Saturday, May 24, 2014

யாருமற்ற சொல் : யாருமற்றவர்களுக்கான யாழன் ஆதியின் சொற்கள்

                                                              - சு.மு.அகமது




சாதியத்தீ விட்டுச்சென்ற மிச்சங்கள் சாம்பலாய் நினைவுகளை விட்டகலாது குவிந்து கிடக்கிற தர்மபுரி மாவட்டம் நத்தம்,கொண்டம்பட்டி,அண்ணாநகர் குழந்தைகள் தொலைத்தது வீடுகளையும் புத்தகங்களையும் பொம்மைகளையும் மட்டுமல்ல.தங்களது குழந்தமையை இழந்து ‘மிரட்சி’யின் பிடியில் சிக்கி தவிப்பது தான் நிதர்சன உண்மை.ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வியக்கம் இவ்வாறாக தான் ஆதிக்கவர்க்கத்தினரால் கட்டமைக்கப்பட்டு கொண்டிருக்கிறது.அரச பயங்கரவாதமும் இதற்கு துணை நிற்பது தான் கேவலத்தின் உச்சம்.

‘என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்.என்று மடியும் இந்த அடிமையின் மோகம்’.இது நாடு ஆங்கிலேயனிடம் அடிமைப்பட்டு கிடக்கையில் எழும்பின ஆதங்கக்குரல் பாரதியிடமிருந்து. அடிமைதளையிலிருந்து மீண்டு வருகிற முயற்சிகள் பன்னெடுங்காலத்திற்கு முன்பேயே வார்த்தெடுக்கப்பட்டு சுதந்திர தாகத்தினை போக்கிடும் ஊற்றென பீறிட்டு எழுந்த வண்ணம் பல்கி பெருகி வருவது கண்கூடு.மகிழ்ச்சியின் பூரிப்பு ஒருபுறமும் நம்மை பரிதவிக்கவிட்டு இன்றும் தொடரும் சாதிய வன்கொடுமைகள் பாப்பாபட்டி,கீரிப்பட்டியாகவும் அண்மையில் தர்மபுரி நிகழ்வுகளாகவும் நம்மை பீடித்திருக்கிறது.இவற்றின் ஊடாகத்தான் நம்மால் பயணப்பட முடிகிறது.பயணப்படவும் வேண்டியுள்ளது.உத்தபுரங்கள் தகர்ந்தாலும் உள்ளத்துபுரங்கள் இன்னும் மாசடைந்து தான் கிடக்கிறது. வர்க்கப்பிரிவினையை வார்த்தெடுத்த ’மனு’ கூட நினைத்திருக்க வாய்ப்பில்லை.தன்னால் விதைக்கப்பட்ட ‘விஷவிதை’யை விருட்சமாக்கும் பணியை ஆதிக்கவர்க்கம் இவ்வளவு செம்மையாகவும் செழுமையாகவும் கைகூடிட செய்யுமென்று.

ஆரம்ப காலந்தொட்டே ஆதிக்கவர்க்கத்துக்கும் பார்ப்பனீயத்துக்கும் அறைகூவல் விடுக்கும் விதமாக ஒடுக்கப்பட்டவர்களின் உள்ளங்களில் விடுதலையின் வேட்கையை கிளர்ந்தெழ செய்ய பலரும் செயல்பட்டுள்ளனர்.சாஹூஜி மஹாராஜ்,பாபா பூலே,நாராயண குரு, அயோத்திதாசர்,அப்பாதுரை,புரட்சியாளர் அம்பேத்கர்,பகுத்தறிவு பகலவர் தந்தை பெரியார்,ரெட்டைமலை தாத்தா சீனிவாசன்,தந்தை சிவராஜ்,அன்னை மீனாம்பாள்,பள்ளிகொண்டான் தளபதி கிருஷ்ணசாமி,கான்ஷிராம் தொட்டு சமகாலத்தில் பூவை மூர்த்தியார், மாயாவதி அம்மையார், தொல். திருமாவளவன் என தொடரும் பயணத்தின் ஒரு புள்ளியாய் தான் நம் தோழர் யாழன் ஆதியை கண்ணுற முடிகிறது.காத்திரமான தனது படைப்புக்கள் மூலம் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாய் ஓங்கி முழக்கமிடும் கலகக்குரல் இவரது. தமிழீழம்,பெண்ணிய விடுதலை,தலித்தியம் என்கிற அரச பயங்கரவாதத்தினாலும் ஆதிக்கவர்க்கத்தினாலும் ஒடுக்கப்பட்டவர்களின் அவலமான வாழ்வியல் போன்றவற்றை நெடுங்காலமாய் பதிவு செய்து வருகிறார்.சிதறுண்டு கிடக்கிற தலித்திய சிந்தனைகளை பிரிந்து கிடக்கிற சொந்தங்களை ஒருங்கிணைக்கும் சமூகப்பணியையும் சிறப்பாய் செய்வதின் சூட்சுமம் அறிந்தவர் தோழர்.இவரது ஆறாவது கவிதைத்தொகுப்பு இந்நூல்.

‘யாருமற்ற சொல்’ என்பதன் உள்ளார்ந்த பொருள் “அசரீரி”.ஆனால் கலகத்தின் குரலை அசரீரி எனக்கொள்வது விடுதலை வேட்கையை கொச்சைப் படுத்தலுக்கு சமமாகிவிடக்கூடிய பேராபத்து உள்ளதால் கலகத்தின் குரலை ‘யாருமற்றவர்களின் சொல்’லாய் கொள்ள வேண்டுமென்பது என் கருத்து.

இத்தொகுப்பின் முதல் கவிதையான ‘மிருக வாசனை’யில் தமிழீழத்தில் நிகழ்தேறிய கொடுமைகளை,இனவொழிப்பினை பதிவு செய்கிறார்.‘சிவந்த நாவினை தோளில் போட்டுக்கொண்டு குருத்துக்களையும் நசுக்கியவண்ணம் ஆடைகளற்ற உடல்கள் மீது விந்து பீச்சும் கொடிய மிருக’மாய்,இனவாத அரச அடையாளமாய் வடித்து காண்பித்திருப்பது ராஜபக்‌ஷே தவிர்த்து வேறு யாராகவும் இருக்க முடியாது.நம்முள் கோபம் கொப்புளிக்கிறது.கொதியுறும் குருதியின் வெம்மையிலேயே இனவாதத்தை பொசுக்கும் வீரியம் பிறந்துவிடுகிறது.

‘கொலை மரம்’ எனும் கவிதையில் மனங்கிழிக்கும் முட்புதர் என்பதாய் தீண்டாமை வன்கொடுமைகளைப்பற்றி சொல்கிறார். முட்புதரை களைய முடியுமா என்ற கேள்விக்கு பதில் அதன் ஆழமான வேர் பாய்ச்சியுள்ள தன்மையை தர்மபுரியில் கோர தாண்டவமாடிய கோரமுகத்தைக்கொண்டு வெளிச்சமிடுகிறார்.

‘முன்னிலம்’ எனும் கவிதையினூடாக வாழ்விடம் குறித்தான இவரது அழகியல் பதிவு இன்று நமக்கு வாய்க்காத சுவரில் மட்டுமே தொங்கி காட்சியாகிப்போன ஓவியம் .

‘இழந்த கோடை’யில் நீரற்று வாழும் வாழ்க்கையயும் மின்சாரமில்லா இருளையும் வெளிச்சமிட்டுள்ளார்.கூடவே இளமையில் நாம் சுகித்த கோடை விளையாட்டுக்களை எவ்வாறு இன்றைய இளைய தலைமுறை தொலைத்துள்ளது என்பதை வீடியோ விளையாட்டினுள் அடக்குகிறார்.

‘இடிந்த கரை’ முக்கியமான பதிவு.மக்கள் நிரப்ப விடாமல் தடுக்கும் எரிபொருளை அவர்களின் வயிற்றில் நிரப்ப எத்தனிக்கும் ஆட்சியாளர்கள் குறித்த கவிதை.அதில் ’மக்களற்ற வீதியில் யாருக்கு விளக்கெரிக்க போகிறீர்கள் அணுவுலையில் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தில்’என்கிற இவரது கேள்வி நியாயமானது.

‘பாலி நதி’ பாழாய் போன பாலாறு குறித்தான பதிவு. ’தாயின் மார்பறுத்து தற்காலிக பசி நீக்கும் எங்கள் கைகளை கழுவ இன்னும் இருப்பதையெல்லாம் சுரக்கிறாய் நீ’ என்று நாம் எவ்வாறெல்லாம் சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தினாலும் இயற்கை அன்னை நம்மை அரவணைத்து செல்வதை பதிவு செய்கிறார்.

‘நிராகரித்தல்’-தூய சொல் குறித்தானது.தூய சொல் பெற வேண்டி உயிரைத் தர வேண்டுமென்று கேட்ட நண்பனுக்கு அறிவுரையானது இக்கவிதை.

தொகுப்பின் தலைப்புக்கான கவிதை ‘யாருமற்ற சொல்’. முன்னமேயே சொன்னது போல் இதை அசரீரி என்றால் கலகக்குரலின் வீரியம் சிதைந்திடுமோ என்கிற ஐயப்பாடு உள்ளதால் அதை தவிர்த்து யாருமேயில்லாத அநாதையான உணர்வை நாம்மால் உருவாக்கப்பட்டு, அதன் மீது தோய்த்து வைத்திருக்கும் ஒரு சொல்லை தேடுகிற போது அந்த சொல் ’அன்பு’ என்பதாய் தான் முன்னால் வந்து நிற்கிறது.மனிதன் தொலைத்த மனிதம் ,அன்பு செலுத்துதல் இதைத்தான் யாருமற்ற சொல்லாய் கொண்டேன்.இதை கடந்து கவிதையின் ஊடாக பயணிக்கிற போது புது விதமான சில சிந்தனைகளும் இயல்பாய் நம்மை தொற்றிக்கொள்கின்றன.‘புறாக்களின் கைகளைக் கொத்தி தின்றுவிட்டு உதிர்ந்துவிட்டன ஆலிவ்மர இலைகள்’என துவங்கும் கவிதையின் முதல் வரியே சமாதானம் செய்து வைக்க வேண்டிய ஐக்கிய நாடுகள் சபையே அரச பயங்கரவாதத்துக்கும் இன்வொழிப்புக்கும் துணைபோவதாய் ஒரு சித்திரம் குறியீடாய் பதியப்பட்டுள்ளது.தொடர்ந்து,’புராதனக் கோயில்களின் மேல் அமர்ந்த கருப்புப்பறவைகள் எச்சமிடுகின்றன சிதைந்த வெளிச்சுவர் மீதிருக்கும் சிற்பங்கள் மீது’என்கிறார்.கோயில்களில் வெளிச்சுவர் வரை மட்டுமே அனுமதிக்கப்படும் தாழ்த்தப்பட்டவர்களின் குறியீடாய் தான் கருப்புப்பறவையை பார்க்கத்தோன்றுகிறது.
தொகுப்பின் கடைசி பக்கத்து கவிதையாய்’உரத்து பேசுவோம் சாய்ரா’என்ற கவிதை,முதலில் தேற்றுதல் தொனியில் துவங்கி பின்பு ஆதங்கக்கேள்விகளோடு விரிவடைந்து நம்மை அதிர்ச்சியடைய செய்கிறது.
அந்த கவிதை இப்படியாக துவங்கி...

“சாய்ரா நீ ஒன்றும் அதிர்ச்சி அடையாதே
அவர்கள் அப்படித்தான்
கருத்த உன் தேகத்தை அவர்கள்
தேக்கி வைக்கப்பட்ட நீர் நிறைத்த அணை எனக்
கொள்கின்றனர்
கூர்த்த உன் விழிகள்
அவர்களின் உலோகமுள் கட்டிய தூண்டில்களில்
சிக்கித் தவிக்கும் மீன்கள்
நீ சேமித்து வைத்திருக்கும் உன் அன்பு நிறைந்த
குடுவைகளை அவர்கள் போட்டு உடைக்க
எப்போதும் தயாராக இருக்கின்றனர்
நீ பாதுகாக்கும் உன் அடிவயிற்றுப் பள்ளம்
அவர்களின் பதுங்குகுழியாகவேண்டும் என்றே
நினக்கிறார்கள்
மேலும்
நீ உழைக்கப்பயன்படுத்தும் கால்களை
அவர்கள் துய்க்க நினைக்கும்
கொடூரம் எப்போதும் நடந்துகொண்டேதான்
இருக்கும்

ஏன் சாய்ரா நாம் யாரும் உரத்துபேசவில்லை
யார் காரணம் பெண்ணை பெண்ணாகப்பார்க்காமல்
போனதற்கு
கால்தூக்கி ஆட முடியாத உமையவளை
ஒரு மீட்டர் தூரத்தில் ஒண்ணுக்கடிக்கும் சிவநாதன்
தோற்கடித்ததை
பெண்கோலத்தில் இருந்த கருந்திருமாலை
புணர ஓடி நிலத்தில் சிந்திய சிவசிந்தணுக்களை
ஆடைபறித்து அம்மணம் பார்த்த லீலாவினோதனை
ஆதிக்கசாதிக்காரன்களால்
வன்புணர்ந்து விசிறியடிக்கப்பட்ட தலித் பெண்களை
இவற்றையெல்லாம் பேசாமல் முடியாது
காலாதீதத்தின் ஆதியிலிருந்து வரும்
வன்புணர்வுகளை
இயலாதபோது குறிகளில் செருகப்படும்
குச்சிகளை உலோகத் தண்டுகளை”...
என்பதாய் முடிகிறது.இதில் கயர்லாஞ்சி கொடுமையையும் டில்லி அபினயாவிற்கு இழைக்கப்பட்ட வன்கொடுமைகளைப்பற்றி ‘சாய்ரா’என்ற பெண்ணிய குறியீட்டிடம் உரையாடல் நிகழ்த்துகிறார்.
இவ்வாறாக ’யாருமற்ற சொல்’ யாருமற்றவர்களின் சொல்லாக உங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.அன்பை பிரதானப்படுத்தும் காதல் கவிதைகள் சிலவும் உள்ளன.கொதித்து மேலெழும்பும் பால் மீது தண்ணீர் தெளித்து அடங்க வைப்பது போல் உதிரம் கொதியுறும் போது அதை அடக்க இக்கவிதைகள் துணைபுரிகின்றன.ஓட்டத்தில் தடையாய் அவை மாறாதிருக்கக் கடவ.

No comments: