Monday, August 23, 2010

வனமழை

வனத்தின் கனியாகி சிவந்த அவள் உதடுகளில்
சொற்கள் பிரசவமாகி விழுகையில்
மழைத்துளிகளாகின்றன
வனம் பசுமையடைகின்றது
உயிர் ஊறும் வேரில் வாசம் கிளர்ந்து
இறுகுகின்றது வனம்
அடர்த்தியுடன் புதராகி அவள் மேலும் சிரிக்கின்றாள்
வானம் சிவக்கின்றது
கருத்த மேகங்கள் மேலும் மழையைத்தர
கானாறு புறப்படுகின்றது
சருகுகள் நிறந்த கானின் மேனி இப்போது
இசைக்கருவியாகி மீட்டுகின்றது
அவளின் சொற்களை பாடல்களாய்
இப்போது காட்டில் குயில்கள் தோன்றுகின்றன
செவிகள் முளைத்த மரங்கள்
இன்னும் தழைக்கின்றன
மேகங்கள் மரங்களில் குடியேறுகின்றன
இப்போது வேரில் மாரி வர
வனம் மழையானது

1 comment:

பூங்குழலி said...

சங்கிலி கோர்வை போல் ஒன்றோடொன்றாய் பிணைந்த காட்சிகள் .ரிஷானின் கவிதைகளையொத்த சாயலில் ...நன்றாக இருக்கிறது