருந்து நுங்கம்பாக்கம் சென்று தலித்முரசு அலுவலகத்தில் இருந்த வேலைகளை முடித்துக்கொண்டு ஆசிரியர் புனிதபாண்டியனின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சத்யம் திரையரங்கு வந்து சேர்ந்தேன். சென்னையில் இருசக்கர வாகனத்தை ஓட்டுவது எனக்கு மிகவும் பிடித்தமானது.வெயில் தணிந்த அந்த மாலை என்னை வசீகரித்திருந்தது. தியேட்டருக்கு முன்பு வண்டியை நிறுத்திவிட்டு பார்த்த போது கவிஞர் ரவி சுப்பிரமணியம் அன்பு ததும்ப கையசைத்தார். சல்மாவும் வந்திருந்தார். நேரம் ஆக ஆக சென்னையில் இருக்கும் படைப்பாளிகள் எல்லாம் வந்திருந்தனர். கவிஞர்கள் கடற்கரை,ரகசியன், கவின்மலர், இந்திரன், ஓவியர் மருது, திரைப்பட இயக்குனர் அஜயன் பாலா, பொன் சுதா, அருள் எழிலன், எழுத்தாளர் பா.ராகவன், வெளி.ரங்கராஜன் இன்னும் சில நடிகர்கள், என கலைப்பட்டாளமே அழைக்கப்பட்டிருந்தது. ஒரு இலக்கிய அந்தஸ்த்தை அந்தத் தனிக்காட்சிப் பெற்றிருந்தது.

7.00 மணிக்கு படம் ஆரம்பித்தது. வாயிலிர்ருந்து அனைவரையும் வரவேற்றார் இயக்குனர் சுசீந்திரன். ஏற்கெனவே இரண்டு வெற்றிப்படங்களைத் தந்தவர் என்னும் கர்வம் சிறிதும் இன்றி முதல் படத்தை இயக்கிய ஒருவரின் வாஞ்சை அவரின் முகத்தில் இருந்தது. அருகில் அப்படத்தின் முக்கிய பாடலை எழுதிய கவிஞர் யுகபாரதி.

பாஸ்கர் சக்தி எழுதிய அழகர்சாமியின் குதிரை என்னும் கதை தமிழ் வாசிப்புத்தளத்தில் படிக்கப்படவேண்டிய முக்கியமான கதைகளில் ஒன்று என்று ஏற்கெனவே வரிசைப்படுத்தப்பட்டது.

தமிழ் இலக்கிய உலகிற்கும் திரை உலகிற்கும் ரொம்ப தூரம். சிறந்த திரைப்படங்களை சிறந்த இலக்கியங்களிலிருந்து உருவாக்கலாம் என்பதற்கு தமிழ்சினிமா ஒரு விதிவிலக்கு. தமிழ் நாவல்களின் இயங்குநிலை என்பது தமிழ்சினிமாவின் வரையறுக்கப்பட்ட வாய்ப்பாட்சு சூத்திரத்திற்கு ஒத்துவரவில்லை. இன்னொரு செய்தியையும் நம்மால் கூற முடியும். தமிழ் இலக்கியத்தைத் தொடர்ந்து வாசிக்கின்ற இயக்குனர்கள் மிகக்குறைவு. ஆனால் இப்போதிருக்கும் இயக்குனர்கள் வாசகர்களாக இருப்பதினால் சில படங்கள் வருகின்றன. மகேந்திரன் புதுமைப்பித்தன் கதையைப் படமாக்கினார்.உமாசந்திரன் கதையைப் படமாக்கினார். தங்கர் பச்சானின் அழகி ஒரு நல்ல நம்பிக்கையான இடம். அடுத்து அவரே இயக்கிய சொல்ல மறந்த கதை நாஞ்சில் நாடனின் கதை. இயக்குனர் கௌதமன் இயக்கிய மகிழ்ச்சி நீலபத்ம நாபனின் தலைமுறைகள் என அவ்வரிசை மிகச்சொற்ப எண்ணிக்கையையே கொண்டது.

அழகர்சாமியின் குதிரை படம் முடிந்து வெளியேறும்போது ஒரு கிராமத்தின் வாழ்விலிருந்து வெளிவந்ததைப்போல இருந்தது. அது ஒரு எண்பதுகளில் நடக்கும் ஒரு கதை. தேனிமாவட்ட கிராமம் ஒன்றில் கதை நிகழுகின்றது. எண்பதுகளில் பயன்படுத்தப்பட்ட கிராமம், செல்போன் இல்லாத மனிதர்கள், பகுத்தறிவு பேசும் இளைஞர்கள்( தற்போதைய தொழில்வளர்ச்சியில் அப்படிப்பட்ட சமூக அக்கறையுள்ள இளைஞர்களைப் பார்க்க முடியாது) பயன் படுத்தப்படும் ரூபாய் நோட்டுகள், பாத்திரங்களின் உடைகள் என மிகவும் துல்லியமாகப் படம் திட்டமிடப்பட்டுள்ளது.

ஹீரோயிசம் என்னும் தனிமனித வழிப்பாடு படத்தில் எந்த இடத்திலும் இல்லை. சாதாரண மக்கள். அவர்களின் இயற்கையான உரையாடல்கள். அழகிய மலைகள் சூழ்ந்த இடங்கள், எல்லா இடங்களிலும் பொருந்திபோகின்ற இசைஞானியின் இசைக்கோவைகள் என படம் தமிழ் சினிமாவிற்கு நம்பிக்கைத் தரும் மாற்று சினிமாவாக வந்திருக்கின்றது.

மனித வாழ்வில் பிறருக்காக ஈரம் கசிவது என்பது அக்கால கிராமங்களின் இதயமாக இருந்தது. அதை அப்படியே இயல்புகெடாமல் தந்திருப்பது இயக்குனர் சுசீந்தரனின் உழைப்பும் சினிமா ஆர்வமும்தான். மழையே வராத அக்கிராமத்தில் அழகர்சாமியின் குதிரை காணாமல் போவதும் அதனால் ஏற்படும் அந்த கிராமத்து மக்களின் மாற்றங்களும் சிறப்பாக இருக்கின்றன. குதிரை காணாமல் போனது குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கும் காட்சி அப்பாவி கிராம மக்களின் வெள்ளந்தி மனங்களைச் சொல்லுகின்றது. கட்டை குதிரை காணாமல் போக ஒரு உண்மையானக் குதிரை வர அதை வைத்துக்கொண்டு மலையாள மாந்திரீகரும் போலீஸ்காரர் ஒருவரும்செய்யும் மோசடிகள் நகைச்சுவையானவை. பிரபு என்னும் சிறுவன் பாத்திரம் அருமையான சித்தரிப்பு. படத்தில் வரும் காதல் மிகவும் யதார்த்தமாக நகர்த்தப்பட்டிருப்பதும் மற்ற படங்களின் காதலைப் போலல்லாமல் உண்மையாக இருப்பதும் மிகவும் அருமை.

உயிர் உள்ள குதிரையின் சொந்தக்காரன் அழகர்சாமியின் பாத்திரம் அவருடைய திருமணம், அவர் நடிப்பு, அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கின்றது.

படத்தின் இன்னொரு சிறப்பு கதையோட்டத்தோடு அமைந்திருக்கும் நகைச்சுவை.

இப்படி எல்லாவற்றையும் சொல்லலாம்.

அழகர்சாமியின் குதிரை திரைப்படம் தமிழ்சினிமா நல்ல திசைநோக்கிப் பயணிக்க பயன்படும் கைக்காட்டி மரம்.

புரிந்துகொள்வார்களா தமிழ்சினிமாக்காரர்களும் சினிமா பார்வையாளர்களும்.