Saturday, October 8, 2011

உயிர்க்கொடி




இன்னும் விடியவில்லை. இருளின் பிடியிலிருந்து விலகாமல் வானம் மூச்சுத் திணறிக்கொண்டிருந்தது. கிணற்றின் சுவரோரம் பல்லி ஒன்று கத்தியது. காற்று வீசியதால் கயிறு அசைந்து ராட்டிணத்திலிருந்து ஒலி எழும்பிக்கொண்டிருந்தது. இரவு குறித்த அச்சம் இன்னும் குறையவில்லை அமிர்தத்திற்கு. இலேசான வெளிச்சக்கோடுகள் வந்தால்கூட பரவாயில்லை என்று தோன்றியது அவளுக்கு மடியில் தூங்கிக்கொண்டிருந்த தன் ஒரு வருடக் குழந்தையை மேலும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அது தைரியம் கொடுப்பதாக உணர்ந்தாள்..

அமிர்தத்திற்கு இது புதிது. பிறந்த ஊரில் ஒரு பட்டாம்பூச்சியாய் பாடி திரிந்தவள் அமிர்தம். ஆம்பூருக்கு வந்து வாழ்க்கைப்பட்டு அவள் இப்படி துன்பப்படுவாள் என்று கனவில்கூட நினைத்திருக்கவில்லை. நேற்று இரவு மாமியாருடன் போட்ட சண்டையில் வீட்டிற்கு வெளியே துரத்தப்பட்டவள் இரவெல்லாம் இப்படி கிணற்றருகிலேயே உட்கார்ந்திருக்கின்றாள். அது தாழ்வாரம் இறக்கிக் கட்டப்பட்ட வீடு. மனையில் பாதிதான் வீடாக இருந்தது. மீதி இடத்தில் முருங்கை மரம் ஒன்றும் ஈசானி மூலையில் வேப்பமரமமும் கிணறும் இருந்தன. வலது ஓரத்தில் குளியலறை. கிணற்றண்டையில் பூசணிக் கொடி படர்ந்து மஞ்சள் நிற பூசணிப்பூக்களும் பூக்களுக்குப்பிறகான பிஞ்சுகளும் தெறித்திருந்தன. தன்னுடைய முந்தானையை எடுத்து தலையிலிருந்து கால்வரை இழுத்துப் போர்த்தி ஒரு கூடாரத்தைப் போலாக்கி கால்களை மடக்கி தொட்டிலாக்கி அதில் குழந்தையைப் படுக்கவைத்து கால்களை மெதுவாக ஆட்டி தூங்கப்பண்ணினாள். இந்த இரவு முழுக்க ஒரு பொட்டு தூக்கத்தைக்கூட அவள் தூங்கவில்லை. கண்கள் மூடும்போதெல்லாம் அவளுக்கு கோபமும் அழுகையும் பீறிட்டு வந்துக் கொண்டிருந்தது.

’இவ்ளோ தூரம் கண்காணாத எடத்துல குடுக்கணுமாப்பா?’ எனக் கேட்ட அம்மாவைப் பார்த்து ’டீச்சருக்கு வாத்தியாருதான் நல்லது. மிலிட்டரிகாரனுக்கா பொண்ண கொடுக்கமுடியும்?’ என்று சொன்ன சின்ன அண்ணன் நினைவுக்கு வந்தான். குழந்தையாய் இருக்கும்போது அவன்தான் தலைவாரி பவுடர் பூசி அலங்காரம் செய்து பள்ளிக்கு அனுப்புவான். அந்தக் கிராமத்தில் அப்போது கடைகள்கூட கிடையாது ஆனால் தினமும் பள்ளிக்குப் போகும்போது காசு தருவான். தான் வேலை பார்க்கும் கரும்புத் தோட்டத்திலிருந்து தேர்ந்தெடுத்த நல்ல சிவந்த கரும்பினை வெட்டி அதன் தோலை செதுக்கி முள்ளங்கி பெத்தையைப் போல கரும்பினை ஒரே அளவாக அரிந்து தன்னுடைய துண்டில் ஒரு முனையில் மூட்டையைப் போல் கட்டிக் கொண்டு தங்கச்சிக்குத் தருவான். இது அவனுடைய அன்றாட வேலை. இவள் அதை தன் பாவாடையில் வைத்துக் கொண்டு சாப்பிடத் தொடங்குவாள்.

அம்மாவின் விரல் அளவு கோடுகள் பதிந்திருக்கும் சாணம் மெழுகிய திண்ணையில் உட்கார்ந்து ஒவ்வொரு துண்டாய் கரும்பினை எடுத்து வாயில் போட சாறு தொண்டைக்குள் இறங்கும். மேலும் அதை மெல்லமெல்ல மீதிச்சாறு உதட்டு வழியாக வாய்க்கு வெளியே வரும். உதட்டைச் சுழித்து உள்ளங்கையில் துணையோடு கரும்புச்சாற்றை மீண்டும் வாய்க்குள் செலுத்த எழும் சப்தம் வித்தியாசமான ஒரு பறவை கத்துவதைப் போல இருக்கும். கரும்புச் சத்தைகளை மென்று அந்த இடத்திலேயே துப்பி இருப்பாள் அமிர்தம். சுற்றி எறும்புகள் மொய்த்துக் கொள்ளும். ‘ஏம்பாப்பா எதனா ஒரு எடத்துல போடக்கூடாது?’ எனக்கேட்டுக் கொண்டே குனிந்து அவற்றை எடுத்துக்கொண்டிருக்கும் அம்மாவின் இடுப்பைக் கிள்ளிவிட்டு ஓடிவிடுவாள் அமிர்தம். அவள்தான் அவ்வீட்டில் கடைக்குட்டி. ஒரே பெண்.

அமிர்தம் அந்தக் கிராமத்தின் செல்லப்பெண்ணாக வலம் வந்தவள். நெல்வயல்களும் கரும்புத்தோட்டங்களும் சூழ்ந்திருக்கும் அழகிய கிராமம் அது. அந்த ஊருக்குள் செல்லவேண்டுமென்றாலே ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரில் நடந்துதான் செல்லவேண்டும். பாலாற்றங்கரையில் அமைந்த வளமான ஊர் அது. வாலாஜா முக்கிய சாலையிலிருந்து கிளைபிரிந்து தெற்கு திசையில் திரும்பும் சாலையில் போனால் அணைக்கட்டு வரும் அவ்விடத்தில் பாலாறு இரு கிளைகளாகப் பிரிந்து செல்லும். அந்த இரண்டு ஆறுகளுக்கு இடையேயுள்ள கிராமங்களில் சாதம்பாக்கமும் ஒன்று. இருண்ட தென்னந்தோப்புகள் அதிகம். பறவைகளும் அவற்றின் சப்தங்களும் எப்போதும் அவ்வூரின் வெளியை நிறைத்துக் கொண்டேயிருக்கும்.

இரண்டு தெருக்கள் கொண்டது இவர்கள் வாழ்ந்த பகுதி. எல்லா வீடுகளின் பின்பகுதி காலி இடங்களில் உயர உயரமான கோணக்கா மரங்கள். அவர்கள் அதை கொர்கலிக்காய் மரம் என்று சொல்லுவார்கள். கோடை காலங்களில் உயரங்களில் சிவந்து வெடித்த கோணக்காய் சுளைகளைக் கொத்தித் தின்ன கிளிகள் வந்து கூடும். மக்களுக்கு விவசாயம்தான் முக்கியத் தொழில். சேடை அடிப்பது,ஏரோட்டுவது, நெல்லறுப்பது, கரும்பு வெட்டுவது, ஆலை ஆடுவது. வெல்லம் பிடிப்பது என்று அவர்கள் தொழில் விவசாயத்தையே சார்ந்ததாக இருக்கும். காலையிலும் மாலையிலும் மாடு ஓட்டிக்கொண்டு பால் சொசைட்டிக்குப் போய் பால் கறந்து கொடுத்துவிட்டு அப்படியே கால்வாயில் மாட்டைக் கழுவிக் கொண்டு பக்கத்தில் இருக்கும் கிணற்றில் இரண்டு குதிப்பான்களைப் போட்டு குளித்துவிட்டு வீடு வருவார்கள். கால்களில் படிந்திருக்கும் புழுதியில் அழுக்கிருக்காது. அதில் வண்டல்தன்மை படிந்திருக்கும்

சாத்தம்பாக்கத்திலிருந்து வடக்கு பக்க ஆற்றைக் கடந்து வரப்புகள்மீது நடந்து பக்கத்து ஊரான பூண்டியில் உள்ள பள்ளியில்தான் படித்தாள் அமிர்தம். பள்ளிக்கு போவது வருவதும் ஒரு கொண்டாட்டமாகவே அவர்களுக்கு அன்றாடம் இருக்கும். பூண்டி கோயிலில் அர்ச்சனையை முடித்துவிட்டு வரும் சுப்புரு அய்யர் இவர்கள் எதிரே வருகிறார்கள் என்பதற்காக வேறு வரப்பில் வருவார். ஆனால் அமிர்தமும் அவளுடன் பூண்டியில் படிக்கும் பையன்களும் விடமாட்டார்கள். சுப்புரு அய்யர் எந்த வரப்பில் வருவாரோ அந்த வரப்பிற்கு அப்படியே தாவிச் சென்றுவிடுவார்கள். தலையில் அடித்துக்கொண்டு வேறு வழியில்லாமல் கழனிச்சேற்றில் கால்கள் பதிய இறங்கி நடந்துச் செல்வார் சுப்புரு அய்யர்.

பத்தாம் வகுப்புவரை பூண்டியில்தான் படித்தாள் அமிர்தம். அவளுடைய அத்தை ஆசிரியப்பயிற்சி முடித்துவிட்டு சாத்தம்பாக்கத்திற்கே ஆசிரியையாக வேலைக்கு வந்தாள். இருவரும் நல்ல ஜோடி சேர்ந்தார்கள். புத்தகங்களைப் படிப்பதுதான் இருவரின் முக்கிய வேலை. அமிர்தத்தின் தாத்தா பாவலர் அந்தப்பகுதியில் அப்போது முக்கியமான சமூகத் தொண்டர். அதனால் இவர்களின் படிப்புக்கும் வாசிப்புக்கும் எந்த குந்தகமும் இல்லை.

அமிர்தம் அவளுடைய பத்தாம் வகுப்பு விடுமுறையில் நா.பார்த்தசாரதியின் குறிஞ்சிமலர்கள் நாவலைப் படித்துவிட்டு அவள் அண்ணனுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு பூரணி என்ற அந்நாவலில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் பெயரை வைத்தாள். சும்மா இருக்கும் நேரங்களில் அமிர்தமும் அவள் அத்தையும் ஊரில் இருக்கும் ரேடியோ ரூமுக்கு போய் பாடல்களை வைப்பார்கள். எந்த நேரத்தில் எந்த ஸ்டேஷன் எடுக்கும் என்று இவர்கள் இருவருக்கும்தான் தெரியும். சிவாஜி கணேசன் பாடல்கள் என்றால் அந்த ஊர் மக்களுக்கு கொள்ளைப்பிரியம். ’ஏம்பாப்பு! அண்ணன் பாட்டு எதனா வையேன்’ என்று இவளிடம்தான் கேட்பார்கள்.

பத்தாம் வகுப்புக்குப் பிறகு ராணிப்பேட்டையிலுள்ள தன்னுடைய இன்னொரு அத்தை வீட்டில் தங்கி ஆசிரியைப் பயிற்சியை இரண்டு ஆண்டுகள் படித்து முடித்துவிட்டு மீண்டும் தன் கிராமத்திற்கு வந்தாள் அமிர்தம். அனைவருக்கும் ஒரே ஆச்சரியம். ‘திவ்ளோண்டு புல்லுகிட்டி மாதிரி இருந்துக்குண்ணு இந்தப் புள்ள டீச்சாராயிடுச்சே!’ என்று புகழ்ந்து அமிர்தத்தின் அம்மாவிடமே சொல்லியிருக்கின்றார்கள். ஆறுமாதங்கள் கழித்து எந்தப்பள்ளியில் அமிர்தம் படித்தாளோ அந்தப்பள்ளிக்கு ஆசிரியையாக வேலை வந்திருந்தது. அவளுடைய அண்ணன்களுக்கு பெருமிதம். அவளுடைய பெரிய அண்ணன் அந்த கிராமத்தின் தலைவராக ஆகியிருந்தார். ’தலைவரூட்டுப் பொண்ணுக்கு வேலை வந்திருச்சி’ என்று அனைவரும் பேசினார்கள்.

அமிர்தம் முதல் சம்பளத்தை தன் அம்மாவிடம் கொடுக்க அதை அன்போடு வாங்கி அண்ணன்களிடத்தில் கொடுத்தாள் அம்மா. வீடே இன்னொரு சொர்கமாய் இருந்தது. அண்ணன் குழந்தைகள், வேலை, வீடு, அந்த அழகிய கிராமம் என்று இருந்தாள் அமிர்தம். அவளுக்கு என்று தனி மரியாதை கூடியிருந்தது.

அன்று பூண்டி பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள் அமிர்தம். ஊரின் எல்லையிலுள்ள அரசமரத்தடியில் வரும்போது அவளுடைய ஊர்க்கார தம்பிகள் ரச்சக்கல்மீது உட்கார்ந்திருந்தனர். ’யக்கா சீக்கிரமா ஊட்டண்ட போ; உன்ன பொண்ணு பாக்க சாயந்தரம் பஸ்சுக்கு வந்திருக்காங்க’ என்று ரேணு கத்தி சொன்னான். ரேணு எதிர்த்த வீட்டு பையன். அமிர்தத்திற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் சின்ன உடலில் சுற்றிக்கொண்டிருந்த புடவை அவிழ்வதைப் போல உணார்ந்தாள். அடிவயிற்றில் இலேசான கலக்கம். வீட்டிற்கு புறக்கடை வழியாகச் சென்றாள்.

‘எம்மா பொயக்கட வழியாகத்தான வந்த. போய் மூஞ்ச கழுவினு வா’, தங்கம் பெரியம்மா சொன்னபோது கோபமாக வந்தது. பெரிய அண்ணன் சீக்கிரமா வா என்று அதட்டிவிட்டு போனான்.

ஆம்பூருலர்ந்து வந்திருக்காங்க; மாப்பிள்ள வாத்தியாராம். நல்ல கருப்பா கட்டையாத்தான் இருக்கார் என்று வனிதா சொன்னபோது பார்க்க வேண்டும் என்று தோணவே இல்லை அமிர்தத்துக்கு. திருமணம் பேசி முடிக்கப்பட்டு கல்யாணநாள் குறித்தபிறகு கூட அவள் இன்னும் சரியாக மாப்பிள்ளையை பார்க்கவில்லை. சனிக்கிழமையானால் வாரந்தோறும் வீட்டுக்கு மாப்பிள்ளை வந்தாலும்கூட பேசியதில்லை அமிர்தம். தண்ணீரும் சாப்பாடும் தருவதோடு சரி.

மிக நேராக அவள் மாப்பிள்ளையை பார்த்தது காஞ்சிபுரத்தில்தான். புடவை எடுக்கவந்த கடையில் எதிரில் இருக்கும் கண்ணாடியில்தான் மாப்பிள்ளையை முழுமையாகப் பார்த்தாள் அமிர்தம். அவள் மனதுக்குள் எதுவுமே தோன்றவில்லை. அண்ணன்கள் சொல்லிவிட்டார்கள் என்பதோடு நின்றாள்.

கல்யாணம் ஆம்பூரில்தான் நடந்தது. அப்போதுதான் இவ்வளவு தூரம் ஆம்பூர் இருக்கும் என்று அவ்வூரிலிருந்து கல்யாணத்திற்கு வந்திருந்தவர்களுக்குத் தெரிந்தது. ஏன் அமிர்தத்துக்கே அப்போதுதான் தெரியும். ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமைகளில் நடக்கும் ஆசிரியர் கூட்டங்களுக்கு வாலாஜா வரை வருவாள். அவளுடைய தோழி கஸ்தூரியிடம் பேசுவதற்காகவே அங்கு வருவாள். இல்லை என்றால் வாலாஜாவிலுள்ள நூலகத்திற்கு வருவாள். அவ்வளவு தூரம்தான் அவள் அதிகம் பயணம் செய்த தூரம் அவள் திருமணத்திற்கு போகும்போதுதான். வாலாஜாவைத் தாண்டி வண்டி வேலூருக்கு வந்தது. இடையில் இருக்கும் ஆற்காடு, விஷாரம் ஆகிய ஊர்களில் எல்லாம் அவளுக்கு உறவினர்கள் இருக்கின்றார்கள். ஒரு நாளும் அவள் அவர்கள் வீட்டிற்குச் சென்றதில்லை. இப்போது அவர்கள் ஞாபகத்தில் வந்தார்கள். கல்யாணத்திற்கு வருவார்களா என்று மனதுக்குள் எண்ணத்தை ஓட்டினாள்.

வேலூர் வருவதற்கு ஒருமணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டிருந்தது. ஆம்பூர் இன்னும் ஒருமணி ஆகும் என்று வாத்துக்காரமூட்டு சுப்பிரமணி சொன்னான். எம்மாந்தூரம் என்று சலித்துக்கொண்டாள் அமிர்தத்தின் தாய். ஆம்பூர் வந்து எதோ ஒரு சந்தில் வளைந்து மீண்டும் நேராக போய் ஓர் அரசமரத்தடியில் வந்து வண்டி நின்றது. இரவாகி விட்டிருந்தது. நிலா அரசமரத்தின் இலைகளை ஜொலிக்க வைத்துக்கொண்டிருந்தது. அரச மரத்து இலைகள் இவர்கள் திருமணத்திற்கு ஜோடிக்கப்பட்ட தேர்போல அந்த இரவில் மின்னியது.

மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்திருந்தார்கள். மாரியம்மன் கோயில் மேடைமீது பாய்கள் விரிக்கப்பட்டு நடுவில் பெட்ரோமாகஸ் விளக்கு வைக்கப்பட்டிருந்தது. அது வெளிச்சத்தையும் சப்தத்தையும் ஒருசேர தந்துகொண்டிருந்தது. பெண்ணைக் கூட்டிக்கொண்டு போய் அங்கே உட்காரவைத்தார்கள்.மேடையை சுற்றி சின்ன பையன்களும் பெண்களும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். புதுப்பெண்ணைப் பார்க்கும் ஆசை அவர்களுக்கு. இந்தா, என்று வேகமாக ஒருகை பித்தளை வாழைக்காய் செம்பை நீட்டியது. பானகம். வெல்லம் வாழைப்பழம் போட்டுக் கரைத்தது. வாங்கிக் குடி என்று யாரோ இடிக்க அமிர்தம் வாங்கிக் குடித்தாள். எப்போதும் குவளையில் வாய் வைத்து அவள் குடித்ததில்லை. யாராவது அப்படி குடித்தாள் திட்டுவாள். ஆனால் இன்று தலைநிமிராமல் வாய் வைத்துக் குடித்தாள். வெல்லம் கரைந்து கரையாமல் இருந்த சின்ன சின்ன கரும்புத்துணுக்குகள் தொண்டையில் சிக்கியது. துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருந்த நேரத்தில்தான் ’அதான் ஒன் சின்ன நாத்தனா’ என்று காதில் சொன்னாள் அத்தை. அவளைப் பார்க்கக் கூட முடியவில்லை. வந்த மாதிரியே போய்விட்டிருந்தாள் அவள். பெண்ணை அழைத்துக் கொண்டு மாப்பிள்ளை வீட்டுக்கு உப்பில் கைவைக்க சென்றார்கள். எறவானம் சற்று இறக்கமாக இருப்பதால் குனிந்துதான் செல்லவேண்டும். அதை கவனிக்காத அமிர்தத்தின் சின்ன அண்ணன் வீட்டினுள் நுழையும்போது தலை இடித்துக் கொண்டான். ’வரும்போதே தல இடிக்குதே’ என்று சொல்லிக்கொண்டே உள்ளே போனான்.

அடுத்த நாள் காலையில் மணமகன் இல்லத்தில் திருமணம். ஊர் பெரியவர் ஆதிமூலமும் கிராமத்திலிருந்து வந்திருந்த பாவலரும் வாழ்த்துரை வழங்கி கல்யாணத்தை நடத்தி வைத்தார்கள்.

அதன்பிறகு ஒன்றரை வருடங்கள் ஒடிவிட்டிருந்தன. ஒரு கனவைப்போல இவற்றையெல்லாம் அந்த இரவு முழுதும் நினைத்திருந்தாள் அமிர்தம். இடையில் பூண்டியில் செய்த ஆசிரியை வேலையை வீட்டுக்காரர் சொன்னார் என்பதற்காக ராஜினாமா செய்து அது தெரிந்த சின்ன அண்ணன் அவளிடம் பேசாமலே இருந்துவிட்டார். பெரிய அண்ணன்தான் கல்யாணத்திற்குப் பிறகான சீர்களையெல்லாம் செய்தார்.

பொழுது விடிந்துவிட்டிருந்தது. அன்று வழக்கத்திற்கு மாறாக வானம் சற்று கருமையாக இருந்தது. பூசணிக்கொடியில் புதிய பூசணிப்பூக்கள் பூத்திருந்தன. பக்கத்து வீட்டில் சண்முகம் வெள்ளாவியைப் பற்றவைக்கும் சத்தம் கேட்க் ஆரம்பித்தது.

குழந்தைக்குப் பால் கொடுத்தாள் அமிர்தம். எதுவுமே தெரியாத அக்குழந்தை பாலை உள்ளிழுத்துக் குடித்துக்கொண்டிருந்தது. தன்னையறியாமலேயே அமிர்தத்தின் கண்களில் கண்ணீர் வழிய குழந்தையின் மார்பின்மீது சொட்டியது. கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள். உரலின் அருகில் குழந்தையைக் கிடத்திவிட்டு கிணற்றில் கயிற்றை விட்டு தண்ணீரை சேந்தி எடுத்து முகம் கழுவிக்கொண்டாள். புடவையை உதறி இறுக்கிக் கட்டிக்கொண்டு குழந்தையை தோளில்மேல் போட்டுக்கொண்டு நடந்தாள்.பேருந்து நிலையம் நோக்கி அவள் கால்கள் சென்றுக்கொண்டிருந்தன. அவள் மனம் எதையெதையோ எண்ணிக்கொண்டிருந்தது. போய் அம்மாவின் மடியில் படுத்துக்கொள்ள வேண்டும் கதறி அழ வேண்டும் என என்னென்னவோ அவளுக்குத் தோன்றியது.

வேலூர் பஸ் ஏறி உட்கார்ந்து டிக்கெட் எடுத்தாள். குழந்தை சிணுங்கினான். மீண்டும் குழந்தைக்கு பாலூட்டினாள். சன்னல் காற்றில் இலேசாக கண்ணய்ர்ந்தாள். வேலூரில் இறங்கினால் பதினோரு மணிக்கு அவள் கிராமத்துப் பேருந்து கிடைக்கும். நேராக சென்று விடலாம். இல்லையென்றால் அடுத்த பேருந்து ஒரு மணிக்குத்தான். அதில் போனால் மூன்று மணிக்குத்தான் போக முடியும் என்ற கணக்கு தூக்கத்தோடே அவளுள் ஓடிக்கொண்டிருந்தது. வேலூரில் பஸ் இறங்கியதும் அம்மாவுக்குப் பிடித்த கமலா பழமும் கருப்பு திராட்சையையும் வாங்கிக்கொண்டு காத்திருக்க சாத்தம்பாக்கம் பேருந்து வந்தது. ஏறி தனக்கு வாகான இடத்தில் அமர்ந்துகொண்டாள். காலையிலிருந்து எதையும் அவள் சாப்பிடவில்லை ஒரு தேநீர் குடித்தால் தேவலாம் போலிருந்தது. ஆனால் அது முடியாது அதற்குள் பேருந்தை எடுத்துவிட்டார்கள். பேருந்து கிளம்பி நிலையத்தை விட்டு வெளியேறி சி.எம்சி. சத்துவாச்சாரி என ஆட்களை ஏற்றிக்கொண்டே முக்கியச்சாலைக்கு வந்து வேகம் பிடித்தது. விஷாரம் வழியாக ஆற்காடு சென்று ராணிப்பேட்டையைக் கடந்து வாலாஜா பேருந்து நிலையத்தில் வந்து நின்றபோது அவளுக்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. யாராவது ஊர்க்காரர்கள் ஏறுவார்கள் என்று நம்பினாள். கூட்டம் முந்தித் தள்ளியது. அவள் ஊர் மொழிவழக்கு அவள் காதுகளுக்கு எட்டியது.

’அமிர்தம் இப்பத்தான் வர்றியா? வாத்தியாரு வர்ல? நேத்தே வருவேன்னு நினைச்சோம். நாங்காலயில பஸ்சுக்கு வந்து வாய இலைய மார்கெட்டுல போட்டுட்டு வர்றேன்.’ என்று நீளமாகப் பேசி முடித்தார் பின்னிருக்கையில் இடம்பிடித்திருந்த ஜெயப்பால். தொடர்ந்து அவரால் பேச முடியவில்லை. கூட்டம் இருவருக்கும் இடையே தடுப்புச்சுவர்போல நின்று விட்டிருந்தது. ’ஏன் இவரு நேத்தே வருவேன்னு நினச்சாரு’ என யோசித்தாள். குழந்தை அழவே அந்த சிந்தனை அவளுக்குள் அறுந்துபோனது.

பேருந்திலிருந்து இறங்கியதும் ஜெயப்பால் குழந்தையை வாங்கிக்கொண்டார். மெல்ல நடந்தார்கள். கால்களுக்கு இதமாக இருந்தது. எத்தனை முறை இந்தத்தெருவில் அவள் ஓடி விளையாடி இருக்கின்றாள்! நினைக்க மன்சில் இன்னும் துக்கம் அடைத்துக்கொண்டது. அவள் நினைத்த மாதிரியே ஊர் எல்லையில் உள்ள கால்வாயில் தண்ணீர் ஓடியது. அதன் மேல் மெல்லிய அலைகள் பரவியிருந்தன. அந்த நேரத்திலும் தவளைகள் கத்திக்கொண்டிருந்தன. வாத்துகளை கூட்டமாக ஓட்டிகொண்டு எதிரில் வந்தான் செம்பட்டை முடியுடன் ஒரு சிறுவன். அமிர்தத்தைப் பார்த்ததும் அவன் தலையை கீழே போட்டுக்கொண்டான். சின்ன சின்ன நீர்ப்பூச்சிகளை குறிவைத்து வாத்துகள் தண்ணீருக்குள் தலைகளை விட்டு தேடிக்கொண்டே நீந்திக்கொண்டிருந்தன. கால்வாயிலிருந்து ஏறும் இடத்தில் கால்களை அலசிக்கொண்டு ஏறினாள். குழந்தையை ஜெயப்பாலிடமிருந்து வாங்கிக்கொண்டாள்.

’ஏங்கொழந்த இப்பத்தான் வர்றீயா?’ என்று கேட்டாள் அன்னம் சித்தி. அன்னம் சித்தி கால்வாய்க்கரையில் மாரியம்மா கோயிலுக்குப் பக்கத்திலே இருப்பவள். யார் வருகிறார்கள் போகிறார்கள் என்பது அவளுக்கு அத்துப்படி. அவள் கண்களில் ஏதோ பரிதாபம் இழையோடியது. அதை அமிர்தம் கவனிக்கவில்லை. கோயிலைக் கடந்து ரேடியோரூமைத் தாண்டி நடந்தாள், சின்ன அண்ணன் எசேக்கியல் வீட்டு அகன்ற திண்ணையில் உட்கார்ந்திருந்தான். அவனைக் கட்டிக்கொண்டு அழ வேண்டும் போலிருந்தது. ஆனால் இருவரும் பார்வையத் தவிர்த்துக்கொண்டனர். பால் சொசைட்டிக்காகப் புதிதாக கட்டப்பட்டிருந்த கட்டிடத்தில் வெளியே நாய் ஒன்று சுற்றிக்கொண்டிருந்தது.

வீடு நெருங்க நெருங்க வேகமாக நடந்தாள். எல்லாவற்றையும் விட்டுவிட்டு அம்மாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஓவெனக் கதறி அழவேண்டும் என்று நினைத்தாள். வீட்டிற்குள் போகவும் அண்ணி வெளியே வரவும் சரியாக இருந்தது. கையில் வைத்திருந்த கஞ்சி குடிக்கும் கட்றாவை கீழே போட்டுவிட்டு குழந்தையை கையில் வாங்கிக்கொண்டு தேம்பிதேம்பி அண்ணி அழ ஒன்றுமே புரியவில்லை அமிர்தத்துக்கு.’பாப்பா அம்மாவுக்கு ரெண்டுநாளா ஒடம்பே சரியில்ல; எதுவுமே இறங்கல; கண்ணத் தொறக்கவே முடியல’ என்று சொல்லி ஓவென அழுகையைத் தொடர அம்மாவை கிடத்தி வைத்திருந்த வீட்டிற்குள் ஓடினாள்.

அம்மா படுக்க வைக்கப்பட்டிருந்தாள். முகம் வீங்கியிருந்தது. வீக்கத்திற்குள் கண்கள் புதைந்திருந்தன. கண்களை திறக்க முடியவில்லை. கைகால்களும் வீங்கியிருந்தன. கிட்டே போனாள் அமிர்தம். அவளால் இப்போது அழ முடியவில்லை. ’யம்மா எம்மா நா அமிர்தம் வந்திருக்கேன். குழந்தைய தூக்கிட்டு வந்திருக்கேன். கண்ண தொறந்து பாரு’ காதோரம் சென்று கெஞ்சினாள். அம்மாவின் கண்களிலிருந்து நீர் வடிந்து காதுகளைத் தொட்டது. கண்கள் மெல்ல மேலே வர ஆரம்பித்தன. ஏறக்குறைய மூன்று மணி ஆகியிருந்தது. ‘இந்தா இந்த பால கொஞ்சம் வுடுமா.ரெண்டு நாளா ஒண்ணுமே சாப்டல’ ஒரு சின்ன டம்ளரில் பாலையும் கரண்டியையும் கொண்டு வந்து கொடுத்தார்கள். அமிர்தம் ’ம்மா குடிம்மா’ என்று கூறிக்கொண்டே கரண்டியில் பாலை அள்ளி ஊட்டினாள். கொஞ்சம் கொஞ்சமாக பால் உள்ளே இறங்கியது. ’இந்தப் புள்ளைய பாக்கணுனுதான் இந்தம்மா நெனச்சி இப்டியிருக்கு’ என்று குழந்தையைக் காட்டினார்கள். அம்மா பெரிதும் முயற்சி எடுத்து கண்களைத் திறந்துப் பார்த்தாள். அண்ணிதான் அம்மாவை தலையைப் பிடித்து முதுகைத் தூக்கி சுவரில் சாய்த்து உட்கார வைத்தாள். குழந்தையை மடியில் கிடத்தினார்கள். குழந்தை பாட்டியின் மடிமீது படுத்துக்கொண்டு கைகளையும் காலையும் யாரோடோ சண்டை போடுவதைப் போல ஆட்டிக்கொண்டிருந்தான்.

அன்று மாலை ஆறு மணிக்கெல்லாம் அம்மாவின் வீக்கம் குறைந்திருந்தது. முகம் தெளிவாகியது. கம்மிய குரலில் அம்மா கேட்டாள் ‘யாமா வாத்தியார் வரல?’ ‘அவருக்கு எதோ முக்கியமான வேல இருக்குன்னு என்னய அனுப்புனாரு. நாளக்கி வராங்கலாம்’ என்று கையை அதிகமாக சைகை காட்டி பேசினாள் அமிர்தம். அம்மா புரிந்துகொண்டதைப் புன்னகையால் சொன்னாள்.

இரவு, பாயைப் போட்டு அம்மாவை படுக்க வைத்தாள் அமிர்தம். சூடாக கஞ்சி காய்ச்சி கொடுத்திருந்தாள். ’கொயந்தையை எம்பக்கத்துல போடு’ அம்மா கேட்டதும் குழந்தையைப் படுக்க வைத்தாள். தன்னுடைய தளர்ந்த கைகளால் குழந்தையை அணைத்துக் கொண்டு ஒரு குழந்தையைப் போல கண்களை மூடி தூங்க ஆரம்பித்தாள் அம்மா. ஆழமாக மூச்சை இழுத்துவிடும் சப்தம் வந்தது. அண்ணன் வந்து பார்த்தார். ‘நா பாத்துக்கிறேன் நீ போய் படு’ என அனுப்பிவிட்டு அம்மாவின் புடவைகளை விரித்துப்போட்டுவிட்டு படுத்தாள் அமிர்தம். தன்னுடைய எந்தப் பிரச்சினையும் அவள் நினைவில் இல்லை. தான் வந்ததும் அம்மா எழுந்து உட்கார்ந்தது, குழந்தையைப் பார்த்தது, பேசியது, சாப்பிட்டது எல்லாம் ஒரு நிறைவாக அவள் மனதுள் இருந்தது. அயர்ந்து தூங்கினாள்.

மறுநாள் காலை ஏழு மணி. குழந்தை சத்தமாக அழுதுகொண்டிருந்தான். அமிர்தம் ஆழ்ந்த உறக்கதில் இருக்கின்றாள். பெரிய அண்ணன் வந்து ‘பாப்பா! பாப்பா! கொயந்த அழுவுறான் பாரு’ சத்தமாக கத்தினார். ’இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்லை எழுப்பு அவங்களே’ இன்னும் சத்தம் அதிகமானது.

அமிர்தம் மெல்ல நகர்ந்து அம்மாவிடம் போனாள்.
‘யம்மா யம்மா எம்மா’
சலனமில்லை.
குழந்தைமேலிருந்த கையை தன் கையால் தூக்கினாள் அமிர்தம்.
அம்மாவின் கை சில்லிட்டிருந்தது.
இறுகிபோயிருந்தது.

2 comments:

Anonymous said...

யாழன் ஆதி சார் உண்மையிலேயே மிகவும் உருக்கமான கதை இது. கடைசி ஐந்து நிமிடங்கள் தான் கதையின் ஜீவன்.

கே.ஜே.அசோக்குமார் said...

வம்சி போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!