Tuesday, November 4, 2014

ஞாயிறு போற்றுதும்

நன்றி: மனிதன்
அதனாலென்ன அதன் தீவிரம் அப்படி
உலர்ந்து சருகான ஒரு இலையின் வாழ்வைப் போல
உதிர்ந்துகிடக்கும் அதன் கதிர்களை நீங்கள் எடுத்துச்செல்ல
ஏதுவாய்ப் பெய்திருக்கிறது இந்த அமில மழை
குளிர்ந்துக் கருகியிருக்கும் ஒற்றைக் கதிரொன்றை
சிறுமி ஒருத்தி தன் வீட்டிற்கு எடுத்துச்செல்ல
ஒளியை உறிஞ்சி அது இருள் கக்கிய மாயத்தை
அவளால் சொல்ல முடியவில்லை
சாலையெங்கும் வீழ்ந்துக் கிடக்கும்
அந்த ஒளியற்றக் கதிர்களை மிதித்துக்கொண்டே
செல்கின்றன எல்லா வாகனங்களும்
செயற்கையாய் ஒளி செய்யத் தெரிந்த அவர்கள்
கருகிக் கிடக்கும் அதன் ஒளிக்கற்றைகள் குறித்த
அக்கறை ஏதுமற்றவர்களாகத்தான் இருந்தார்கள்
ஆயினும்
அவர்களால் நிச்சயமாய் செய்யமுடியாது
இப்போது ஒளிவீசும் ஒரு ஞாயிற்றைப் போல்.


பகலுயிர்

சிமிழுக்குள் நல்கமுடியாததாக இருக்கிறது
இன்றையப் பகல்
அதன் பிராயசித்தங்களை நீங்கள் அறிய முடியாமல் போனால்
தாவரங்களின் சிறுகொழுந்துகள்மீது ஊறும்
செந்நிற சிற்றெறும்புகள் பாதை மாறலாம்
பழுத்துத் தொங்கும் கனியின் சுவையறிய
துடிக்கும் பகல்பொழுதின் நாக்கு
அதை உங்களுக்காய் விட்டுக் கொடுக்க
நீங்கள் கல்லெறிகிறீர்கள்
பூங்காற்றின் வாசம் நிறைந்த இரவின் பிரதியாய்
நீங்கள் இந்தப் பகலை உணர்வீர்களானால்
அது உங்களை
தடைகளற்ற வெளியெங்கும் வியாபித்திருக்கும்
சமவெளிக்கு அழைத்துச் செல்லும்.
                                          

No comments: