Monday, October 20, 2014

நானும் நீயும்


இருப்பதொன்றுமில்லை
மீந்திருக்கும் இந்தச் சாம்பலைத் தவிர
காலத்தின் கெட்டித்தட்டிய என் அந்தரங்கத்தின்மீது
உமிழப்பட்ட எச்சிலைத் துடைக்க
என் ஆயுதங்கள் அத்தனையையும் நான் பயன்படுத்துகிறேன்
நான் படித்த புத்தகங்களை உன் மேசைமீது வைக்கிறேன்
என் எழுத்துக்களை என் பாட்டியின் நிலக்கடலைப் பானையைப் போல்
உன் முன்னால் கவிழ்த்துக் கொட்டுகிறேன்
நாகரிகமடைந்த என் சொற்களை நான்
காற்றில் உலவ விடுகிறேன்
உன் செவிப்பறைகளை வந்தடைய
ஏழு கடல் ஏழு மலைகளைத் தாண்டி நான் எடுத்துவந்த
என் தாமரையைப் பூவை நான்
உனக்களிக்கிறேன்
சொற்களின் சூட்சமம்நிறைந்த என் கவிதைகளை
உனக்குத் தருகிறேன்
என் கதைகள் உன் கனத்த இருதயத்திற்குள் ஊசியைப் போல்
மெல்ல இறங்கும் என நம்பியே சொன்னேன்
மாறிப் போன என் வாழ்வின் பலமுறைமைகளை நான்
உனக்கு விளங்க நடந்தேன்
எல்லாவற்றையும் விட வேறெவரைவிடவும்
மிகவும் அதீத நட்போடு இருக்கவே நான்
உன்னை நோக்கி வருகிறேன்
எப்படி நான் வந்தாலும்
நீ நெருப்பாகவே வந்து என்குடிசைகளைக் கொளுத்திவிட்டே
செல்கிறாய்
இனி நான் என் செய்வது என் சகமனிதனே
சாம்பலிலிருந்து ஊற்றெடுத்துத் தண்ணீராய்ப் பிரவகிக்கிறேன்
வா இனி நீ நெருப்பாய்.


அக்.2014 புதிய கோடாங்கி