Monday, June 6, 2011

அழகர்சாமியின் குதிரை

பெயரற்ற எண்ணிலிருந்து என் கைப்பேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது.
“யாரு யாழன் ஆதியா?”
“ஆமாம். வணக்கம்.யாருங்க பேசறது?”
“ தோழர் நான் யுகபாரதி பேசறேன்”
யுகபாரதி என்னுடைய நெருங்கிய கவித்தோழமை. திரைத்துறையில் பாடலாசிரியராக ஆகப்போதுமான உயரத்தினை அடைந்திருந்தாலும் நண்பர்களை சக மனிதனை நேசிக்கிற அன்பு அவரிடம் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடித்த ஒன்று.
யுகபாரதி பேசினார்.
“பாஸ்கர் சக்தியின் அழகர்சாமியின் குதிரை நாவலைத் திரைப்படமாக இயக்குநர் சுசீந்திரன் பண்ணியிருக்கிறார். அப்படத்தை எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்களுக்கு தனிக்காட்சியாகப் போட்டுக் காட்டவேணுமின்னு
நெனக்கிறார். உங்க முகவரி குடுங்க தோழர்.”
முகவரியைச் சொல்ல எழுதிக்கொண்டார். அக்கடிதம் வந்தது. மே 10ந்தேதி, மாலை 6 மணிக்கு சத்யம் திரையரங்கில் என்று அக்கடிதம் சொன்னது. கடிதம் எழுதப்பட்ட முறை உண்மையிலே அக்கறையோடு அழைப்பதாக இருந்தது.


10ந்தேதி காலை ஆம்பூரிலிருந்து தொடர்வண்டி ஏறி 3.00 மணிக்கு சென்னையை அடைந்தேன். அங்கிருந்து நுங்கம்பாக்கம் சென்று தலித்முரசு அலுவலகத்தில் இருந்த வேலைகளை முடித்துக்கொண்டு ஆசிரியர் புனிதபாண்டியனின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சத்யம் திரையரங்கு வந்து சேர்ந்தேன். சென்னையில் இருசக்கர வாகனத்தை ஓட்டுவது எனக்கு மிகவும் பிடித்தமானது.வெயில் தணிந்த அந்த மாலை என்னை வசீகரித்திருந்தது. தியேட்டருக்கு முன்பு வண்டியை நிறுத்திவிட்டு பார்த்த போது கவிஞர் ரவி சுப்பிரமணியம் அன்பு ததும்ப கையசைத்தார். சல்மாவும் வந்திருந்தார். நேரம் ஆக ஆக சென்னையில் இருக்கும் படைப்பாளிகள் எல்லாம் வந்திருந்தனர். கவிஞர்கள் கடற்கரை,ரகசியன், கவின்மலர், இந்திரன், ஓவியர் மருது, திரைப்பட இயக்குனர் அஜயன் பாலா, பொன் சுதா, அருள் எழிலன், எழுத்தாளர் பா.ராகவன், வெளி.ரங்கராஜன் இன்னும் சில நடிகர்கள், என கலைப்பட்டாளமே அழைக்கப்பட்டிருந்தது. ஒரு இலக்கிய அந்தஸ்த்தை அந்தத் தனிக்காட்சிப் பெற்றிருந்தது.

7.00 மணிக்கு படம் ஆரம்பித்தது. வாயிலிர்ருந்து அனைவரையும் வரவேற்றார் இயக்குனர் சுசீந்திரன். ஏற்கெனவே இரண்டு வெற்றிப்படங்களைத் தந்தவர் என்னும் கர்வம் சிறிதும் இன்றி முதல் படத்தை இயக்கிய ஒருவரின் வாஞ்சை அவரின் முகத்தில் இருந்தது. அருகில் அப்படத்தின் முக்கிய பாடலை எழுதிய கவிஞர் யுகபாரதி.

பாஸ்கர் சக்தி எழுதிய அழகர்சாமியின் குதிரை என்னும் கதை தமிழ் வாசிப்புத்தளத்தில் படிக்கப்படவேண்டிய முக்கியமான கதைகளில் ஒன்று என்று ஏற்கெனவே வரிசைப்படுத்தப்பட்டது.

தமிழ் இலக்கிய உலகிற்கும் திரை உலகிற்கும் ரொம்ப தூரம். சிறந்த திரைப்படங்களை சிறந்த இலக்கியங்களிலிருந்து உருவாக்கலாம் என்பதற்கு தமிழ்சினிமா ஒரு விதிவிலக்கு. தமிழ் நாவல்களின் இயங்குநிலை என்பது தமிழ்சினிமாவின் வரையறுக்கப்பட்ட வாய்ப்பாட்சு சூத்திரத்திற்கு ஒத்துவரவில்லை. இன்னொரு செய்தியையும் நம்மால் கூற முடியும். தமிழ் இலக்கியத்தைத் தொடர்ந்து வாசிக்கின்ற இயக்குனர்கள் மிகக்குறைவு. ஆனால் இப்போதிருக்கும் இயக்குனர்கள் வாசகர்களாக இருப்பதினால் சில படங்கள் வருகின்றன. மகேந்திரன் புதுமைப்பித்தன் கதையைப் படமாக்கினார்.உமாசந்திரன் கதையைப் படமாக்கினார். தங்கர் பச்சானின் அழகி ஒரு நல்ல நம்பிக்கையான இடம். அடுத்து அவரே இயக்கிய சொல்ல மறந்த கதை நாஞ்சில் நாடனின் கதை. இயக்குனர் கௌதமன் இயக்கிய மகிழ்ச்சி நீலபத்ம நாபனின் தலைமுறைகள் என அவ்வரிசை மிகச்சொற்ப எண்ணிக்கையையே கொண்டது.

அழகர்சாமியின் குதிரை படம் முடிந்து வெளியேறும்போது ஒரு கிராமத்தின் வாழ்விலிருந்து வெளிவந்ததைப்போல இருந்தது. அது ஒரு எண்பதுகளில் நடக்கும் ஒரு கதை. தேனிமாவட்ட கிராமம் ஒன்றில் கதை நிகழுகின்றது. எண்பதுகளில் பயன்படுத்தப்பட்ட கிராமம், செல்போன் இல்லாத மனிதர்கள், பகுத்தறிவு பேசும் இளைஞர்கள்( தற்போதைய தொழில்வளர்ச்சியில் அப்படிப்பட்ட சமூக அக்கறையுள்ள இளைஞர்களைப் பார்க்க முடியாது) பயன் படுத்தப்படும் ரூபாய் நோட்டுகள், பாத்திரங்களின் உடைகள் என மிகவும் துல்லியமாகப் படம் திட்டமிடப்பட்டுள்ளது.

ஹீரோயிசம் என்னும் தனிமனித வழிப்பாடு படத்தில் எந்த இடத்திலும் இல்லை. சாதாரண மக்கள். அவர்களின் இயற்கையான உரையாடல்கள். அழகிய மலைகள் சூழ்ந்த இடங்கள், எல்லா இடங்களிலும் பொருந்திபோகின்ற இசைஞானியின் இசைக்கோவைகள் என படம் தமிழ் சினிமாவிற்கு நம்பிக்கைத் தரும் மாற்று சினிமாவாக வந்திருக்கின்றது.

மனித வாழ்வில் பிறருக்காக ஈரம் கசிவது என்பது அக்கால கிராமங்களின் இதயமாக இருந்தது. அதை அப்படியே இயல்புகெடாமல் தந்திருப்பது இயக்குனர் சுசீந்தரனின் உழைப்பும் சினிமா ஆர்வமும்தான். மழையே வராத அக்கிராமத்தில் அழகர்சாமியின் குதிரை காணாமல் போவதும் அதனால் ஏற்படும் அந்த கிராமத்து மக்களின் மாற்றங்களும் சிறப்பாக இருக்கின்றன. குதிரை காணாமல் போனது குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கும் காட்சி அப்பாவி கிராம மக்களின் வெள்ளந்தி மனங்களைச் சொல்லுகின்றது. கட்டை குதிரை காணாமல் போக ஒரு உண்மையானக் குதிரை வர அதை வைத்துக்கொண்டு மலையாள மாந்திரீகரும் போலீஸ்காரர் ஒருவரும்செய்யும் மோசடிகள் நகைச்சுவையானவை. பிரபு என்னும் சிறுவன் பாத்திரம் அருமையான சித்தரிப்பு. படத்தில் வரும் காதல் மிகவும் யதார்த்தமாக நகர்த்தப்பட்டிருப்பதும் மற்ற படங்களின் காதலைப் போலல்லாமல் உண்மையாக இருப்பதும் மிகவும் அருமை.

உயிர் உள்ள குதிரையின் சொந்தக்காரன் அழகர்சாமியின் பாத்திரம் அவருடைய திருமணம், அவர் நடிப்பு, அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கின்றது.

படத்தின் இன்னொரு சிறப்பு கதையோட்டத்தோடு அமைந்திருக்கும் நகைச்சுவை.

இப்படி எல்லாவற்றையும் சொல்லலாம்.

அழகர்சாமியின் குதிரை திரைப்படம் தமிழ்சினிமா நல்ல திசைநோக்கிப் பயணிக்க பயன்படும் கைக்காட்டி மரம்.

புரிந்துகொள்வார்களா தமிழ்சினிமாக்காரர்களும் சினிமா பார்வையாளர்களும்.

2 comments:

Karpaha Virutcham said...

cent percent correct Sir. So, am I.

Anonymous said...

naan partha,therintha manithargalidam,irunthu pondra samuga akkaraium,thelivaana arasiyal sinthanayum,iruppathu kandu viyappadaigiren.
ungal karuthukkal pala koonangalil niraya vendum.
vaazkiyil vidai theriyatha kelvigal pala ennidam unndu.
oru sirantha sinthanaiyaalar endra muraiyil ondrai ungalidam villakka keatkiren.
pl explain.

"maranam"